Diraviam Jayaraj
590 views
1 days ago
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 24 : முதல் வாசகம் பிற இனத்தவருக்கு எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் சவுல் இருக்கிறார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-20 அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது, திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “அனனியா!” என அழைக்க, அவர், “ஆண்டவரே, இதோ அடியேன்” என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார். அதற்கு அனனியா மறுமொழியாக, “ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார். அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக் காட்டுவேன்” என்றார். அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று, கைகளை அவர்மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதில்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார். ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல் திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15) பல்லவி: உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அல்லது: அல்லேலூயா. 1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி 2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 56 அல்லேலூயா, அல்லேலூயா! “எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. ஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம் எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 52-59 அக்காலத்தில் “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.” இயேசு கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார். ஆண்டவரின் அருள்வாக்கு. ------------------------------------------------------------------------ மீண்டும் பார்வையடைவோம் பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை I திருத்தூதர் பணிகள் 9: 1-20 திருப்பாடல் 117: 1, 2 (மாற்கு 16: 15) II யோவான் 6: 52-59 மீண்டும் பார்வையடைவோம் அறிவோம்; அறிவிப்போம் இயேசு பேசிய ஒவ்வொரு சொல்லிலும் ஆழமான பொருள் இருந்தது; ஆனால், அவரது சீடர்களும் மக்களும் அதனை மேலோட்டமாகப் புரிந்துகொண்டார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை! இன்றைய நற்செய்தியில் இயேசு, வாழ்வளிக்கும் உணவைப் பற்றிப் பேசுகின்றபோது, அவரது சீடர்கள், அதனை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு, “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்று பேசிக்கொள்கின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களுக்கு அதற்குரிய விளக்கத்தைத் தருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் பவுலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். பவுல் ஒரு காலத்தில் கிறிஸ்துவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் பார்வையின்றி இருந்தார். அவர் தமஸ்கு நகர் நோக்கிப் போகும் வழியில் இயேசு அவரைத் தடுத்தாட்கொண்டு, அவர் மீண்டுமாகப் பார்வை பெறச் செய்கின்றார். இதனால் அவர் மிகுந்த வல்லமையோடு பிறவினத்தாருக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகின்றார். இன்று நாம் பதிலுரைப்பாடலைப் பாடலாக, “உலங்கெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று பாடினோம். ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்த இந்தக் கட்டளைக்கேற்பப் பவுல் உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் இயேசுவைப் பற்றிப் பிழையற அறிவித்தார். பவுலைப் போன்று இயேசுவே வாழ்வளிக்கும் உணவு என்பதை நாம் உணர்ந்வதர்களாய், அவரது வார்த்தையின்படி நடந்து, நிலைவாழ்வைப் பெறுவோம். நற்கருணையில் வீற்றிருக்கும் ஆண்டவர் நர்சியா நகர்ப் புனித பெனடிக்டின் ஊருக்கு அருகாமையில் உள்ளது காசியா (Cascia). இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவெனில், இங்குதான் புனித ரீட்டாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 1330 ஆண்டு இங்கே பங்குப் பணியாளராகப் பணியாற்றிய அருள்பணியாளர் ஒருவர் சாகும் தறுவாயில் இருந்த ஒருவருக்கு நோயில் பூசுதல் என்ற அருளடையாளம் கொடுப்பதற்காகக் கிறிஸ்துவின் திருவுடலை – நற்கருணையை அதற்குரிய பாத்திரத்தில் எடுத்துச் செல்லாமல், தான் சொல்லும் கட்டளை செபப் புத்தகத்தில் எடுத்துச் சென்றார். அவர் நோயாளரின் வீட்டிற்குச் சென்று, கட்டளை செபப் புத்தகத்தைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அவர் வியந்து போனார். இயேசுவின் இரத்தம் தோய்ந்த அந்தக் கட்டளை செபப் புத்தகத்தின் பக்கங்கள் இன்று காசியா நகரில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இயேசு நற்கருணையில் இருக்கும்போது, அவரை நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நாம் நடக்கும்போது வாழ்வடைக்கின்றோம். ஆன்றோரின் வார்த்தை “நற்கருணை, இயேசு கிறிஸ்து மானிடர்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு” – மரிய கொரற்றி. தீர்மானங்கள் 1) அறியாமையை அகற்றி, ஆண்டவரைப் பற்றி அறிவில் வளர்வோம். 2) ஆண்டவரைப் பற்றி அறிந்தபின், அவரை மற்றவருக்கு அறிவிப்போம். 3) ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால், நாம் அனைவரும் சகோதரரர் சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்வோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்