Diraviam Jayaraj
3K views
2 days ago
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 18 : முதல் வாசகம் நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7 அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர். திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர். ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல் திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22) பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லது: அல்லேலூயா. 1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி 4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி 18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா ஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம் இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21 மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள். இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது. ஆண்டவரின் அருள்வாக்கு. ---------------------------------------------------------------------- அஞ்சாதீர்கள்! பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம் சனிக்கிழமை I திருத்தூதர் பணிகள் 6: 1-7 திருப்பாடல் 33: 1-2, 4-5, 18-19 (22) II யோவான் 6: 16-21 அஞ்சாதீர்கள்! ஆண்டவர்மீது நம்பிக்கை வை! மனித வாழ்க்கை பல்வேறு இன்னல்களுக்கும் இக்கட்டுகளுக்கும் உள்ளானது. இவற்றுக்கு நடுவில் ஒருவர் தொடர்ந்து பயணப்பட வேண்டுமானால், அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது. திருஅவை வேகமாக வளர்ந்து வந்தபோது, புதுப் புது பிரச்சனைகளும் தலைதூக்கத் தொடங்கின. குறிப்பாக, விருந்துகளில் கிரேக்க மொழி பேசும் கைம்பெண்கள் சரியாகக் கவனிக்கப்பட வில்லை என்றொரு பிரச்சனை எழுந்தது. இதனைச் சரிசெய்யும் விதமாக திருத்தூதர்கள் திருத்தொண்டர்கள் எழுவரை நியமித்து, அப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றார்கள். திருத்தூதர்கள் பெரிய பிரச்சனை வந்துவிட்டதே என்று அஞ்சவில்லை; மாறாக, அவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து முன்மதியோடு செயல்படுகின்றார்கள். இன்றைய நற்செய்தியில் சீடர்கள், கடலில் இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது, இயேசு கடல்மீது நடந்து வருகின்றார். அவரைப் பார்த்துச் சீடர்கள் பேய் என்று அஞ்சுகின்றபோது, இயேசு அவர்களிடம், “நான்தான் அஞ்சாதீர்கள்” என்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றார். சீடர்கள் அஞ்சியபோது, இயேசு அவர்களிடம் அஞ்சாதீர்கள என்று சொன்னதற்குக் காரணம், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33 இல் இடம்பெறுவது போல, அவரது பேரன்பு அவரது மக்கள்மீது – சீடர்கள்மீது – இருப்பதால்தான். கடவுளின் பேரன்பு நம்மீது எப்போது உண்டு, அதனால் நாம் அவர்மீது நம்பிக்கை வைப்போம்; பதற்றமடையாமல் இருப்போம். அச்சத்திலிருந்து விடுதலை ஜிம் ஒன்றொரு சிறுவன் இருந்தான். அவனுடைய தாய் அவனை மிகவும் அன்பு செய்தார். ஒருநாள் அவர் திடீரென இறந்து போனதால். அவருடைய இறப்பை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதுபோக, ‘இறந்து போன என் அம்மா விண்ணகத்திற்குச் சென்றிருப்பாரா? அல்லது பாதாளத்திற்குச் சென்றிருப்பாரா?’ என்ற கவலை அவனை மிகவும் வாட்டத் தொடங்கியது. அத்தோடு, ‘நானும் என் அம்மாவைப் போன்று ஒருநாள் இறக்க நேரிடும். அப்போது நான் எங்குச் செல்வேன்? விண்ணகத்திற்கா? அல்லது பாதாளத்திற்காக?’ என்ற கவலையும் அவனை நிம்மதி இழக்கத் செய்தது. இதனால் அவன் எப்போதும் ஒருவிதமான அச்சத்தோடு இருந்தான். இதையெல்லாம் பார்த்த அவனுடைய தந்தை அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ‘மருத்துவமனைக்குச் சென்றால், மருத்துவர் ஏதாவது மருந்து தருவார். தன்னுடைய பிரச்சனை தீர்ந்துவிடும்’ என்றுதான் ஜிம் தன் தந்தையோடு சென்றான். மருத்துவரோ அவனிடம் மருந்து மாத்திரை எதுவும் தாராமல், ஒரு திருவிவிலியத்தைத் தந்தார். ‘இந்தத் திருவிவிலியத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?’ என்று முதலில் யோசித்த அவன், தற்செயலாக அதைப் புரட்டிப் பார்த்தான். அப்போது அவனுடைய பார்வையில், “வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்” (எபி 2: 15) என்ற இறைவார்த்தை பட்டது. இந்த இறைவார்த்தை அவனுக்குள் மாற்றத்தைக் கொண்டு வந்ததால், அவன் சாவு பற்றிய அச்சத்தை விலக்கினான். கடவுள் நம்மை எல்லாவிதமான அச்சத்திலிருந்தும் விடுவிக்கும்போது, நாம் எதைப் பற்றியும் அஞ்சத் தேவையில்லை. மன உறுதியோடு இருப்போம். ஆண்டவரின் வார்த்தை “அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன்; கலங்காதே, நான் உன் கடவுள்” (எசா 41: 10) தீர்மானங்கள் 1) கடவுளை நம் கண்முன் கொண்டு வாழ்வோம்; எல்லாவிதமான அச்சத்திலிருந்தும் விடுபடுவோம். 2) கடவுள் எல்லாரிலும் இருக்கின்றார். அதனால் யாரையும் புறக்கணிக்க வேண்டாம். 3) ஆண்டவர் பேரன்பை அறிவோம். அறிந்ததை அடுத்தவருக்கு அறிவிப்போம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்