அறிக்கை: *தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் (NHM) ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதாரத் திட்டத்தில் ( National Health Mission) பணியாற்றும் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடி வரும் நிலையில் அவர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் தேசிய சுகாதாரத்திட்டத்தின் மருத்துவர் அலுவலர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படாத காரணத்தால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தேசிய சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல், அவர்களின் குடும்பங்களைக் கடுமையான வறுமையில் வாடும் அவலநிலைக்கு ஆளாக்கியுள்ளது பெருங்கொடுமையாகும்.
ஆகவே, தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் நீண்ட காலமாகப் போராடி வரும் கோரிக்கைகளான,
• 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
• 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் மாற்றுத் திறனாளி தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு போக்குவரத்துப்படி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும்.
• ஒவ்வொரு ஆண்டும் 10% வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
• அகவிலைப்படி, மற்றும் விழாக்காலச் சிறப்பூதியம், முன்பணம், காப்பீடு ஊக்கத்தொகை, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும்.
• ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதம் சார்ந்த விடுப்புகள், பணி மூப்புடன் கூடிய விருப்ப பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
• கூடுதல் பணி செய்யும் ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
• தேசிய சுகாதாரப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எவ்வித விளக்கமும், கேட்கப்படாமல் எவ்வித விசாரணையும் நடத்தப்படாமல் பணி நீக்கம் செய்யும் முறையை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட, கிராம சுகாதாரப் பணியாளர்களின் (NHM) அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
https://x.com/i/status/2021434444012454096
#GINGEE_ NTK #gingee-ntk #மக்களின்_மாநாடு2026 #கோனேரிக்கோன்_கோட்டை #செஞ்சிக்கோட்டை #SEEMAN4TN #NTK4TN
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி