Fahmi
600 views
4 days ago
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்-230* யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொன்றுவிட சதித்திட்டம் தீட்ட.. இந்தச் சதித்திட்டத்தை அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அறிவிக்கவே.. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர் முஹம்மது இப்னு மஸ்லமாவை நழீர் இனத்தவரிடம் அனுப்பி, *"மதீனாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்; எங்களுடன் மதீனாவில் நீங்கள் தங்கக் கூடாது; இனி மதீனாவில் வசிக்கக்கூடாது; பத்து நாட்கள் மட்டும் நான் உங்களுக்கு அவகாசம் தருகிறேன்; அதற்கு மேலும் யாராவது மதீனாவில் தங்கியிருந்தால் அவரது கழுத்தை வெட்டி விடுவேன்!"* என்று கூறும்படி சொன்னார்கள். மதீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றிருந்த யூதர்களுக்கு இப்னு உபையின், "உங்களது இல்லங்களிலிருந்து வெளியேறவேண்டாம்." என்ற தவறான ஆலோசனையால் துணிவு பிறந்து, "எதிர்த்து போரிடுவோம்" என்று யூதர்கள் முடிவு செய்தனர். உண்மையில் இந்நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகச் சிக்கலானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் மிகச் சிரமமான இக்காலகட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதும், சண்டை செய்வதும் ஆபத்தான முடிவை உண்டாக்கலாம்; மற்ற அரபுகள் ஒருபக்கம் தங்களைத் தாக்குகிறார்கள். மேலும், தங்களின் அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களையும் சதி செய்து கொன்று விடுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். இதுமட்டுமின்றி நழீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் ஓரளவுக்கு தேவையான வலிமையுடன் விளங்கியதால் அவர்கள் சரணடைவது அடிபணிவது சற்று கடினமான விஷயம்தான். அவர்களுடன் போரிடுவது பல இன்னல்களை சந்திக்கக் காரணமாகலாம். ஆயினும், *இதற்கெல்லாம் முஸ்லிம்கள் தளர்ந்து விடவில்லை.* பிஃரு மஊனாவின் நிகழ்ச்சியும் அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை அதிகம் தூண்டின. *தங்களின் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்படும் மோசடி மற்றும் வஞ்சகச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அதை செய்பவர்களுக்கும், செய்யத் தூண்டுபவர்களுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே கொல்லத் துணிந்த நழீர் இனத்தவரிடம் போர் செய்தே தீர வேண்டும்* என்று முடிவு செய்தனர். *அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் துணிந்தனர்.* நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹை இப்னு அக்தபின் பதில் கிடைத்தவுடன் தக்பீர் (அல்லாஹ் அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர் இனத்தவரிடம் சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படையின் கொடியை ஏந்தியிருக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படையுடன் புறப்பட்டுச் சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள். நழீர் இனத்தவர் தங்களின் கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்களை நோக்கி அம்புகளையும், கற்களையும் வீசி எறிந்து தாக்கினர். இதற்கு, அவர்களது தோட்டங்களும் பேரீத்த மரங்களும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. எனவே, அவர்களின் தோட்டங்களையும் பேரீத்த மரங்களையும் வெட்டி எரித்து விடும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றியே ஹஸ்ஸான் கூறுகிறார். *புவைராவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவது பனூ லுஐ கூட்டத் தலைவர்களுக்கு மிக எளிதாகிவிட்டது.* இவர்களின் பேரீத்த தோட்டத்தின் பெயர்தான் புவைரா என்பது. அல்லாஹ் இதுகுறித்தே இந்த வசனத்தை இறக்கினான். *"நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்."* (அல்குர்ஆன் 59:05) குரைளா யூதர்கள் உதவிக்கு முன் வரவில்லை. அவ்வாறே இவர்களின் நண்பர்கள் கத்ஃபான் கிளையைச் சேர்ந்தவர்களும் மற்றும் இப்னு உபையும் உதவிக்கு வராமல் விலகிக் கொண்டனர். எனவேதான் இவர்களின் இந்த நடத்தையை அல்லாஹ் ஒரு உவமானத்துடன் கூறுகிறான். *"(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: 'நீ (இறைவனை) நிராகரித்து விடு!' என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும், 'நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!' என்றான்."* (அல்குர்ஆன் 59:16) முற்றுகை ஆறு அல்லது பதினைந்து இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும் நடுக்கத்தையும் போட்டான். "ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்; நாங்கள் மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தூதனுப்பினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், *"உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகளையும் அழைத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்பிவிடுங்கள்; ஒட்டகங்கள் சுமக்கும் அளவுள்ள சாமான்களையும் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லலாம்; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது!"* என்று கூறினார்கள். இந்த நிபந்தனைக்கு அவர்கள் அடிபணிந்தனர். தங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்தனர். வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்து தங்களுடன் எடுத்து கொண்டனர். அவர்களில் சிலரோ ஆணிகளையும், முகட்டில் இருந்த பலகைகளையும், முளைக் கம்புகளையும் கூட தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பின்பு பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அறுநூறு ஒட்டகைகளில் புறப்பட்டனர். ஹை இப்னு அக்தப், ஸல்லாம் இப்னு அபூஹுகைக் போன்ற தலைவர்களும் மற்றும் பெரும்பாலான யூதர்களும் கைபர் சென்று தங்கினர். மற்றவர்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றனர். அவர்களில் இருவர் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தங்களது சொத்து செல்வங்களுடன் மதீனாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், அவர்களின் வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் ஐம்பது கவச ஆடைகளும், ஐம்பது தலைக் கவசங்களும், முன்னூற்றி நாற்பது வாட்களும் இருந்தன. இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் கனீமத்தாக அருளினான். அவர்களின் விருப்பத்திற்கேற்ப அதை செய்து கொள்ள முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு (மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறியவர்களுக்கு) மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பங்கு வைத்தார்கள். ஆனால், அன்ஸாரிகளில் ஏழையாக இருந்த அபூதுஜானா, ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் அதில் பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது குடும்பத்தினருக்கு ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின் பாதையில் போருக்குப் பயன்படுத்தினார்கள். இப்போர் குறித்த விவரங்களை முழுவதுமாக ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இறக்கினான். இந்த அத்தியாயத்தில், *யூதர்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்; நயவஞ்சகர்களின் கொள்கையும் பழக்கமும் எவ்வாறனது? போரின்றி கிடைக்கும் செல்வத்தின் சட்டம் என்ன?* போன்ற விவரங்கள் கூறப்பட்டன. மேலும் முஹாஜிர்கள், அன்ஸாரிகள் குறித்து இந்த அத்தியாயத்தில் புகழ்ந்து கூறியிருக்கிறான். *போர் நலன்களை கருத்தில் கொண்டு எதிரிகளுக்குச் சொந்தமான மரங்களை வெட்டுவதும், கொளுத்துவதும் சரியானதே; இது விஷமத்தனமாக ஆகாது!* என்று அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளான். அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறையச்சத்தைக் கடைபிடித்து, மறுமைக்கான நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இறுதியாக தனது புகழ்ச்சியைக் கூறி உயர்வுமிக்க தனது பெயர்களை விவரித்து அத்தியாயத்தை நிறைவு செய்கிறான். இந்த அத்தியாயத்தில் நழீர் இன யூதர்களை குறித்து முழுவதுமாக கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்தை நழீர் என்றும் கூறலாம் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், zஜாதுல் மஆது) இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் குறித்து கூறியதை நாம் இதுவரை பார்த்தோம். அபூதாவது, அப்துர் ரஜாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும் பல அறிஞர்கள் இச்சம்பவத்திற்க வேறு பல காரணங்களைக் கூறுகின்றனர். அதாவது... *(இன்ஷா அல்லாஹ் தொடரும்)*