B. CELLIN
1.1K views
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 கேட்ட கேள்விகள்..* *உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?* ~ மத்தேயு 6 :28 மலைப்பொழிவு இயேசுவின் போதனைகளின் மிக முக்கியமான பகுதி. விவிலியத்திலிருந்து ஏதோ ஒரு பகுதியை வாசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மலைப்பொழிவு பகுதியைப் படிக்கலாம். மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் இயேசு சொல்வதை மட்டும் பின்பற்றினாலே போதும், தூய வாழ்க்கையை மண்ணில் வாழ முடியும். பண ஆசையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த இயேசு, கவலை கொள்வதைப் பற்றிப் பேசுகிறார். கவலை விசுவாசத்தின் எதிரி. கவலையுடன் இருப்பவன், தனது கவலையைப் போக்க கடவுள் இருக்கிறார் என்பதை மறந்து விட்டவன். கவலையுடன் இருப்பவன், எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டும் என தன்னை மையப்படுத்தி சிந்திப்பவன். அத்தகைய கவலைகளை உதறித் தள்ள வேண்டும் என இயேசு போதிக்கிறார். ஏன் கவலையை உதறித் தள்ள வேண்டும் ? ஏனென்றால் நம்முடைய தேவை என்ன என்பதை அறிந்து நம்மைக் கடவுள் பாதுகாக்கிறார் என்பது தான். அப்பாவின் தோளில் இருக்கும் குழந்தை, சாலையின் நெரிசலையோ, வாகனங்களின் வேகத்தையோ, பரபரப்பின் பயத்தையோ மனதில் ஏற்றுவதே இல்லை. அப்பா பத்திரமாக கொண்டு சேர்ப்பார் எனும் நம்பிக்கை அதன் மனதில் வேரூன்றி இருப்பது தான் அதன் காரணம். அத்தகைய விசுவாசத்தை இறைவனின் மீது வைக்க வேண்டும் என்கிறார் இயேசு. வாழ்வின் முதன்மையானவை உணவோ, உடையோ அல்ல ! இயேசு போதித்த அன்பின் மதிப்பீடுகளே முக்கியமானவை. மனிதனுக்கு ஒன்றை விட ஒன்று முக்கியமானதாய் இருக்கிறது. பட்டினியில் தவிப்பவனுக்கு ஆடை ஒரு பொருட்டல்ல, உணவே அவனுக்கு முதன்மை. பசியற்று இருப்பவன் ஆடையை நோக்கி பார்வையை செலுத்துவான். ஆனால், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையே ! கவலை எதையும் பெற்றுத் தருவதில்லை, இன்றைக்கு உளவியலும் அதைத் தான் சொல்கிறது. கவலை நம் உடலை சிதைக்கிறது. தேவையற்ற நோய்களைக் கொண்டு வந்து கொட்டுகிறது. நம்முடைய ஆரோக்கியமும், நிம்மதியும் பாழாய்ப்போகிறது. கவலைப்படுவதால் ஒரு முழம் உயரத்தைக் கூட்டவும் முடியாது, நரைத்துப் போன ஒரு முடியை கருப்பாக்கவும் முடியாது. வேண்டுமானால் கருப்பு பூசி, கருப்பாய் மாற்றியது போல போலித்தனம் செய்யலாம் அவ்வளவே ! இயேசு உதாரணமாக காட்டுமலர்களைப் பேசுகிறார். காட்டுமலர்களைக் கவனியுங்கள் என்கிறார். இறைவன் படைத்த இயற்கையைக் கவனிக்க வேண்டும். இயற்கை நமக்கு பாடங்களைக் கற்றுத் தருகிறது. மாளிகைப் பூக்களையல்ல காட்டுப் பூக்களைப் பார்த்தும் நாம் கற்க முடியும். ஒரு பூவை நம்மால் பூக்க வைக்க முடியாது, அதன் இதழ்களை அழகுபடுத்த முடியாது, அதன் வாசனையை உருவாக்க முடியாது. ஆனால் எல்லாம் சரியாக நடந்து கொண்டே இருக்கின்றன ! காரணம் அவற்றையும் இறைவன் பராமரிக்கிறார். கவனிப்பாரற்றுக் காட்டில் கிடக்கும் ஒரு சிறிய மலரைக் கூட கவனிக்கும் கடவுள், அவரது சாயலாய்ப் படைத்த நம்மைக் கவனிக்க மாட்டாரா ? இன்றைக்கு அழகாய் விரிந்து, நாளை சருகாய் மறையும் மலரையே கடவுள் அழகுபடுத்தினால் உங்களை அழகுபடுத்த மாட்டாரா ? அப்புறம் எதுக்கு கவலை ? என்கிறார் இயேசு ! அப்படி கவலைப்பட்டாலும், பணத்தைச் சம்பாதித்தாலும் சாலமோன் மன்னன் அளவுக்கு நம்மால் சம்பாதிக்க முடியுமா ? டன் கணக்காக தங்கத்தை வைத்திருந்த அவராலேயே ஒரு காட்டுமலரின் மென்மையில் ஆடை அணிய முடியாது என்கிறார் இயேசு ! மனிதன் நாளை என்ன செய்யலாம் எனும் கவலையில் ஓடிக்கொண்டே இருக்கிறான். பிள்ளைகளுக்காய் சேமிக்க வேண்டும், கார் வேண்டும், வீடு வேண்டும், இ.எம்.ஐ கட்ட பணம் வேண்டும், வேலை போனால் என்ன ஆகும், பதவி போனால் என்ன ஆகும், பணம் போனால் என்ன ஆகும் என்றெல்லாம் கவலைப்படுகிறான். உண்மையில் ஒரு மனிதன் கவலைப்படுவதில் எண்பது சதவீதம் வீண்கவலை என்கிறது உளவியல். இதற்கெல்லாம் காரணம், நம்பிக்கை இன்மையே ! கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார். அவரே நமது தந்தை என நாம் நம்பினால், தந்தைக்குப் பிரியமானவற்றைச் செய்யத் தொடங்குவோம். தந்தைக்குப் பிரியமானவற்றை நாம் செய்யத் தொடங்கும்போது நமது வாழ்வின் தேவைகளை தந்தை நிறைவேற்றுவார். விலகிச் செல்பவர்களையும் நேசிக்கும் கடவுள், விரும்பிச் செல்பவர்களை எவ்வளவு அதிகமாய் நேசிப்பார் ! *கவலைகளெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், நம்பிக்கைக்குரிய கடவுள் இல்லாதவர்களுக்கும் தான்* . நமக்கு அப்படிப்பட்ட கவலையே தேவையில்லை என உறுதியளிக்கிறார் இயேசு ! நாளைக்குரிய புதிருக்கான விடை, நாளைக்குக் கிடைக்கும். இன்றைக்கு இறைவனைப் பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் அவர். ஒருவகையில் இந்த தலைமுறை உடைக்காகத் தான் கவலைப்படுகிறது, புதிய ஃபேஷனுக்காக மெனக்கெடுகிறது, தனது உடை கவனிப்பைப் பெறவேண்டும், பாராட்டைப் பெறவேண்டும், பிறர் மனதில் பொறாமையை விதைக்க வேண்டும், தான் அழகாய்த் தெரியவேண்டும் எனும் கவலை தான் அதிகமாய் இருக்கிறது. உடைமீதான ஆர்வம் இன்று நேற்றல்ல. ஆதியிலேயே இருந்தது. இயேசுவைச் சிலுவையில் அறைந்தவர்களே இயேசுவின் ஆடையை பங்கு போட்டுக் கொண்டார்கள். இயேசு சொல்கிறார், உடைக்காக அல்ல ! உள்ளத்துக்காக கவலைப்படுங்கள். உங்களுக்காய் உடைபட்டவன் நான், உடைக்காய் நீங்கள் கவலைப்படாதீர்கள் ! ~ கவிஞர். சேவியர் நன்றி : குருத்தோலை மாத இதழ்