சாமானிய மக்களுக்கு கிடைக்காத கிரீன் காரிடார்.. 11 நிமிடத்தில் ஐபிஎல் வீரர் மருத்துவமனை சென்ற ரகசியம்
டெல்லி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது தலையில் பலத்த காயமடைந்த டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் லுங்கி நிகிடி, கடும் போக்குவரத்து நெரிசலிலும் வெறும் 11 நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் இந்திய தலைநகர் டெல்லியில், ஒரு கிரிக்கெட் வீரருக்கு மட்டும் எப்படி இந்த இது நடந்தது என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணி துரத்திய போது, ஆட்டத்தின் 2வது ஓவரில் அக்சர் படேல் பந்துவீசினார். அப்போது பேட்ஸ்மேன் பிரியான்ஷ் ஆர்யா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான 30 வயதான லுங்கி நிகிடி நிலைதடுமாறி மல்லாக்க கீழே விழுந்தார். அப்போது அவரது தலை தரையில் மிக பலமாக மோதியது. தலை மற்றும் கழுத்து வலியால் அவர் துடித்ததை அடுத்து, உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார்.
டெல்லி ராஜேந்தர் நகரில் உள்ள ஒரு தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு உள்ள 7.5 கிலோமீட்டர் தூரத்தை கடக்க நெரிசல் இல்லாத நேரத்திலேயே 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். அதிலும் மாலை நேர கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த நேரத்தில், நிகிடியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வெறும் 11 நிமிடங்களில் மருத்துவமனையை சென்றடைந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து டெல்லி போக்குவரத்து போலீசார் தற்போது விளக்கமளித்துள்ளனர். லுங்கி நிகிடியின் ஆபத்தான நிலைமையை உணர்ந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டெல்லி போக்குவரத்து போலீசாரும், கட்டுப்பாட்டு அறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல கிரீன் காரிடார் எனப்படும் பிரத்யேக பசுமை வழித்தடத்தை உடனடியாக அமைத்துள்ளனர்.
இதனாலேயே எந்தவித போக்குவரத்து நெரிசலும் இன்றி அவர் 11 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தார். சிடி ஸ்கேனில் பெரிய பாதிப்பு இல்லை என தெரியவந்ததால் அவர் அன்றைய தினமே அவரது அறைக்கு திரும்பினார். அவருக்கு பதிலாக விப்ராஜ் நிகம் மாற்று வீரராக களமிறங்கினார். இந்த போட்டியில் டெல்லி அணி படுதோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் போன்ற பணக்கார தொடரில் விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர் காயமடைந்தால், உடனடியாக ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்தி கிரீன் காரிடார் அமைத்துக் கொடுக்கும் அரசு மற்றும் காவல்துறை நிர்வாகங்கள், அன்றாடம் அவசர சிகிச்சைக்காக நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸுக்குள் உயிருக்குப் போராடும் சாமானியர்களுக்கு இதுபோன்று எப்போதாவது சிறப்பு சலுகை அளித்துள்ளதா என்ற ஆதங்கம் சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சாமானியர்களுக்கு ஒருபோதும் இந்த அளவிலான முன்னுரிமையோ, கிரீன் காரிடார் வசதியோ கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை!
#🚹உளவியல் சிந்தனை