Diraviam Jayaraj
546 views
பைபிள் வாசகங்கள்: பிப்ரவரி 15 : முதல் வாசகம் இறைப் பற்றின்றி இருக்க, ஆண்டவர் யாருக்கும் கற்பிக்கவில்லை சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 15-20 நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல்மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப் பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததுமில்லை. ஆண்டவரின் அருள்வாக்கு. பிப்ரவரி 15 : பதிலுரைப் பாடல் திபா 119: 1-2. 4-5. 17-18. 33-34 (பல்லவி: 1b) பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். - பல்லவி 4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! - பல்லவி 17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். - பல்லவி 33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். - பல்லவி பிப்ரவரி 15 : இரண்டாம் வாசகம் உலகம் தோன்றும் முன்பே ஞானம் கடவுளின் திட்டத்தில் இருந்தது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-10 சகோதரர் சகோதரிகளே, முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெறவேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்துகொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “தம்மிடம் அன்புகொள்ளுகிறவர்களுக்கு என்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை." இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். ஆண்டவரின் அருள்வாக்கு. நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11: 25 அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. பிப்ரவரி 15 : நற்செய்தி வாசகம் இறைவாக்குகளை நிறைவேற்றுவதற்கே வந்தேன். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-37 அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.” “கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” “ ‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. ‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.” “மேலும், ‘ பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப் பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.” ஆண்டவரின் அருள்வாக்கு. ---------------------------------------------------------------------++ நீங்கள் சிறியவரா? பெரியவரா? பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறு (சீஞா 15: 15-20, 1 கொரி 2: 6-10, மத் 5: 17-37) நீங்கள் சிறியவரா? பெரியவரா? வாசித்து வாழ்வாக்கு: நீண்ட நாள் காதலர்களான ஜோவுக்கும் இவாஞ்ஜலினுக்குமிடையே திருமணம் நடந்தபோது, ஜோவின் மாமா அவனுக்கு ஒரு பரிசனை வழங்கினார். அதை அவன் மறுநாள் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே ஓர் அருமையான திருவிவிலியம் இருந்தது. உடனே அவன் மாமாவிற்கு, “நீங்கள் பரிசாக வழங்கிய திருவிவிலியம் அருமை” என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துவிட்டு, திருவிவிலியத்தை வீட்டில் இருந்த அலமாரியில் வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான். சில நாள்கள் கழித்து ஜோவின் மாமா அவனைத் அலைபேசியில் அழைத்து, “திருவிவிலியம் எப்படி இருக்கின்றது?” என்று கேட்டார். ஒருவினாடி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்த அவன், “திருவிவிலியம் அருமையாக இருக்கின்றது என்று அன்றைக்கே சொன்னேனே! மாமா” என்று சொல்லி நிலைமையைச் சமாளித்தான். இது போன்று இரண்டு, மூன்று முறை நடந்தது. ஒரு கட்டத்தில் அவன் தன் மாமாவின் ‘தொந்தரவு’ தாங்க முடியாமல், ‘திருவிவிலியத்தில் அப்படி என்ன இருக்கின்றது?’ என்று அதைப் புரட்டப் பார்க்கத் தொடங்கினான். அப்போதுதான் அவன் திருவிவிலியத்தின் ஒவ்வொரு புத்தகத்திற்கு முன்னும் நூறு ரூபாய் இருப்பதைக் கண்டு வியந்து போனான். ‘இதற்காகத் தான் திருவிவிலியம் எப்படி இருக்கின்றது என்று மாமா கேட்டுக்கொண்டே இருக்கின்றாரோ?’ என நினைத்துக்கொண்டு அவன், அவரை அலைபேசியில் அழைத்து நடந்ததைச் சொன்னான். அப்போது அவர் அவனிடம், “நீ திருவிவிலியத்தை ஆழமான வாசித்தால், இதைவிடவும் பெரிய செல்வம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வாய்” என்றார். ஆம், பலரும் இருந்த நிகழ்வில் வரும் ஜோவைப் போன்று திருவிவிலியத்தை வாசிக்காமல், பொத்தி வைத்திருக்கின்றார்கள். எப்போது அதை அவர்கள் வாசித்து வாழ்வாக்கின்றார்களோ, அப்போது அவர்கள் அதில் மிகப்பெரிய செல்வம் இருப்பதைக் கண்டு கொள்வார்கள். விண்ணரசில் பெரியவர்களாயும் இருப்பார்கள். பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் விண்ணரசில் பெரியவர்களாக இருக்க அழைப்புத் தருகின்றது. விண்ணரசில் பெரியவராக இருக்க நாம் என்ன செய்வது என்பது குறித்து நாம் சிந்திப்போம். நமக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகள்! முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு நிறைய வாய்ப்புகள் நமக்கு முன்பாகக் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்றுதான் நமக்குக் குழப்பமாக இருக்கின்றது. ஒன்று மட்டும் உறுதி நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ, அதுவே நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கின்றது. சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், “மனிதர் முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகின்றார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்” என்கிறது. இவ்வார்த்தைகள் இணைச்சட்ட நூல் 30: 15-20 இல் இடம்பெறுகின்ற இறைவார்த்தையை நிறையவே ஒத்திருக்கின்றன. அதே நேரத்தில் இவ்வார்த்தைகள், கடவுள் நமக்கு வாய்ப்புகளைக் கொடுத்தாலும், இதைத் தான் செய்யவேண்டும் என்று அவர் நமது சுதந்திரத்தில் தலையிடாமல், நமது விருப்பத்திற்கு விட்டுவிடுகின்றார் என்று செய்தியையும் நமக்கு உரக்கச் சொல்கின்றன. தம் உருவிலும் சாயலிலும் மனிதர்களைப் படைத்த கடவுள், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்; ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே” (தொநூ 2: 16, 17) என்று சொன்னாரே அன்றி, அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடவில்லை. மனிதர்கள் தங்கள் அழிவினைத் தாங்களே தேடிக்கொண்டார்கள். எனில், நமக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகளிலிருந்து நாம் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு அடங்கியிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடவேண்டும். ஆண்டவரின் திருச்சட்டப்படி நட! நாம் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு அமையும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் தூய ஆவியார் நமக்கு வெளிப்படுத்துகின்றார். இதைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறும்போது, “இதைக் (ஞானத்தை) கடவுள் தூய ஆவியார் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார்” என்கிறார். பவுலின் இவ்வார்த்தைகள், “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” (யோவா 16: 13) என்ற இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. மனிதர்கள் நாம் நமது முதற் பெற்றோரைப் போன்று என்ன முடிவினை எடுக்க வேண்டும் என்று தடுமாறக் கூடியவர்கள். இந்நிலையில் நாம் உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் தூண்டுதலின்படி நடந்தால் (கலா 5:16), நம்மால் கடவுளின் திருவுளத்தின்படி நடந்து, நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும். கடவுளின் திருவுளம் என்ன கேள்விக்கு இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 119 நமக்குப் பதில் தருகின்றது. திருவிவிலியத்தில் பெரிய அதிகாரம், நூற்று ஐம்பது திருப்பாடல்களில் எவரெஸ்ட் சிகரம் போன்று உயர்ந்து நிற்கும் திருப்பாடல் எனப் பல சிறப்புகளைக் கொண்ட திருப்பாடல் 119, “ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” என்கிறது. நாம் ஆண்டவரின் திருச்சட்டப்படி நடக்க வேண்டும். அதுவே ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. இயேசுவே நமக்கு முன்மாதிரி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒருமுறை பேசும்போது, “இன்றைக்கு மக்கள் போதிப்பவர்களை விடவும் போதனையின்படி வாழ்கின்றவர்களையே பெரிதும் விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டார். இது முற்றிலும் உண்மை. இயேசுவின் காலத்திலும் சரி, இன்றும் சரி போதிப்பதற்குப் பலர் இருக்கின்றார்கள். அதன்படி வாழ்வதற்குத்தான் ஆள்கள் குறைவு (மத் 23:3). நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன் என்று கூறுகின்றார். இயேசுவின்மீது பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வைத்த குற்றச்சாற்று, இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுகின்றார் என்பது. இயேசு யூத இரபிகள் கற்பித்து வந்த மூதாதையர் மரபைத் தான் மீறினாரே அன்றி, திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் மீறவில்லை. அவற்றை அழிக்கவும் இல்லை. மாறாக, அவற்றை நிறைவேற்றினார். மேலும் இயேசு தொடர்ந்து பேசும்போது, இவற்றைக் கடைப்பிடித்துக் கற்பிப்பவர் விண்ணரசில் பெரியவர் என்கிறார். இன்றைக்கு ஒருசிலர் போதிப்பது ஒன்றும், வாழ்வது வேறோன்றுமாய் இருப்பார்கள். ஆனால், இயேசு சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24:19). அதனால் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி கடவுளின் வார்த்தையின் படி நடந்து, விண்ணரசில் பெரியவர்களை இருப்போம். சிந்தனைக்கு: ‘திருவிவிலியத்தில் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம். அவரோ வாழ்வளிக்கும் வார்த்தையானவர்’ என்பார் ஆலிஸ்டர் பெக் என்ற அறிஞர். எனவே, நாம் வாழ்வளிக்கும் வார்த்தையைக் கொண்டிருக்கும் திருவிவிலியத்தை வார்த்தை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக விண்ணரசில் பெரியவர்களாகும் பேற்றினைப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்