*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
பாகம்-2
பெர்னதெத் தரையில் அமர்ந்து காலுறைகளைக் கழற்றும்போது சூறாவளி போன்ற காற்று நான்கு பக்கங்களிலுமிருந்தும் பலமாக வீசியது பெர்னதெத் பயந்து அங்கும் இங்கும் பார்த்தாள். மரங்களில் கிளைகளோ, இலைகளோ அசையவில்லை. மீண்டும் காலுறைகளைக் கழற்ற பெர்னதெத் குனிந்தாள். அப்போது, முன்பு வீசியதை விடப் பலமான வேகத்துடன் ஒரு காற்று வீசியது. ஆனால், மரங்களோ, செடி கொடிகளோ அசையவில்லை.
பயந்து நடுங்கிய பெர்னதெத் அங்கிருந்து ஓட முயன்றாள். அப்போது அவள் பார்வை 'மசாபியேல்' பாறை மீது விழுந்தது.
"மசாபியேல்' பாறைக் குன்றில் பெரிய மாடக்குழி போல் இருந்த குகையின் மேல் படர்ந்திருந்த ஒரு கொடி மெதுவாக அசைந்தாடியது! சில நொடிகளுக்குள் அதே கொடி வேகமாக ஆடத் தொடங்கியது. பயந்து நடுங்கி, ஓட கால் எடுத்த பெர்னதெத் குகையிலே எதையோ பார்த்து சிலையாக நின்றாள். அவளால் ஓட முடியவில்லை.
அந்தக் குகையினுள் சூரியனைப் போன்று மிகப் பிரகாசமான ஒளி வீசியது! நடுவில் கற்பனைக்கும் எட்டாத அழகுடைய ஓர் இளம் மாது நின்றார்.
இது பற்றி பெர்னதெத் கூறுகிறாள்:
*அக்காட்சியைப் பார்த்த நான் கண்களைக் கசக்கி உற்றுப் பார்த்தேன். கண்களை மூடி, மூடி திறந்து பார்த்தேன். பிரகாசமான பேரொளியின் நடுவே அந்த இளம் மாது இன்னும் நின்று கொண்டிருந்தார். யார் அவர் என்று என்னால் அறிய முடியவில்லை. சூரிய ஒளி போன்ற பிரகாசமும், சொற்களால் விவரிக்க முடியாத பேரானந்தமும் என் உள்ளத்தில் நிரம்பி வழிய, நான் பரவசத்தில் ஆழ்ந்தேன்."
குகையில் நின்ற அந்த மாதரசியின் வலது கரத்தில் மணிக்கட்டுக்குக் கீழே ஒரு செபமாலை தொங்குவதைக் கண்டேன், உடனே, நான் என் சட்டைப் பையிலிருந்து என் செபமாலையை எடுத்தேன், முழந்தாளிலிருந்து செபமாலை செபிப்பதற்காக செபமாலையில் தொங்கிய சிறு பாடுபட்ட சிலுவையை என் நெற்றிக்குக் கொண்டு வர முயன்றபோது என் கைகளை உயர்த்த முடியவில்லை.
குகையினுள் நின்ற மாது தன் செபமாலையை எடுத்து நெற்றிக்கு உயர்த்தினார்கள். அவர்களைப் போல் நானும் “பிதா, சுதன்..." சொல்ல கையை உயர்த்திய போது, எவ்வித சிரமமும் இன்றி சிலுவை அடையாளம் வரைய முடிந்தது, நான் செபமாலை செபிக்கும்போது அந்த அம்மா மௌனமாக இருந்தார். அவருடைய செபமாலையின் மணிகள் ஒன்று ஒன்றாக அவரது விரல்களிலிருந்து நழுவினதைப் பார்த்தேன். "பிதா வுக்கும், சுதனுக்கும்..." என்ற செபத்தைச் சொல்லும் போது மட்டும் அவருடைய உதடுகள் அசைந்தன,
விறகு பொறுக்கி விட்டு பெர்னதெத்திடம் வந்த இருவரும் பெர்னதெத் முழந்தாளிலிருந்து செபமாலை செபித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தனர். பல முறை பெர்னதெத்தின் பெயரை உரத்த குரலில் கூப்பிட்டு அழைத்தும் அவள் அசையவில்லை. சிறு கற்களைப் பொறுக்கி பெர்னதெத் மீது வீசினார்கள். அவள் அசையவில்லை. பெர்னதெத் பரவச நிலையில் உலகத்தையே மறந்து குகையில் நின்ற அந்த அம்மாவையே உற்றுப் பார்த்தபடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தாள்.
மேரி அந்துவானத்தும், ஜேன் அபதியும் குகையைப் பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் கண்ணில் தெரியவில்லை. குகை காலியாகவே இருந்தது.
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்
நன்றி - www.catholictamil.com
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்