mariappan kumaravel
543 views
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 தானம் செய்வதற்காகவே சம்பாதிக்கும் சைதை துரைசாமி! அவரின் 74 வது பிறந்தநாள் இன்று (16.02.1951) . சைதை சா. துரைசாமி 1984ஆம் ஆண்டு சைதாப்பேட்டைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். MGR மறைவிற்குப் பிறகு அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மனிதநேயம் என்ற மையத்தின் நிறுவனரும், தலைவருமாக உள்ளார். இந்த அமைப்பு இந்திய குடிசார் பணிகளுக்கான நடுவண் தேர்வாணைய தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில், முன்னாள் துணை முதல் அமைச்சரும் திமுகவின் வேட்பாளருமான மு.க.ஸ்டாலினிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டின் உள்ளாட்சி தேர்தல்களில் சென்னை மாநகராட்சி முதல் அதிமுக மேயர் என்ற பெருமை பெற்றுள்ளார். ..தனது ஒரே ஆருயிர் மகன் வெற்றியை 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இயற்கையிடம் பறிகொடுத்து விட்டு நிர்க்கதியாக கலங்கி நிற்கிறார் சைதை துரைசாமி. கரூரை பூர்விகமாக கொண்ட இவர் சென்னையில் செட்டிலாகி 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. *அடுப்பில் உலையை வைத்துவிட்டு அரிசிக்கு பணம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையோடு சைதை துரைசாமியை பார்க்கச் செல்லலாம் என அவரை பற்றி நன்கறிந்தவர்கள் கூறுவது உண்டு. அந்தளவுக்கு தான தர்மங்களில் அதீத ஈடுபாடு காட்டுபவர் சைதை துரைசாமி. அப்படிப்பட்டவருக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும் என அவரை அறிந்தவர்கள் மட்டுமின்றி அவரை பற்றி கேள்விபட்டவர்களும் ஆதங்கப்படும் நிலையை காண முடிகிறது. 1984ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சைதை துரைசாமி வெற்றிபெற்றதும், தனது தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக டைப் ரைட்டிங், இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினரும் செய்யாத காரியம் இது. அதேபோல் தனிப்பட்ட முறையிலும் தன்னை நாடி வருவோருக்கு அவர்களின் தேவையறிந்து உதவும் எண்ணவோட்டம் கொண்டவர். சென்னை வேளச்சேரி பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ள சைதை துரைசாமி ஏழை எளிய மக்கள் இலவசமாக தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து வருகிறார். அவர்களிடம் 1ரூபாய் கூட வாடகை வாங்குவதில்லை. எம்.ஜி.ஆரின். பக்தர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவர் மீது மட்டற்ற மதிப்பு மரியாதை வைத்திருப்பதாலோ என்னவோ அவர் வழிமுறையை அப்படியே பின்பற்றி வருகிறார் சைதை துரைசாமி. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தனது மனித நேய அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல எல்லாவற்றுக்கும் மேலாக தனது பயிற்சி மையத்தில் படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அறக்கட்டளை மூலம் செய்து கொடுக்கிறார் சைதை துரைசாமி. இதில் குறிப்பிட்ட வேண்டிய விவகாரம் என்னவென்றால், உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உதவாமல் இறந்தவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், இலவச அமரர் ஊர்தி சேவையையும், இறந்தவர் உடலை பாதுகாக்கும் 10 ப்ரீசர் பாக்ஸ்களை இலவச சேவையாகவும் தனது அறக்கட்டளை மூலம் சைதை துரைசாமி வழங்கி வருவது தான். இப்படி சைதை துரைசாமியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். தனது ஒரே மகன் வெற்றியை மரணம் தழுவிக்கொண்ட சூழலிலும் நிலை குலையாமல் அவர் அளித்த பேட்டி முக்கியமானது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களையும் அரசின் உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டும் என்பதை தனது மகனின் மரணத்தில் உறுதியேற்பதாக சூளுரைத்துள்ளார். 1984ல் சட்டமன்ற உறுப்பினரானதற்கு பின்னர் 2011-2016 காலக்கட்டத்தில் சைதை துரைசாமி சென்னை மாநகர மேயராக இருந்தார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு முதலே தீவிர அரசியலில் இருந்து சைதை துரைசாமி மெல்ல ஒதுங்கிக்கொண்டார். இப்போது முழு நேரமாக தனது அறக்கட்டளை பணிகளை மட்டுமே கவனித்து வருகிறார்.