நன்செய் இடையாறு என்.எம்.மாயாண்டிக் கண்டர் மறைவுக்கு இரங்கல்.
நாமக்கல் மாவட்டம், நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான என்.எம்.மாயாண்டிக் கண்டர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றிய மாயாண்டிக் கண்டர், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர். கட்சியைக் கடந்து நாமக்கல் மாவட்டத்தில் உழவர்களின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். இராஜவாய்க்கால் கடை மடை விவசாயிகள் நலனை உறுதி செய்யவும், நன்செய் இடையாறுக்கு 235 கன அடி தண்ணீர் கிடைக்கவும், வாய்கால் ரீ மாடலிங் கொண்டு வரவும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களைத் திரட்டி போராடியவர். என் மீது அன்பு கொண்டவர். கடந்த ஆண்டு நன்செய் இடையாறு சென்ற போது அவரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வந்தேன்.
நன்செய் இடையாறு என்.எம்.மாயாண்டிக் கண்டர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
##PMK2.0