Barakath Ali
747 views
சட்டமன்றத் தேர்தலை தீர்மானிக்க போகிற ராஜ்யசபா தேர்தல்! தேமுதிகவிற்கு 4-வது முறையாக பட்டை நாமமா... பட்டாபிஷேகமா? திமுகவின் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் வாசன் ஆகிய 6 பேர்களின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த 6 இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பே ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த ராஜ்யசபா தேர்தல்தான், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யப் போகிறது. அதிமுக சார்பில் இரண்டு பேரை ராஜ்யசபா வேட்பாளராக நிறுத்த முடியும். அதில் ஓர் இடம் ஏற்கெனவே ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் சீனியர் தம்பிதுரைக்கு தருவார்களா? என தெரியாது. அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி தரப்பு இடம்பெற்றிருக்கிறது. அன்புமணி தரப்புக்கு 17 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படலாம் என தகவல். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வன்னியர் உள் ஒதுக்கீட்டை அன்றைக்கு இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு வழங்கிய நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. "வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால், தொகுதிகளை குறைத்து கொண்டோம்" என அன்றைக்கு சொன்னார் அன்புமணி ராமதாஸ். 2026 தேர்தல் நேரத்தில் ராமதாஸ், அன்புமணி என பாமக இரு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் அதே 23 தொகுதிகள் அன்புமணிக்கு கிடைக்குமா? 2021 தேர்தலில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால், தொகுதிகளை குறைத்து கொண்டது போல பாமக பிளவுபட்டிருக்கும் சூழலில் தொகுதிகளை அன்புமணி குறைத்து கொண்டாரா? என்பது விரைவில் தெரிய வரும். அன்புமணி தரப்புக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டு தர வாய்ப்பு இருக்கிறது. கடந்த காலத்தில் ராஜ்யசபாவுக்கு போவதில் வருகைப்பதிவு மிக குறைவாக இருந்தவர் அன்புமணி. பாஜகவின் சட்டங்களுக்கு எல்லாம் ஆதரித்தும் அல்லது ஓட்டெடுப்பில் பங்கெடுக்காமலும் கடந்த காலங்களில் மறைமுக ஆதரவு அளித்தவர் அன்புமணி. பார்லிமெண்டுக்கு போய் என்ன கிழிக்க போகிறோம்? என்பது பற்றியெல்லாம் இப்போது கவலையில்லை. யார் உண்மையான பாமக? என்ற போட்டி அன்புமனிக்கும் ராமதாஸுக்கும் இடையே நடக்கிறது. அதில் ராஜ்யசபா சீட் அன்புமணிக்கு முக்கியம் என்பதால், அதை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அதிமுக கூட்டணியில் அன்புமனி இணைந்திருப்பார். அதன்படி அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் போக இன்னொரு சீட்டை தேமுதிகவுக்கு அதிமுக தந்தாக வேண்டும். ’அது என்ன தந்தாக வேண்டும் என்ற கட்டாயம்’ என உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. ’2026-ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும்’ என 2025-ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்ற போது 2025 ஜூன் 1-ஆம் தேதி அதிமுக அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு அதிமுக இப்படி அறிக்கையாக வெளியிட்டதில்லை. அதன்படி இன்னொரு ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு அதிமுக கட்டாயம் தர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் மட்டுமே அந்த ராஜ்யசபா சீட்டை அதிமுக தரக் கூடும். தராமலும் போகலாம். ’’கூட்டணியில் சேருங்கள். அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு தருகிறோம்’’ என தேமுதிகவுக்கு அதிமுக பட்டை நாமம் போட முடியாது. காரணம் ஏற்கெனவே தேமுதிகவிற்கு மூன்று முறை பட்டை நாமம் போட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. கடந்த காலத்தில் அதிமுக எம்.எல்.ஏ-கள் தயவில் பாமகவின் அன்புமணியும் தமாகாவின் ஜி.கே.வாசனும் ராஜ்யசபா எம்.பி-கள் ஆனது போல, தேமுதிகவின் பிரேமலதா ஏன் ராஜ்யசபா எம்.பி ஆக முடியவில்லை? அன்புமணிக்கும் ஜி.கே.வாசனுக்கும் சீட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவிற்கு மட்டும் ஏன் தரவில்லை? ''அம்மா வழியில் நடக்கும் கழகம்'' என எடப்பாடி பழனிசாமி அடிக்கடி தாரக மந்திரத்தை உச்சரிப்பார். ஆனால், ஜெயலலிதாவின் அடிசுவற்றை அப்படியே பின்பற்ற மாட்டார். 2019-ல் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை பழனிசாமி தந்ததே அதற்குச் சாட்சி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. பாமக-வுக்கு 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்து. ஓர் இடத்தில்தான் வெற்றி பெற்றது. ஓபிஎஸ் மகன் மட்டுமே வென்றார். பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தபோதும் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என அதிமுகவோடு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அன்புமணி ராஜ்யசபா எம்.பி ஆனார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த இரண்டே மாதத்தில் ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. அன்றைக்குச் சட்டமன்றத்தில் பாமகவுக்கு ஓர் எம்.எல்.ஏ கூட இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ-கள் ஆதரவோடுதான் அன்புமணி ராஜ்யசபா எம்.பி ஆனார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் அன்புமணி தோற்று, பிறகு அதிமுக தயவில் ராஜ்யசபா எம்.பி-யாக கொள்ளைப்புற வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அப்போது அ.தி.மு.க. பா.ம.க-வோடு கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டை எடப்பாடி பழனிசாமி தரவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாமகவுக்குத் தொகுதி ஒதுக்கீடு 7. அதே போலக் கூடுதலாக ராஜ்யசபா சீட் ஒதுக்கீடும் ஒன்றுதான். ஆனால், 2009-ல் ஜெயலலிதா ஒப்பந்தத்தை மீறினார். எடப்பாடி பழனிசாமியோ 2019-ல் நிறைவேற்றினார். அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை ஜெயலலிதா தடுத்தார். எடப்பாடி பழனிசாமியோ கொடுத்தார். அன்புமணி ராஜ்யசபா எம்.பி ஆன அடுத்த ஆண்டே அதாவது 2020-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தேமுதிகவுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் தாரை வார்த்தார் எடப்பாடி பழனிசாமி. 2020-ல் இரண்டாவது முறையாக தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டை பழனிசாமி தரவில்லை. 2019-ல், ஏமாற்றம். அடுத்து 2020-ல் ஏமாற்றம். 2025-லும் ஏமாற்றம் என மூன்று முறையும் இலவு காத்த கிளியாக போனது தேமுதிக. அதற்குக் காரணம் சரிந்து போன தேமுதிகவின் வாக்கு வங்கிதான். வாசனின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவதால் அவருக்கு சீட்டை அதிமுக ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். காரணம் அவர் மோடியின் செல்லப்பிள்ளை. அப்படி ஒதுக்கப்பட்டால் தேமுதிகவிற்கு நாலாவது முறையாக பழனிசாமி கையை விரிப்பார். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதிமுகவினர் யாருக்கும் ராஜ்யசபா சீட் தர மாட்டார்கள் போல. ராஜ்ய சபா எம்.பி. கனவில் இருக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் யாராவது இருந்தால் துடைத்தெறிந்துவிட்டு திமுக அரசின் ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்திற்கு ஐடியா கொடுக்கலாம். - எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி படக் குறிப்பு: 2025-ஆம் ஆண்டு தேமுதிகவிற்கு அதிமுக கொடுத்த ராஜ்யசபா சீட் வாக்குறுதி. #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴