பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
663 views
ஸ்ரீ (969)ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 🌺திருக்கலிவிருத்தம்🌺 கடந்த வாரத்தில் ஒருநாள் நண்பரைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன், வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது வீட்டின் எதிரே இருந்த பிளாட்பார்மில் ஒரு 70+ வயது மதிக்கத்தக்க மனிதர் உடலெங்கும் அழுக்காக, சரியான உடையின்றி அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில், அமர்ந்திருந்த அவர் அமர்ந்த நிலையிலேயே பிருஷ்ட்த்தைத் தேய்த்தவாறே கையை ஊன்றி நகர்ந்து சென்றார். நண்பரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். சில நாள்களாக அவர் இங்கு இருப்பதாகவும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட்டுக்கொண்டு அங்கயே ஓரமாகப் படுத்துக்கொள்வார் என்றும் சொன்னார். தவிர இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அந்த நபர் செய்யும் சேட்டைகளையும் சொன்னார். நடக்க முடியாதவருக்கு மது எப்படிக் கிடைக்கிறது என்ற விஷயத்தையும் சிரித்துக் கொண்டே நண்பர் சொன்னார். அவர் யாரெவர் என்பது நண்பருக்கும் தெரியாது அடியேனுக்கும் தெரியாது. அவர் நிலையை விசாரம் செய்தோமானால் அது கர்மாவில் போய் முடியும். அதனால் விசாரத்தை விட்டுவிடுவோம். அதையெல்லாம் பார்த்த அடியேனுக்கு அப்போதிருந்த மனநிலையில் தொலைபேசியை எடுத்து எழுதிய பாசுரம் தான் இது. இனி பாசுரத்தின் சுருக்கமான அர்த்தம். கால்கள் வலுவிழந்து நடக்கமுடியாமல், பிட்டம் – பிருஷ்டம்(buttocks) அமர்ந்தவாறே மண்ணில் தேயும்படியும், கைகள் தரையில் ஊன்றி, ஒருவாறு எட்டியெட்டி ஊர்ந்து செல்லும் வலிநிறைந்த நிலை வரும் முன்பே, ஸ்வாமி ஸ்ரீராமானுஜரின் சம்பந்தத்தினால் வழிவழியாக வந்த ஒரு ஆசாரியனின் திருவடிகளில் சரண்புகுந்து எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்தைக் கற்பீர்களேயானால் நிச்சயம் உங்களுக்கு உய்வாம் – பேறு கிட்டுமாம். என்பது பாசுரத்தின் கருத்து. ஸ்வாமி ஸ்ரீநம்மாழ்வாரின் ‘கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்’ என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தைப் பெரியோரின் துணைகொண்டு அர்த்தத்துடன் அனுசந்தித்தல் நலம். ‘எட்டெழுத்து மந்திரமான திருமந்திரம் தான் எங்களுக்குத் தெரியுமே! பிறகு எதற்கு ஆசாரியனைச் சரண்புகுந்து கற்க வேண்டும்? அதன் அவசியமென்ன?’ என்று யாராவது கேட்பீர்களேயானால், அப்படி ஆசாரிய சம்பந்தம் இல்லாமல் அம்மந்திரத்தைச் சொல்வதாலோ, அர்த்தத்தைக் படித்துக் கற்பதாலோ நிச்சயம் பிரயோஜனம் இல்லை. இது ஏனென்று ஞானமும் அனுஷ்டானமும் உடைய யாராவது ஒரு ஸ்ரீவைஷ்ணவ பாகவதோத்தமரை அணுகித் தெளிவு பெறும் படியாக ப்ரார்த்திகிறேன். அடியேன்🙏 பெ. மதியழகன் தேவப்பெருமாள் ராமானுஜ தாசன் SKAPS Email: info.skaps@gmail.com 20.01.2026 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்