பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
1.2K views
21 hours ago
ஸ்ரீ (969)“எல்லாம் கண்ணன்” - கோமான் ஶ்ரீ பாலாஜி உண்ணுஞ் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்* எம்பெருமான் என்று என்றே, கண்கள் நீர் மல்கி* மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி* திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே. நம்மாழ்வார் - திருவாய்மொழி இந்தப் பாசுரம் சங்க இலக்கியத்தின் அகத்துறை மரபில் அமைந்துள்ளது. தலைவி (நம்மாழ்வார் - பராங்குச நாயகி) தன் தலைவனை (எம்பெருமான் கண்ணனை) நோக்கி இரவோடு இரவாகப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறாள். இது "உடன்போக்கு" என்னும் அகத்துறை நிலை. காலையில் மகளைக் காணாத தாய், அவள் எங்கு சென்றிருப்பாள் என்று உணர்ந்து, திண்ணமாக அதாவது உறுதியாக "என் மகள் திருக்கோளூருக்குத்தான் சென்றிருப்பாள்" என்று அறுதியிட்டுக் கூறுகிறாள். இந்தப் பாசுரத்தின் உள்ளே நுழைவதற்கு முன், மூன்று முக்கியமான வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தாரகம், போஷகம் மற்றும் போக்கியம். தாரகம் - உயிரைத் தாங்குவது, உயிர் வாழ வைப்பது - உண்ணும் சோறு போஷகம் - வளர்ப்பது, போஷிப்பது - பருகும் நீர் போக்கியம் - இன்பம் தருவது, சுகாநுபவம் - தின்னும் வெற்றிலை நம்மைப் போன்ற சாதாரண மனிதனுக்கு சோறு, நீர், வெற்றிலை என்பவை தாரகம், போஷகம், போக்கியமாக இருக்கின்றன. ஆனால் நம்மாழ்வாருக்கோ — இந்த மூன்றுமே கண்ணன் ஒருவனே! இங்கே ஒரு நுட்பமான கேள்வி எழுகிறது. "சோறு" என்றால் போதாதா? ஏன் "உண்ணுஞ் சோறு" என்று சொல்ல வேண்டும்? சோறு என்றாலே உண்பதற்கு தானே. வியாக்யானத்தில் அழகான விளக்கம் தருகிறார் காஞ்சி அண்ணங்கராச்சாரியார், “வயிறு நிறைந்தவனுக்கு பரமான்னம் கிடைத்தாலும் அது "உண்ணும் சோறு" ஆகாது. பெரும் பசியனுக்கு கிடைத்த ஒரு கவளச் சோறே "உண்ணும் சோறு.” அடுத்து “பருகு நீர்”, ஆழ்வார் கண்ணன்மேல் வைத்திருக்கும் தாகம், பசி என்பது அளவிட முடியாதது. அந்தப் பேரவாவுக்கு கண்ணனே தீர்வு. இதற்கு எடுத்துக்காட்டாக, கங்கைக் கரையில் நிற்பவனுக்கு கிணற்று நீர் தாகத்தை தீர்க்காது. ஆனால் பாலைவனத்தில் தவிப்பவனுக்கு கிடைக்கும் சிறு துளி நீரே அமுதம். அப்படியே ஆழ்வாரின் ஆன்மத் தாகத்தை தணிக்கும் ஒரே "நீர்" கண்ணன் மட்டுமே. “தின்னும் வெற்றிலையும் எல்லாம்” - தின்று களிக்க வேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப் போகப் பொருள்களும் கண்ணன் எம்பெருமான் என்று என்றே, இங்கே பாசுரத்தில் "என்று என்றே" என இருமுறை வருகிறது. இதற்குக் காரணம், ஆழ்வாருக்கு கண்ணனைத் தவிர வேறு சிந்தனையே கிடையாது. மூச்சுக்கு முன்னூறு தரம் அவன் பெயரையே சொல்லிக்கொண்டு, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, வழி தெரியாத பெண்ணாக இருந்தாலும், ஊர் ஊராக விசாரித்துக் கொண்டு அவன் இருக்கும் திருக்கோளூருக்கே சென்று சேர்ந்துவிடுவாள் என்று தாய் கூறுகிறாள். "கண்கள் நீர்மல்கி" இந்த வார்த்தைக்கு ஒரு ஐதிஹ்யமாக பெரியோர் சொல்வார்கள், நஞ்சீயர் ஒரு அழகான நிகழ்வை சொல்கிறார்: "பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன். அதில் முதல் பாசுரம் ஆரம்பித்தவுடனே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணீருமாய் இருக்கை நினைத்திருப்பன். மேற்கொண்டு எந்தப் பாசுரமும் செல்லாது” சொல்லை விட வலுவான மொழி கண்ணீர். அரையர் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரே அந்தத் திருவாய்மொழியின் விளக்கம். விளக்கவுரை எழுதவே வேண்டியதில்லை, கண்ணீரே போதும். இங்கே நம் ஆழ்வாரின் கண்ணீர், ஆனந்தக் கண்ணீர். துக்கத்தால் வருவதன்று. கண்ணன் நினைவு வரும்போதெல்லாம் தாரை தாரையாக பெருகுவது. எனவே கண்கள் நீர் மல்கி. இப்படிப்பட்ட பராங்குசநாயகி (நம்மாழ்வார்) அள்ள அள்ள வளமளிக்கும் வைத்தமாநிதிப் பெருமாள், திருக்கோளூர் எம்பெருமான் 'வைத்தமாநிதி' என்று அழைக்கப்படுவதன் காரணம் ‘தொலைத்த நிதியை மீட்டுத் தருபவன்’ அல்லது ‘பக்தர்களுக்குப் பெரும் நிதியாக இருப்பவன்’ அப்பேற்ப்பட்ட வைத்தமாநிதிப் பெருமாள் அருளும் திருக்கோளூர் எங்கிருக்கிறது? எத்தனை தூரம் போகும்? எப்படி போக வேண்டும்? என்று கேட்டுக்கொண்டே விசாரித்துக் கொண்டே திருக்கோளூர்க்கு சென்று புகுந்திருப்பாள், வேறு எங்கும் போயிருக்க வாய்ப்பில்லை, இது திண்ணம் என்கிறாள் பராங்குச நாயகியின் திருத்தாயார். இதற்கு ஈடு உரை ஒரு அழகான உவமை தருகிறது: "காட்டுத்தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப்புகுமாபோலே, சம்சாரமாகிற பாலைநிலத்தில் அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை கண்ணனும் அவன் திவ்யதேசமும்.” சம்சார வெப்பத்தில் வேகும் ஆன்மாவுக்கு கண்ணனின் திவ்யதேசமே குளிர்ந்த நிழலும் நீரும். அதனால்தான் நாயகி திருக்கோளூருக்கு ஓடினாள். "புகுமூர்" என்ற வார்த்தையில் ஆழமான அர்த்தம் இருக்கிறது, திருக்கோளூர் போகும் ஊரல்ல, புகும் ஊர். இங்கே புகுந்தவர்கள் திரும்பி போக மாட்டார்கள். பகவத் இராமாநுஜர், ஒரு சமயம் திருக்கோளூர் யாத்திரையாக போயிருந்த சமயம் திருக்கோளூரிலிருந்து வெளியே வரும் ஒரு அம்மையாரைப் பார்த்து, “எல்லாரும் புகுமூர் திருக்கோளூர் ஆனால் தாமோ அங்கிருந்து வருவதேன்?" என்று வியந்தாராம். அதற்கு அம்மையார் சொன்ன வார்த்தைகளே ‘திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியங்கள்’. இதுவே "புகுமூர்" என்ற சொல்லின் உண்மையான விளக்கம். நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம், "வாசுதேவ: ஸர்வமிதி" (எல்லாம் கண்ணனே) என்ற கீதை வாக்கியத்திற்கு உதாரணமாய் அமைகிறது. பக்தி என்பது வெறும் வேண்டுதல் மட்டுமல்ல; அது ஒரு பித்து, ஒரு காதல். எம்பெருமான் மேல் கொண்ட காதலால், உலகியல் விஷயங்கள் அனைத்தையும் மறந்து, இறைவனையே வாழ்வாதாரமாகக் கொள்ளும் ஒரு உயர்ந்த நிலையை இந்தப் பாசுரம் படம் பிடித்துக் காட்டுகிறது. நம்மாழ்வார் திருவடிகளே சரணம் #பெருமாள்