யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதே இன்றைய அரசியல் தேவை!
ச. வெங்கடேசன்
சமீபத்தில் நான் வெளியிட்ட ஒரு அரசியல் நிலைப்பாடு குறித்த பதிவிற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள், நாம் தமிழர் தம்பிகள் மற்றும் சில மாற்று சமய அன்பர்கள் எனப் பலரும் தங்கள் கருத்துக்களையும், சில நேரங்களில் கடுமையான எதிர்ப்புகளையும் பதிவு செய்திருந்தனர்.
ஆரோக்கியமான விமர்சனங்களை நான் என்றும் மதிப்பவன். ஆனால், அந்த விமர்சனங்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் எதார்த்தத்தையும், எனது நிலைப்பாட்டின் அவசியத்தையும் விளக்க வேண்டியது எனது கடமையாகும்.
தேர்தல்: உணர்ச்சியா? அல்லது கள எதார்த்தமா?
இன்றைய தேர்தல் களம் என்பது வெறும் "நல்லவர் - கெட்டவர்" என்பதைத் தேர்ந்தெடுக்கும் தார்மீகப் போர் அல்ல. அது, "யார் நமது அடிப்படை உரிமைகளைப் பறிக்க நினைக்கிறார்கள்?" என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தடுக்கும் ஒரு தற்காப்புப் போர்.
தற்போதைய அரசியல் சூழலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கும், அதிமுக, பாஜக தலைமையிலான (அல்லது அவர்களின் நிழலில் இருக்கும்) மாநில உரிமைகளைப் பறிக்கும் கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
மற்ற கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கலாமே தவிர, வெற்றியைத் தீர்மானிக்கும் அல்லது ஆட்சியைப் பிடிக்கும் இடத்தை இன்னும் அடையவில்லை என்பதே நிதர்சனம்.
மாற்று அரசியல் என்பவர்களின் தற்போதைய நிலை
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தப் புதியவர்கள் மக்கள் மத்தியில் ஆழமான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
விஜய் மற்றும் தவெக:
நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால், அவர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ரசிகர் மன்றப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். சினிமாவைத் தாண்டி அரசியல் ஆளுமையாக அவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை. மற்ற கட்சிகளால் நிராகரிக்கப்பட்டவர்களும், அரசியல் அறிவை விட ரசிக மனோபாவம் கொண்டவர்களுமே அங்கு பெரும்பான்மையாக உள்ளனர். நாட்டை ஆளும் பொறுப்பை இவர்களிடம் ஒப்படைப்பது இப்போதைக்குச் சரியாக இருக்காது. காலம் கனிந்து, விஜய் அவர்கள் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக உருவெடுக்கும் போது அவரை நாம் ஆதரிக்கலாம்.
சீமான் மற்றும் நாம் தமிழர்:
கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தாலும், பல்வேறு முரண்பட்ட நிலைப்பாடுகளே அவர்களின் பலவீனமாக உள்ளது. இன்னும் முதல் அல்லது இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் வெற்றி பெறும் சூழல் வரும்போது, அவர்களைப் பற்றி யோசிக்கலாம்.
ஏன் திமுக கூட்டணி?
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் குறைகளே இல்லை என்று நான் வாதிடவில்லை. ஊழல், நிர்வாகச் சிக்கல்கள் எனப் பல விமர்சனங்கள் என் பார்வைகளிலும் உண்டு.
ஆனால், குறைகளைச் சரி செய்வது ஒருபுறம் இருக்க, அடிப்படை ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும், மதச்சார்பற்ற தன்மையையும் காப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானத் தேவை.
மாநில உரிமையை நசுக்கும்,சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும், மக்களை பிளவு படுத்தி மீண்டும் சனாதன வர்ணாசிரம கொள்கை அடிப்படையில் தலித் மக்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் மதவாதச் சக்திகள் முகமூடி அணிந்து நாம் மாநிலத்தை ஆள நாம் கொடுக்கும் ஒவ்வொரு வாக்கும் நுழைவுச் சீட்டாகி விடக்கூடாது.
"யார் வர வேண்டும்" என்பதை விட, "யார் வரக்கூடாது" என்ற அடிப்படையில் வாக்களிப்பதே புத்திசாலித்தனமான அரசியல்.
கற்பனையான இலட்சியவாதத்தில் மூழ்கிக் கிடந்தால், மதவாதக் கூட்டணிகள் நமது உரிமைகளைப் பறிக்க நாமே வழிவகுத்துக் கொடுத்ததாகிவிடும்.
விமர்சனங்களுக்கு எனது பதில்
நான் ஒரு ஆன்மீக ஊழியராக இருப்பதால், ஊழலை ஆதரிக்கலாமா என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: ஆன்மீகம் என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்தது மட்டுமல்ல, அது சமூக நீதியையும் உள்ளடக்கியது.
சிலர் என்னைத் தனிப்பட்ட முறையில் "உபி" என்றும், பணத்திற்காகப் பேசுகிறேன் என்றும் வக்கிரமாகச் சித்தரிக்கிறார்கள்.
திமுகதான் கிறிஸ்தவர்களைக் காக்கும் கடவுள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. ஆனால், ஒரு குடிமகனாக இந்த மண்ணின் மதச்சார்பற்ற தன்மையையும், அமைதியையும் யார் உறுதிப்படுத்துவார்கள் என்பதில் எனக்குத் தெளிவு இருக்கிறது.
விமர்சனங்கள் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவை கருத்தியல் ரீதியாக இருக்க வேண்டுமே தவிர, வக்கிரத்தின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது.
முடிவாக...
தமிழ் நாட்டின் எதிர்காலம், மாநிலத்தின் உரிமை, சமூக நீதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்பதே சரியான முடிவாக இருக்கும் என நான் கருதுகிறேன். சிந்தித்துச் செயல்படுவோம்! நன்றி
ச. வெங்கடேசன்
ஆரம்பத்தில் இவ்வளவு வெளிபடையாக நான் எழுத விரும்பவில்லை.ஆனால் சில சகோதரர்களின் விமர்சனம் என்னை இதற்கு தள்ளிவிட்டது.
#தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #