பைபிள் வாசகங்கள்:
ஏப்ரல் 18 : முதல் வாசகம்
நீர் முழுஉள்ளத்தோடு நம்பினால் தடையில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 26-40
அந்நாள்களில்
ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
தூய ஆவியார் பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார். பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: “அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக் குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப்பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”
அவர் பிலிப்பிடம், “இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறுகிறார்? தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவு செய்து கூறுவீரா?” என்று கேட்டார். அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.
அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார். உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தார்.
அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனேயே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார். பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்
திபா 66: 8-9. 16-17. 20 (பல்லவி: 1)
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அல்லது: அல்லேலூயா.
8
மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.
9
நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை. - பல்லவி
16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17
அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. - பல்லவி
20
என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 51
அல்லேலூயா, அல்லேலூயா!
“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
ஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51
அக்காலத்தில்
இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.
தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
--------------------------------------------------------------------
கற்றுத் தரும் ஆண்டவர்
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் வியாழக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 8: 26- 40
திருப்பாடல் 96: 8-9, 16-17, 20 (1)
II யோவான் 6: 44-51
கற்றுத் தரும் ஆண்டவர்
அறியாமையை அகற்றி, அறிவில் வளர்வோம்
ஆண்டவராகிய கடவுள் நம்முடைய வாழ்வில் செய்த நன்மைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து, அவற்றிற்கெல்லாம் நாம் நன்றி செலுத்தத் தொடங்கினால் வாழ்நாள் போதாது.
எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை ஆண்டவராகிய கடவுள் விடுவித்து, அவர்களை வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் குடியமர்த்தினார். நடுவில் அவர்களைச் செங்கடலையும் யோர்தான் ஆற்றினையும் அற்புதமாகக் கடக்கச் செய்தார். இப்படியெல்லாம் நன்மைகளைச் செய்த ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 66. இத்திருப்பாடல், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் செய்த நன்மைகளைப் பட்டியலிட்டாலும், அனைத்துலகோருக்கும் ஆண்டவர் நன்மை செய்திருப்பதால் அவரை அனைவரும் போற்றி ஆர்ப்பரிப்பது தகுதியும் நீதியுமாகும்.
கடவுள் நம் அனைவருக்கும் செய்த நன்மைகளுள் மிகவும் முக்கியமான ஒன்று ‘கற்றுத் தந்தது’. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு வாழ்வு தரும் உணவைப் பற்றிப் பேசும்போது, “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” என்று இறைவாக்கினர் எசாயா நூலில் (எசா 54: 13) இடம்பெறும் இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார். யூதர்களைப் பொறுத்தளவில் கடவுள் கற்றுத்தராமல் எவரும் அறிந்துகொள்ள முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. அதையே இயேசு வாழ்வளிக்கும் உணவைப் பற்றிப் பேசும்போது மேற்கோள் காட்டுகின்றார். யூதர்கள் அழிந்து போகும் மன்னாவைப் பற்றிப் பேசும்போது இயேசு அழியா உணவைப் பற்றி அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தொண்டர்களில் ஒருவரான பிலிப்பு எத்தியோப்பிய நிதியமைச்சருக்கு இயேசுவைப் பற்றிக் கற்பிக்கின்றார். அவரும் இறுதியில் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பி கொள்கின்றார். இதன்மூலம் கற்றுத் தருதல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆகையால், நமக்குக் கற்றுத் தரும் ஆண்டவரைப் போற்றிப் புகழும் நாம், அவர் கற்றுத் தந்ததை மற்றவருக்குக் கற்றுத் தந்து, அவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வோம்.
கற்றுத்தந்த மைக்கேல் ஆஞ்சலோ
உலகப் புகழ்பெற்ற ஓவியரான மைக்கேல் ஆஞ்சலோ தன்னிடம் ஓவியம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு வந்த இளைஞர்களுக்கு ஓவியம் கற்றுக்கொடுத்து வந்தார் ஒருநாள் தன்னுடைய பயிற்சிப் பட்டறையில் ஓவியம் வரைய இருந்த ஓர் இளைஞனிடமிருந்து தூரிகையை வாங்கி, சிறிதுநேரம் ஓவியம் வரைந்துவிட்டு, அதை முடிக்காமலேயே தூரிகையை அவனிடம் திருப்பித் தந்தார்.
ஒரு வினாடி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இளைஞன் மைக்கேல் ஆஞ்சலோவிடம், “ஓவியத்தை வரையத் தொடங்கி, அதனை முடிக்குமுன்னே தூரிகையை என்னிடம் தந்துவிட்டுப் போகிறீர்களே! இந்த ஓவியத்தை நான் எப்படி முடிப்பது?” என்றான். அப்போது மைக்கேல் ஆஞ்சலோ அவனிடம், “நான் ஓவியம் வரையும்போது பார்த்தாய் அல்லவா! அது தந்த உத்வேகத்தைக் கொண்டு, இந்த ஓவியத்தை வரைந்து முடி” என்றார்.
மைக்கேல் ஆஞ்சலோ தன்னிடம் பயிற்சி பெற்ற இளைஞனுக்கு எப்படி ஓவியம் வரையவேண்டும் என்று கற்றுத் தந்தாரோ, அப்படி இயேசுவும் நமக்கு எதைக் கற்பிக்க வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கின்றார். அதனால் அவரது போதனையை, அவரது வாழ்வை மற்றவருக்கும் கற்பித்து, இயேசுவை எல்லாரும் அறியச் செய்வோம்
ஆண்டவரின் வார்த்தை
“நான் உங்களுக்குக் கற்றுத் தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள்” (இச 4:1).
தீர்மானங்கள்
1) ஆண்டவரைப் பற்றி அறிவில் வளர உறுதி ஏற்போம்.
2) நாம் கற்றுக்கொண்ட கடவுளின் வார்த்தையை மற்றவருக்கும் கற்றுத் தருவோம்.
3) நம்முடைய வாழ்வில் பல நன்மைகளைச் செய்திருக்கும் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வோம் #பைபிள் வசனங்கள்
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.