#செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 95% பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கல் – அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் 95 சதவிகிதம் வரை வழங்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஊத்தங்கரை நியாயவிலைக் கடை எண்–2 இல் உள்ள 935 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் புதிய வீட்டு வசதி வாரியம் நியாயவிலைக் கடையில் உள்ள 1,566 குடும்ப அட்டைதாரர்களுக்கும், குந்தாரப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் குந்தாரப்பள்ளி நியாயவிலைக் கடையில் உள்ள 682 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 3,183 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கத் தொகை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 புதிய முழுநேர நியாயவிலைக் கடைகள், 131 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 74 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் முழுநேர கடைகளாக மாற்றப்பட்டு, மொத்தம் 221 நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், 63,954 புதிய குடும்ப அட்டைகள் புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.கோபிநாத், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், ரஜினிசெல்வம், எக்கூர் செல்வம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி, ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக், லயோலா ராஜசேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.