Seeman - சீமான்
2.2K views
1 years ago
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவரும், சமூகச்செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான அண்ணன் எஸ்.எம். பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான அண்ணன் பாக்கர் அவர்கள், இசுலாமியப் பெருமக்களின் நல்வாழ்வாழ்விற்கும், அடிப்படை உரிமைக்கும் ஆதரவாகவும், அவர்கள் மீதான அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வாழ்நாள் முழுவதும் களத்தில் முன்நின்று போராடிய சமரசமற்ற போராளியாவார். இசுலாமியப் பெருமக்கள் சட்டத்தின் பெயரால் ஒடுக்கப்படும் போதெல்லாம் அவரது குரல் முதலாவதாக ஓங்கி ஒலிக்கும். நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்காகப் பாடுபட்ட அவரது அர்ப்பணிப்புமிக்கப் பெருவாழ்வு மனித உரிமை போற்றும் அனைவராலும் என்றென்றும் நினைவுக்கூரப்படும். தனிபட்ட முறையில் என்மீது பேரன்புகொண்ட அண்ணன் பாக்கர் அவர்களின் திடீர் மறைவு என் மனதினை மிகவும் துயருறச் செய்கிறது. அண்ணன் பாக்கர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், மனித உரிமை. போராளிகளுக்கும், இசுலாமியப் பெருமக்களுக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அண்ணன் பாக்கர் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! #இரங்கல் செய்தி