அன்புமணி ராமதாஸ்
433 views
6 days ago
தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் மறைவுக்கு இரங்கல். சேலம் மாவட்டம், தாரமங்கலம் தொகுதியின் முன்னாள் பாமக சட்டப்பேரவை உறுப்பினரும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவருமான பெ.கண்ணையன் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே இரு அமைப்புகளின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர் பெ.கண்ணையன் ஆவார். வன்னியர் இட ஒதுக்கீடு கோரி 1987&ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உள்பட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக போராடி பல முறை சிறை சென்றவர். வன்னியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று மிகவும் திறம்பட செயலாற்றிய பெருமைக்குரியவர். 2006&ஆம் ஆண்டு தாரமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணையன் அவர்கள், அத்தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும், சமூகநீதிக்காகவும் அவையில்  தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பெ.கண்ணையன் அவர்கள், சம்பு முனிவர் நடத்திய யாகத்திலிருந்து வீர வன்னிய மகராஜா அவதாரம் எடுத்த பெருநாளான பங்குனி உத்திரத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர். என் மீது மாறாத அன்பும், பற்றும் கொண்டு இருந்தவர். அவரை சாமி என்று தான் நான் அன்புடன் அழைப்பேன். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பெ.கண்ணையன் இருந்தார். சில மாதங்களுக்கு முன் நான் சேலம் சென்றிருந்த போது என்னை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், எனக்கும் நீண்டகாலம் துணையாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது மறைவை  என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெ.கண்ணையன் அவர்களை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0