ஸ்ரீ (969)
#பெருமாள் *திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம்...*
*34. இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே...*
திருக்கோவிலூர்...
ஒருநாள் இரவு நேரம் பெரும் மழை..
எம்பெருமானை சேவிக்க வந்த பொய்கையாழ்வார் மழைக்கு ஒதுங்க எண்ணினார். ஒரு மாளிகை திறந்திருந்தது. அம்மாளிகையின் கதவைத் தட்டினார்.
மிருகண்டு முனிவர் வந்தார்.
"மழை நிற்கும் வரை இங்கு தங்க இடம் உண்டா?" என்றார் பொய்கையாழ்வார்.
இந்த இடைக்கழிதான் உண்டு என்றபடியே ஒரு ரேழியைக் காட்டிவிட்டு போனார்.
சின்ன ரேழி வெளிச்சமும் இல்லை. ஒருவர் மட்டுமே படுக்க முடியும். சரி , அங்கேயே முடங்கிவிட்டு, காலையில் பெருமாளை சேவிக்கலாம் என எண்ணினார்.
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. பொய்கையாழ்வார் போய்க் கதவைத் திறந்தார். இப்போது பூதத்தாழ்வார்.
"மழைக்கு தங்க இடம் கிடைக்குமா"?
"சின்ன இடைக்கழி உள்ளது. ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். வாருங்கள்".
பூதத்தாழ்வார் உள்ளே போனார். மீண்டும் கதவு தட்டப்பட்டது.
பூதத்தாழ்வார் போய்க் கதவைத் திறந்தார். வெளியே பேயாழ்வார்.
"வெளியே மழை. தங்க இடம் உண்டா?'
"ஒரு இடைக்கழி இருக்கிறது. ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம். வாருங்கள்".
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாமல் இருட்டு.
அதே சமயத்தில், சந்நிதியில் வந்து நம்மைப் பாடி மங்களாசாசனம் செய்வார்கள் என எதிர்பார்த்த திருவிக்கிரமன், அவர்களது பாசுரங்களைக் கேட்க, அவர்கள் புலன்களுக்கு அகப்படாமல் இடைக்கழியில் வந்து நெருங்கி நின்றார் (இதனாலேயே.. இங்கு பெருமாளுக்கு நெருக்கி நின்ற பெருமாள் என்று பெயர்).
திடீரென ஏன் நெருக்கம். தங்கியுள்ள நான்காவது நபர் யார்? எனத் தெரியாது பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற, நெடிய உருவுடன் உலகளந்த பெருமாள் திருவிக்கிரமன் பேயாழ்வார் முன் எழுந்தருளினார்.
பின், அவர்கள் ஒவ்வொரு திவ்வியத்தலங்களுக்கும் சென்று ஆளுக்கு நூறு பாசுரம் மூலம் 300 திருவந்திகளைப் பாடி, முதலாழ்வார்கள் என்று சிறப்புப் பெற்றனர்.
அபப்டிப்படட் எம்பெருமானை இடைக்கழியில் இருட்டில் கண்ட பெருமை எனக்கு இல்லையே என்றாள் திருக்கோளூர்ப் பெண்.