#thaypoosa Valippaadu. 2026 வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய நேரமும், வழிபடும் முறையும்_*
* 🛕🛕🛕முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், வேண்டிய வரங்களை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தைப்பூச திருநாள் கருதப்படுகிறது. இந்த நாளில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே விரதம் இருந்து, முருகனை வழிபாடு செய்யலாம். வீட்டில் எந்த நேரத்தில், எந்த முறையில் தைப்பூச வழிபாட்டினை செய்யலாம் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.
> முருக வழிபாடு என்பது வாழ்க்கையில் வெற்றியை தரக் கூடிய வழிபாடு. உலகத்தை காப்பதற்காகவும், நன்மையை நிலை நாட்டுவதற்காகவும் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்கும் முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேலை பெற்ற திருநாளே தைப்பூசம் ஆகும். இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 01ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் எந்த நேரத்தில், எப்படி முருகப் பெருமானை வழிபட வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெற்றலாம் என தெரிந்து கொள்ளலாம்.
தை மாத வளர்பிறையில் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்த நாளையே தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். அந்த வகையில் பிப்ரவரி 01ம் தேதி அன்று காலை 04.41 மணி துவங்கி, பிப்ரவரி 02ம் தேதி அன்று காலை 04.43 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதே போல் அன்றைய தினம் அதிகாலை 01.54 மணி துவங்கி, பிப்ரவரி 02ம் தேதி அதிகாலை 01.01 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. பிப்ரவரி 01ம் தேதியன்று நாள் முழுவதும் பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் உள்ளதால் அன்று முழுவதுமே தைப்பூச வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாளாகும்.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகப் பெருமானின் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, விரதத்தை துவக்கலாம். முடிந்தவரை முருகனின் திருநாமங்களை சொல்லியபடி இருப்பதும், முருகப் பெருமானின் சிந்தனையுடனேயே இருப்பதும் நல்லது. வீட்டில் முருகன் படம், முருகன் சிலை, வேல் இருந்தால் அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு, மலர்கள் சாற்றி அலங்கார செய்ய வேண்டும். முடிந்தால் வேலுக்கு அபிஷேகம் செய்து, வேல் பூஜை செய்வது சிறப்பு. முருகப் பெருமானுக்கு செவ்வரளி, செவ்வந்தி, துளசி ஆகியவை படைத்து வழிபடுவது நல்லது. நைய்வேத்தியமாக தேன், திணை மாவு, தயிர் சாதம் ஆகியவை படைத்து வழிபடலாம். அருகில் உள்ள முருகன் கோவிலில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அதிகம் முடியவில்லை என்றாலும் பால் அல்லது சந்தனம் மட்டுமாவது வாங்கிக் கொடுக்கலாம்.
அன்றைய தினம் முருகன் படத்திற்கு முன் ஷட்கோண கோலமிட்டு, அதன் மீது ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடலாம். வெற்றிலை தீபமும் ஏற்றலாம். வேல் பூஜை செய்து, வேல்மாறல் மகா மந்திரத்தை படிக்கலாம். செவ்வரளி மலர்களைக் கொண்டு, 108 முறை "ஓம் சரவண பவாய நமக" என முருகப் பெருமானுக்கும், வேலுக்கும் அர்ச்சனை செய்து வழிபடலாம். ஏதாவது இரண்டு ஜீவராசிகளுக்காவது அன்னதானம் அளிப்பது சிறப்பு. அன்றைய தினம் மாலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். மலைக் கோவில் இருந்தால் கிரிவலம் செல்வது சிறப்பு.
குழந்தை பாக்கியம் பெற, திருமண தடை விலக, நோய் நீங்க, பகை விலக, வியாபாரம் செழிக்க, கடன் நீங்க, குழந்தைகள் கல்வியில் சிறக்க என என்ன வேண்டுதல் இருந்தாலும் அதை மனதார முருகனிடம் பிரார்த்தனை செய்து, தைப்பூச விரதம் இருந்து, வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ மாலையில் முருகனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்யலாம்.
🍁🍁🍁