திரைபாரதி
920 views
5 days ago
ஒருபுறமும் மறுபுறமும்: உலக அரசியலில் வடிவேலு டிப்ளமேசி! ஓரு பழைய திரைப்படக் காட்சியில் வில்லன் வடிவேலுவை பளார் என்று அறைந்து விடுவார். வடிவேலு பதிலுக்கு நேரடியாக வில்லனை அடிக்காமல், அருகில் நின்றிருக்கும் அப்பாவியை அடிப்பார். “ஏண்டா, நான் உன்ன அடிச்சனா? சிவனேன்னுதானே இருக்கேன்” என்று அப்பாவி மனதிற்குள் நினைத்துக் கொண்டு தலையைத் தடவியபடி நிற்பார். காட்சி இந்த மாதிரி போகும். உலக அரசியலும் இப்போது அப்படித்தான் போகிறது. USA மற்றும் இஸ்ரேல் ஒன்று சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் பதிலுக்கு வளைகுடா நாடுகளின் கன்னத்தில் அறைகிறது. “நாங்கள் பல தசாப்தங்களாக தடைகள், தடைச் சட்டங்கள், ரகசிய தாக்குதல்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு வந்தோம். நீங்கள் பக்கத்தில் நின்று தேநீர் அருந்திக்கொண்டு வேடிக்கை பார்த்தீர்கள். இப்போது சண்டை எப்படி இருக்கும் என்று ருசி பாருங்கள்!” என்ற மன நிலையோடு செயல்படுவது போலத் தெரிகிறது. வளைகுடா நாடுகளும் தங்கள் தவறை இப்போது புரிந்து கொள்வதற்கான நேரம் வந்து விட்டது. விண்ணை முட்டும் கட்டிடங்கள், செயற்கை தீவுகள், உலகின் உயரமான கோபுரங்கள அனைத்தும் இருந்தாலும், வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து சற்று மெத்தனமாக இருந்தார்களோ என்ற கேள்வி எழுகிறது. தேரை இழுத்து தெருவில் விட்டது யார்? தீப்பெட்டியை எடுத்து தந்தது யார்? பற்ற வைத்தது யார்? இப்போது அந்த தீ எங்கே பறக்கிறது என்று ஆச்சரியம்! இந்த போரில் அமெரிக்காவுக்கு என்ன இலாபம்? வியட்நாம் போரில் கிடைத்த அதே “அனுபவம்”, ஈராக் போரில் கிடைத்த அதே “பாடம்”, ஆப்கன் போரில் கிடைத்த அதே “வெகுமதி" —அதையே மீண்டும் அறுவடை செய்யலாம். உலகம் முழுவதும் ஆயுதங்கள் விற்கப்படும். பங்கு சந்தைகள் சில நாட்கள் குலுங்கும். பின்னர் பழையபடி. “மக்களே, இது உங்கள் பாதுகாப்புக்காக!” என்ற பிரசங்கத்துடன் வேறொரு நாட்டில் இதே நாடகம் அரங்கேறும். இதற்கிடையில், ரஷ்ய தலைவர் புடின் ஒரு பக்கம், சீன தலைவர் ஜி ஜின்பிங் மறுபக்கம். இவர்களை சர்வாதிகாரிகள் என்று குற்றம் சாட்டுவோர், தங்கள் வீட்டில் இருந்த படியே ஒரு சமூக ஊடகப் பதிவால் உலகத்தை நடுங்க வைக்கும் தலைவர்களை எப்படி வர்ணிப்பார்கள்? டிரம்ப் ஒரு பதிவை போடுகிறார்; உலகம் முழுக்க தூதரகங்கள் அவசரக் கூட்டம் நடத்துகின்றன. அதை விட மேலான கலைஞர் நேதன்யாகு. உள்நாட்டுக் கோபங்களை வெளிநாட்டு போரால் சமன் செய்யும் அரசியல் யோகாசனம் இருவருக்கும் கைவரப் பெற்றது! உண்மை என்னவென்றால், வளைகுடா நாடுகள் அழிந்துவிடப் போவதில்லை. ஆனால் அவற்றின் “மிடுக்கும் செருக்கும்” மங்கிவிடும். முதலீட்டாளர்கள் அமைதியான வர்த்தக இடங்களை நோக்கி நகர்ந்தால், துபாய் போன்ற நகரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். உலகம் பணத்தை விட பாதுகாப்பை முதலில் தேர்வு செய்யத் தொடங்கினால், விண்ணை முட்டிய கட்டிடங்களுக்கு தரைமட்ட உண்மைகள் நினைவூட்டப்படும். தங்களுடைய பாதுகாப்புக்காக அமெரிக்கா தளங்கள் அமைப்பதற்கு, அத்தனை தளங்கள் தேவையா என்றுகூட யோசிக்காமல், எல்லா வளைகுடா நாடுகளும் இடம் கொடுத்தன. இன்று அமெரிக்காவினால்தான் பிரச்சினையே. அமெரிக்காவிடம் இருந்து அதுதான் அவர்களுக்கு கிடைக்கும். இன்று நடுவில் நிற்பவர்கள் “நான் ஏன் இங்கே நின்றேன்?” என்று தலையைச் சொரிந்துக்கொள்ள வேண்டிய நிலை. உலக அரசியல் — ஒரு காமெடியான உலக சினிமா! #iran #middleeast #usa #woeldwar #trump #nethanyahu #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴