பைபிள் வாசகங்கள்:
பிப்ரவரி 18 : திருநீற்றுப் புதன்
முதல் வாசகம்
நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18
ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?
சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! ‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?
அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பிப்ரவரி 18 : பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி
3
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4a
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி
12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி
பிப்ரவரி 18 : இரண்டாம் வாசகம்
கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20- 6: 2
சகோதரர் சகோதரிகளே,
நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 95: 8a, 7b
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.
பிப்ரவரி 18 : நற்செய்தி வாசகம்
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
--------------------------------------------------------------------------
மறையுரைச் சிந்தனை
திருநீற்றுப் புதன்
I யோவேல் 2: 12-18
II 2 கொரிந்தியர் 5: 20-6:2
III மத்தேயு 6: 1-6, 16-18
இன்று அன்னையாம் திரு அவை சாம்பல் புதனை/விபூதிப் புதனை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. கடவுளோடு ஒப்புரவாகவும், அதன்வழியாக நம்மோடு வாழக்கூடிய உடன் சகோதர, சகோதரிகளோடு ஒப்புரவாகவும் இறைவனால்/ திருச்சபையால் தரப்பட்ட அருளின் காலம்தான் இந்த தவக்காலம். இத்தவக்காலத்தில் நாம் இறைவனோடும், நம் அயலாரோடும் எப்படியெல்லாம் ஒப்புரவாகலாம் என்பதை இன்றைய வாசகங்களின் வழியாகச் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்.. நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்று. இங்கே ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள் என்ற வார்த்தையானது திரும்பத் திரும்ப வருவதை நாம் நமது கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதேபோன்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதாவது கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:20 ல் பவுலடியார் கூறுவார், “ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்று. எனவே நாம் ஆண்டவராகிய கடவுளிடம் திரும்பி வந்து, அவரோடு ஒப்புரவாகவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது.
கடவுளோடு எப்படி ஒப்புரவாகலாம் என்பதற்கு ஆண்டவர் இயேசு நற்செய்தியில் மூன்று முக்கியமான காரியங்களை கூறுவார். அவையாவன 1.தர்மம் 2.நோன்பு 3.இறைவேண்டல். இதில் தர்மம் என்பதை மட்டும் குறித்துச் சிந்தித்துப் பார்த்து இறைவனோடு ஒப்புரவாக முயல்வோம்.
எலியாஸ் என்ற ஓர் ஆன்மீக எழுத்தாளர் கூறுவார், “தபால் பெட்டியில் போடப்படும் கடிதம் உரிய இடத்தில் போய் சேர்வதுபோல, ஏழை ஒருவருக்கு நாம் செய்யும் தர்மம் இறைவனுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்துவிடுகிறது” என்று. ஆம், ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறவர் என்று நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம். ஆகவே ஏழைகளுக்கு/ எல்லா மக்களுக்கு தர்மம் செய்வதன் வழியாக எப்படி இறைவனோடு ஒப்புரவாகலாம் என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சிகாகோ நகரிலே காவல்துறையினர் மத்தியில் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. அது என்னவென்றால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூடுகிறது என்றால், அவர்களை எப்படி அங்கிருந்து கலைப்பது என்பதுதான் அக்கேள்வி.
காவல்துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதிலைச் சொன்னார்கள். ‘கண்ணீர் புகைகுண்டு வீசுவேன், துப்பாக்கியைப் பயன்படுத்துவேன், லத்தியை வைத்து அடித்து விரட்டுவேன்’ என்று சொல்லிக்கொண்டே போனார்கள். இறுதியாக ஒரு காவல்துறை அதிகாரி எழுந்து நின்று, “கலவரக் கூட்டத்தை விரட்ட, நான் என்னிடம் இருக்கும் தொப்பியைக் கழற்றி, மக்களிடம் யாசிப்பேன் (பிச்சை கேட்பேன்), உடனே எல்லாரும் தெறித்து ஓடி விடுவார்கள்” என்றார்.
அங்கே இருந்தவர்கள் இதைக் கேட்டு குபீர் என்று சிரித்தார்கள். இறுதியில் அவருக்கே பரிசையும் தந்தார்கள்.
நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற மனநிலையானது படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.
தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், கிறிஸ்தவர்களின் மூன்று முக்கியக் கடமைகளில் ஒன்றான தர்மம் செய்வதில்/ அறச்செயல் புரிவதில் சிறந்து விளங்கவேண்டும் என்று திருச்சபையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஆண்டவர் இயேசு, நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற இக்கருத்தை நற்செய்தியின் பல பகுதியில் விளக்கிக் கூறுவார். குறிப்பாக தன்னைப் பின்பற்ற நினைத்த செல்வந்தனாகிய இளைஞனிடம், “உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்பற்றும்” என்கிறார். (மத் 19:21)
ஆகவே, இயேசு தன்னுடைய போதனைகளில் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார் என்பது தெளிவு.
மேலும் நாம் கொடுக்கின்றபோது, தர்மம் செய்கிறபோது எப்படிப்பட்ட மனநிலையோடு செய்யவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார்: “நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” என்பார்.
எனவே தர்மம் செய்கிறபோது ஏதோ விளம்பரத்திற்காகச் செய்யாமல், மறைவாக யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது.
ஆனால் இன்றைக்கு விளம்பர உலகத்தில் இருக்கும் நம்மால் விளம்பரமே இல்லாமல் ஒரு நல்ல காரியத்தை, அறச்செயலை செய்ய முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இயேசு “உங்கள் வலக்கை செய்வது இடக்கைத் தெரியாதிருக்கட்டும்” என்கிறார். அப்படியென்றால் நாம் ஒன்று கொடுக்கிறபோது அதை கொடுக்கிறோம் என்ற மனநிலையே இல்லாமல் கொடுக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்கவேண்டும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் “Natinal Morrow Donor Programme” என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. இதன் முக்கியமான நோக்கம் இலவசமாக எலும்புக் குறுத்துத் தசை அறுவைச் சிகிச்சை செய்து தருவதுதான்.
இந்த அமைப்பில் சேர்ந்து எலும்புக் குறுத்துத் தசையை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பெறலாம், கொடுக்கலாம். ஆனால் இதில் முக்கியமான அம்சம் என்ன வென்றால் எலும்புக் குறுத்துத் தசை அறுவைச் சிகிச்சை செய்துகொள்வோர், தனக்கு யார் அதைத் தானமாகத் தந்தார் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அதைப் போன்று எலும்புக் குறுத்துத் தசையை தானமாகத் தந்தவர், அது யாருக்குப் பொறுத்தப்பட்டிருக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.
பிரதிபலன் பாராமல் முகம் தெரியாத மனிதருக்கு உதவி செய்யவேண்டும் என்பதுதான் இவ்வமைப்பின் நோக்கம். ஆண்டவர் இயேசுவும் நமக்கு அதைத்தான் எடுத்துச் சொல்கிறார்.
ஆதலால் தொடங்கியிருக்கும் இந்த தவக்காலத்தில் இறைவனோடு நாம் செய்யும் தர்மத்தின் வழியாக (நோன்பின் வழியாக, இறைவேண்டலின் வழியாக) ஒப்புரவாகுவோம். “உடல் நலத்திற்கு இரத்த ஓட்டம் எந்தளவுக்கு முக்கியமோ, அதைபோன்று உலக நலனிற்கு தர்மம் முக்கியம்” என்பான் ஓர் அறிஞர்.
ஆகவே நம்மிடம் இருப்பதை பிறருக்குத் தர்மமாகக் கொடுப்போம். அதன் வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்