Diraviam Jayaraj
388 views
8 hours ago
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 25 : புனித மாற்கு நற்செய்தியாளர் விழா என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார். முதல் வாசகம் திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14 அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.” ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக! ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல் திபா 89: 1-2. 5-6. 15-16 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன். 1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி 5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். 6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? - பல்லவி 15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1 கொரி 1: 23a, 24b அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். அல்லேலூயா. ஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20 அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். ஆண்டவரின் அருள்வாக்கு. ----------------------------------------------------------------- பறைசாற்றுங்கள்; விழிப்பாயிருங்கள்; எதிர்த்து நில்லுங்கள் நற்செய்தியாளர் புனித மாற்கு (ஏப்ரல் 25) I 1 பேதுரு 5: 5b-14 திருப்பாடல் 89: 2-3, 1-2, 5-6, 15-16 II மாற்கு 16: 15-20 பறைசாற்றுங்கள்; விழிப்பாயிருங்கள்; எதிர்த்து நில்லுங்கள் அ) பறைசாற்றுங்கள் ‘இரண்டாம் நற்செய்தி’யை நமக்கு அருளிய நற்செய்தியாளர் மாற்குவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவருக்கு யோவான் என இன்னொரு பெயரும் உண்டு. திருஅவையின் இருபெரும் தூண்கள் என்று அறியப்படும் பேதுரு, பவுல் ஆகிய இருவரோடும் உடன் புரிந்த சிறப்புக்குச் சொந்தக்காரர் இவர். பேதுரு சிறையிலிருந்து விடுக்கப்பட்ட பிறகு இவரது வீட்டிற்குத்தான் வருகின்றார் (திப 12: 12). பின்னர் பேதுருவோடு ஒன்றிணைந்து பணியாற்றிய இவர், அவர் வாயிலாக நற்செய்தி நூலை எழுதுகின்றார். இவர் பவுலோடு முதல் திருத்தூதுப் பயணத்தில் அவரோடு உடன் பயணித்தார். நடுவில் இருவருக்குமிடையே சரியான புரிதல் இன்றிப் பிரிந்து, இறுதியில் அவரோடு ஒன்றிணைந்து கொள்கின்றார். இப்படிப் பேதுருவிடமிருந்தும் பவுலிடமிருந்தும் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அக்குலேயா (Aquileia) அலக்சாந்திரியா ஆகிய பகுதியில், இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது போன்று நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்காகத் தம் உயிரையும் தந்தார். மாற்கு இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றியது போல, நாமும் அவரது நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை. ஆ) விழிப்பாயிருங்கள் நற்செய்தியைப் பறைசாற்றுகையில் பலவிதங்களிலும் ஆபத்துகளும் எதிர்ப்புகளும் வரும். இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்றபோது, அவர் வழியில் நடக்கின்றபோது, சாத்தான் யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகின்றது. அதனால் தெளிவோடு விழிப்பாயிருங்கள் என்கிறார் பேதுரு. இயேசுவின் நற்செய்தியை அறிவித்தபோது, அன்றும் மாற்குவிற்கும், இன்று நமக்கும் சாத்தான் பலவகையில் இடையூறுகளைத் தந்திருக்கலாம், தரலாம். அவற்றைக் குறித்து நாம் விழிப்பாய் இருப்பது இன்றியமையாதது. இ) எதிர்த்து நில்லுங்கள் நற்செய்தியைப் பறைசாற்றுகையில் நாம் விழிப்பாய் இருப்பது மட்டும் போதாது. மாறாக, நாம் துணிவோடு எதிரியை எதிர்த்து நிற்கவேண்டும். இதற்கு நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது அவசியமாக இருக்கின்றது. புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” (2 திமொ 1:7). கடவுள் நமக்கு வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினைத் தந்திருக்கும்போது, நாம் சாத்தனை, இடர்களை எதிர்த்து நின்று, துணிவோடு நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும். நற்செய்தியாளர் மாற்கு அப்படித்தான் தனக்கு வந்த ஆபத்துகளை எதிர்கொண்டு நற்செய்தியைப் பறைசாற்றினார். நாமும் மாற்குவின் வழியில் துணிவோடு நற்செய்தியைப் பறைசாற்றி இயேசுவுக்குச் சான்று பகர்வோம். இயேசுவைக் கேலி செய்தவரைக் கண்டித்தவர் ஜெர்மனியின் மன்னராக இருந்து அதனைப் பல காலம் ஆட்சி செய்தவர் பிரடெரிக் (Fredrick The Great) கடவுள்மீது நம்பிக்கை இல்லாத இவர், ஒரு கூட்டத்தில் இயேசுவைக் கேலி செய்து பேசிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு கூட்டத்தில் இருந்த யாவரும் சிரித்தபோது, அதே கூட்டத்தில் இருந்த, இயேசுவின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த படைத்தளபதியான வான் சிலாந்து (Von Zealand) மன்னரைப் பார்த்து, “மன்னா! நீங்கள் செய்வது மிகப்பெரிய தவறு. உங்களிடம் நான் இப்படிப் பேசுவதால், என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதற்காக நான் அஞ்சப் போவதில்லை. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் நாட்டிற்காக முப்பத்து எட்டு முறை போராடி வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றேன். என்னை நீங்கள் கொன்றாலும் பரவாயில்லை. ஏனெனில், நீங்கள் என்னைக் கொல்லும்போது, நான் இயேசுவோடு ஒன்றிணைவேன்” என்று துணிவோடு பேசினார். இவரது பேச்சைக் கேட்ட மன்னர் பிரடெரிக், “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று மூன்று முறை சொல்லி, மன்னிப்புக் கேட்டார் கிறிஸ்துவுக்கு எதிராக மன்னர் பேசியபோது, அதைத் தவறு என்று துணிவோடு எடுத்துரைத்து வான் சிலாந்து கிறிஸ்துவின்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கை வெளிப்படுத்தினார். நாமும் இயேசுவின்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையைத் துணிவோடு எடுத்துரைத்து, அவருக்குச் சான்று பகர்வோம். ஆண்டவரின் வார்த்தை “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்” (மாற் 6: 34). தீர்மானங்கள் 1) இயேசுவை நம் வாழ்வாலும் வார்த்தையும் அறிவிப்போம். 2) தீமை ஒருநாளும் வெற்றி கொள்ளாதவாறு பார்த்துக் கொள்வோம். தீமையை நன்மையால் வெல்வோம். 3) பிணக்குகளைத் தவிர்த்து, ஒருவர் மற்றவருடன் இணக்கத்தோடு வாழ்வோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்