#✝️இயேசுவே ஜீவன் ஜார்ஜியார் நவநாள்*
நாள் -04
நவநாள் செபம்:
வேத சாட்சியான புனித ஜார்ஜியாரே! நீர் விசேஷமாய் களங்கமற்ற இருதயமுள்ளவர்களுக்கும் உமது உதவியை நாடி வருபவர்களுக்கும் செய்து வரும் அற்புத அதிசய நன்மைகளால் சர்வ வல்லவரான கர்த்தருக்குண்டாகும் மகிமையைக் கண்டு நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். மென்மேலும் உமது நாமம் பிரபலியப்படவும், உம்முடைய புதுமைகள் எல்லாவிடங்களிலும் பரவவும், கிறிஸ்தவர்களாகிய உமது சகோதரர்கள் உத்தம விசுவாசிகளாய்த் திருச்சபையில் நிலைத்திருக்கவும், பதித மதம் நாளுக்கு நாள் குறைந்து போகவும், உமது வாழ்நாளில் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருநாமம் எங்கும் ஓங்கவும், அவருடைய திருச்சபை பெருகவும், நீர்கொண்ட முயற்சி நாங்கள் கொள்ளவும், உம்மைப்போல் எவ்வித வருத்தமும் உயிர்வதை நேர்ந்தாலும் பின்னடையாதிருக்கவும், சீவியத்திலுண்டாகும் கஷ்டம் துன்பம், வறுமை சோதனைகளை வெல்லவும் தேவ கிருபையை மன்றாடியருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்கிறோம்.
வானுலகில் முடிசூட்டப்பெற்ற புனித ஜார்ஜியாரே! உமது அடியவர்களாகிய நாங்கள் மென்மேலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் திழைத்து நிற்கவும். இம்மாய உலகில் ஆன்மீகத் துறையிலும் பிற துறைகளிலும் எங்கள் எதிரிகளால் ஏற்படும் சோதனைகளை விலக்கி, தூய மனத்தோராய் இவ்வுலகில் வாழ வரம் அருள்வீராக. (வேண்டியதை உறுதியோடு கேட்கவும்) இரக்கமுள்ள இறைவா, உமது புனித ஜார்ஜியார் வழியாக எங்களுக்கு இவ்வரங்களை தந்தருள்வீராக. - ஆமென்.
வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். (3 தடவை சொல்லவும்)
செபிப்போமாக:
சைலானா என்னுமிடத்தில் ஓர் மாயப் பறவைநாகத்துக்கு இரையாய் போடப்பட வேண்டிய ஆன்ட்ரோ மேடா என்னும் இராஜ குமாரத்தியை மீட்க, அப்பறவை நாகத்தைக் கொலை செய்தீர். வெகு சந்தோஷங் கொண்ட அரசன், நீர் அவளை மணம் புரிந்து கொள்ள கெஞ்சி மன்றாடியும், மாய மூவாசையும் அறவே மறந்து வேண்டாமென்று நயந்துபேசி அவர்களை எல்லாம் வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே! நாங்களும் மாய ஆசாபாசங்களையும் முற்றும் மறந்து உம்மைப் போல் இயேசுக்கிறிஸ்துவென்னும் ஞான செஞ்சுடரில் எப்பொழுதும் நிலைத்திருக்க அவரை மன்றாடியருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம். - ஒரு. பர. அரு. பிதா.