#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்*
"ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது".
(திருப்பாடல் 130: 1-6)
எல்லாம் வல்ல எம் இறைவா! உம்முடைய திருநாமம் பரிசுத்தம் என போற்றுகின்றேன். என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். கடந்த இரவு முழுவதும் பாதுகாத்த, உம் ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆண்டவரே! ஆவலுடன் நான் உமக்காக காத்திருக்கின்றேன். என் வாழ்வின் இருளை அகற்றி, நீர் ஒளி ஏற்றுவீர் என, என் நெஞ்சம் உமக்காக காத்திருக்கின்றது.
இறைவா! எவரிடமெல்லாம் நான் பிணக்கு கொண்டிருந்தேனோ, அதற்குக் காரணமான நிகழ்வுகளை, வார்த்தைகளை நான் மன்னித்து, மறந்து போகும்படி என் மனக்காயங்களை அகற்றியருளும். அவர்களோடு நான் என்றும் நல்லுறவில் இருக்க, நீரே அருள் புரிவீராக.
ஏனெனில், "உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்" என நீர் கூறி இருக்கின்றீர்.
சினம் கொண்டு, பிறரைக் காயப்படுத்தும் வார்த்தைகள் எதையும், என் வாய் ஒருபோதும் உதிர்காமல் இருப்பதாக. ஏனெனில், "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்;" என்றும் நீர் கூறி இருக்கின்றீர்.
இந்த நாள் முழுவதும், உம்முடைய மகிமையை காணும்படி செய்வீராக. உம்மோடு உமக்காக வாழவும், என் வாழ்விலும், தாழ்விலும் உம்மை மட்டுமே அன்புசெய்ய அருள் புரியும்.
இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணகத்தில் இருக்கிற... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*