Diraviam Jayaraj
538 views
1 days ago
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 19 : முதல் வாசகம் மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார்மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக் குறித்துக் கூறியது: ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’ சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.” ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல் திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 11a) பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். அல்லது: அல்லேலூயா. 1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி 7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி 9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி 11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி ஏப்ரல் 19 : இரண்டாம் வாசகம் உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21 அன்பார்ந்தவர்களே, நீங்கள் ‘தந்தையே’ என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர் நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார். ஆண்டவரின் அருள்வாக்கு. நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 118: 24 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா. ஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம் இயேசு அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35 வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!"என்றார். அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆண்டவரின் அருள்வாக்கு. ----------------------------------------------------------------- கண்களைத் திற பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு (திப 2: 14, 22-33; 1 பேது 1: 17-21; லூக் 24: 13-35) கண்களைத் திற கண்களைத் திறந்த கவிஞர்! வில்லியம் கெளபர் (William Cowper 1731 – 1800) என்றொருவர் இருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களையும் பிரச்சனைகளையும் தாங்கி முடியாமல் தேம்ஸ் நதியில் குதித்து, தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தார் இவர். இதன் நிமித்தம் இவர் ஒரு குதிரை வண்டிக்காரனைத் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தார். அவனும் இவருடைய வீட்டிற்கு முன்பாக வந்து நின்றபோது, வண்டியைத் தேம்ஸ் நதிக்கு ஓட்டச் சொன்னார். அன்றைக்குப் பனிப்பொழிவு மிகுதியாக இருந்தது. அதனால் வண்டியை ஓட்டிச் செல்வது வண்டிக்காரனுக்குச் சிரமமாகவே இருந்தது. குறிப்பிட்ட தூரம் வந்ததும், வில்லியம் கெளபர் தேம்ஸ் நதி வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, வண்டியிலிருந்து இறங்கி, கீழே குதித்தார். இவர் கீழே குதித்தபோதும் இவருக்கு எதுவுமே ஆகவில்லை; ஏனெனில், இவர் குதித்தது தேம்ஸ் நதியில் இல்லை; இவரது வீட்டிற்கு முன்பாக! உண்மையில், பனிப்பொழிவின் காரணமாக வண்டி இவரது வீட்டை ஒட்டியே சுற்றிக்கொண்டிருந்தது. இதனை அறிந்த இவர், ‘கடவுள், தான் சாகவேண்டும் என்றல்ல, வாழவேண்டும் என்றே விரும்புகின்றார் போலும்’ என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் வந்து இப்படியொரு கவிதையை எழுதினார்: “கடவுள் மிகவும் ஆச்சரியமாகச் செயல்படுகின்றார், அவரது செயல்கள் அற்புதமானவை. கடலில் அவர் தம் காலடிகளைப் பதிக்கின்றார், புயலில் அவர் பயணம் செய்கின்றார்.” இதற்குப் பிறகு இவர் அறிவுக் கண் திறக்க, வாழ்வின் வழியை அறிந்துகொண்டவராய் மிகப்பெரிய கவிஞராகவும், பாடலாசிரியராகவும் ஆனார். இவரது பாடல்கள் பல திருவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. தற்கொலை செய்து வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்த வில்லியம் கெளபரின் அறிவுக் கண்ணைத் திறந்து, கடவுள் அவரை வாழ்வின் வழியை அறியச் செய்தார். இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, நாம் நமது கண்களைத் திறக்கவும், வாழ்வின் வழியை அறிந்து, அதன்படி நடக்கவும் அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். கண்களைத் திறந்த சீடர்கள் சிலர் காதால் தொடர்ந்து கேட்டும், அதைக் கருத்தில் கொள்வதில்லை; கண்களால் பார்த்துக்கொண்டே இருந்தும் உணர்வதில்லை (மத் 13: 14). இவ்வார்த்தைகள் யாருக்கு பொருத்திப் போனதோ இல்லையோ, இயேசவின் சீடர்களுக்கு நன்றாகவே பொருந்திப் போயின. தாம் பாடுபட்டு இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று இயேசு தம் சீடர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார். அதைவிடவும் அவர் உயிர்த்தெழுந்த பின் மகதலா மரியாவிற்கும், அதன் பிறகு பேதுருவுக்கும் யோவானுக்கும் காட்சியளித்திருந்தார். இச்செய்தியை எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இயேசுவின் இரண்டு சீடர்கள் கேள்விப் பட்டிருந்தார்கள். எனினும், அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பாமல், ‘குருடர்களாகவே’ இருந்தார்கள். எப்போது இயேசு அப்பத்தைப் பிட்டு, கடவுளைப் போற்றி, அவர்களுக்குக் கொடுத்தாரோ அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அதன்பிறகு அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்பத் தொடங்ககின்றார்கள். இயேசுவின் சீடர்கள் அவர் உயிர்த்தெழுந்ததைக் காணாமலே நம்பி இருக்க வேண்டும்! (யோவா 20: 29); அவர்களோ இயேசு முன்னறிவித்திருந்த வார்த்தைகளையும் நம்பாது; உயிர்த்த ஆண்டவரை நேரில் கண்டவர்கள் சொன்ன வார்த்தைகளையும் நம்பாமல் இருந்தது வேதனையானது. இந்நிலையில்தான் அப்பம் பிடுகையில் அவர்களது கைகளைத் திறக்கச் செய்கின்றார் இயேசு. பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலாது (லூக் 6: 39). ‘பார்வையற்றவர்களாய்’ இருந்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு பார்வை கொடுத்து; அல்லது அவர்களது கண்களைத் திறந்து, அவர்களுக்குப் புதுப் பார்வை அளிக்கின்றார் இயேசு. மற்றவரின் கண்களைக் திறந்த சீடர்கள் அறியாமையை விடவும் ஆபத்தானது வேறு எதுவும் இல்லை. இதைத் தான் கடவுள் இறைவாக்கினர் ஒசேயா வழியாக, “அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்” (ஒசே 4:6) என்கிறார். ஒரு காலத்தில் அறிவின்மையால் பார்வையின்றி இருந்த இயேசுவின் சீடர்கள் பார்வை பெற்றதும், அறிவின்மையால் இருந்த மற்றவர்களும் பார்வை பெறுமாறு செய்கின்றார்கள். அதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். யூதர்களின் முப்பெரும் விழாக்களுள் ஒன்றான பெந்தக்கோஸ்து விழாவில் பதினொருவருடன் பேசுகின்ற பேதுரு, “நீங்கள் திருச்சட்டம் அறியாதவர்மூலம் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்... இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்” என்கின்றார். இதற்குப் பிறகு திரண்டிருந்த மக்கள் தங்கள் அறியாமையால் பாவம் செய்ததை உணர்ந்து, மனம் மாறித் திருமுழுக்குப் பெறுகின்றார்கள். இவ்வாறு இயேசுவால் கண்கள் திறக்கப்பட்ட சீடர்கள், அறியாமையில் இருந்த மக்களின் கண்களைத் திறந்து அவர்களும் பார்வை பெறச் செய்கின்றார்கள். அவரவர் செயல்களின்படி தீர்ப்பு அறியாமையால் பார்வையின்றி இருக்கும் மனிதர்கள் பார்வை பெற்று, ஆண்டவரைப் பற்றிய அறிவில் வளர்வதற்கும் அவரது அருள் தேவைப்படுகின்றது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 16 இல் தாவீது, “ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்” என்று மன்றாடுகின்றார். தாவீது ஆண்டவரிடம் மன்றாடியது போலவே, அவரை வாழ்வின் வழியை அறியச் செய்தார். இது நமக்குக் உணர்த்தும் செய்தி, ஆண்டவரின் அருளால்தான் அவரின் வழியை நாம் அறிய முடியும் என்பதாகும். இயேசு தன்னுடைய அருளால் சீடர்களின் கண்களைத் திறந்து அவர்கள் வாழ்வின் வழியை அறியச் செய்தார். அவர்களும் அறியாமையில் இருந்த மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களை வாழ்வின் வழியை அறியச் செய்தார்கள். நாம் ஏன் அறிவுக் கண்ணைத் திறந்து, வாழ்வின் வழியை அறியவும், அதன்படி நடக்கவும் வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் இருக்கின்றது. “நீங்கள் தந்தையே என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிறார்” என்று பேதுரு கூறுகின்றார். எனில், கடவுள் நம்முடைய செயல்களின்படியே தீர்ப்பு வழங்குவார் எனில், நம்முடைய செயல்கள் அவருக்கேற்ற செயல்களாக இருக்க வேண்டும். கடவுளுக்கு ஏற்ற செயல் அவர் அனுப்பிய இயேசுவை நம்புவதுதான் (யோவா 6:29). இயேசுவை நம்புகின்ற ஒருவர் வாழ்வின் வழியை அறிந்து, அதன்படி நடக்கின்றார். அப்போது அவர் ஆள்பார்த்துச் செயல்படாத கடவுளிடமிருந்து மிகுந்த கைம்மாறு பெறுவார். நாம் கடவுளிடமிருந்து மிகுந்த கைம்மாறு பெற, இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அதற்கேற்றாற்போல் வாழ்வோம். சிந்தனைக்கு “ஆண்டவரே, எங்களை கண்களைத் திறந்தருளும்” (மத் 20: 33) என்று பார்வையற்ற இருவர் இயேசுவிடம் வேண்டுவார்கள். நாமும் கடவுளிடம் நம்முடைய அகக் கண்களைத் திறக்கச் சொல்லி, வாழ்வின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம் - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்