#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 சிந்தனை*
*நூறு மடங்கு பயன்!*
ஓர் இளைஞன் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவிருந்தான். அப்போது அவனுடைய தாய் அவனிடம் ஒரு திருவிவிலியத்தைக் கொடுத்து, “மகனே! இது சாதாராண நூல் அல்ல, எத்தனையோ மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் போட்ட நூல். இதனை நீ எக்காரணத்தைக் கொண்டும் தூசுபடிய விட்டுவிடாதே. அப்படிச் செய்தால் பாவம் உன்மேல் வெற்றிகொண்டுவிடும்” என்றார்.
இளைஞனும் தன்னுடைய தாய் தனக்குச் சொன்ன அறிவுரையைக் கருத்தாய்க் கேட்டுக்கொண்டு விட்டு வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கு அவனுக்கு புதிதாக நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். அவர்கள் அவனைச் சுக போக வாழ்க்கை வாழ எவ்வளவோ தூண்டினார்கள்; ஆனால், அவன் தன் தாய் சொன்னது போன்று திருவிவிலியத்தைத் தூசி படிய விடாமல் தொடர்ந்து வாசித்து வந்ததால், அவர்கள் விரித்த மாய வலையில் அவன் வீழ்ந்திடாது இருந்தான்.
இதற்குப் பின்பு வந்த நாள்களில் அவன் ‘திருவிவிலிய வாசிப்புக் குழு’ என்றொரு குழுவைத் தொடங்கி, திருவிவிலியம் வாசிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினான். நாளடைவில், அந்தக் குழு அவன் படித்த பல்கலைக்கழகம் முழுவதும் பரவி, திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கி, அதன்மூலம் ஏராளமான நன்மைகளை அவர்கள் அடையத் தொடங்கினார்கள்.
கடவுள் மனிதர்களுக்கு அருளிய மிகப்பெரிய கொடை அவரது வாழ்வளிக்கும் வார்த்தைகள் அடங்கிய திருவிவிலியம். அதனை நாம் வாசித்து வாழ்வாக்கும்போது மிகுந்த பயன் தருவோம். இத்தகைய மேலான செய்தியைத் தாங்கி வருகின்றது பொதுக் காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை. நாம் எப்படி கடவுளின் வார்த்தையை வாழ்வாக்குவது? அதில் உள்ள தடைகள் என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
*வல்லமையுள்ள வார்த்தை*
“இறைவனின் வார்த்தையே விதை. அதை விதைப்பவர் கிறிஸ்துவே. அவரைக் கண்டடைவோர் எல்லாரும் என்றென்றும் நிலைத்திருப்பார்” என்று நாம் இன்று நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியாகப் பாடினோம். இயேசுவுக்குச் செவிகொடுப்போர் நிலைவாழ்வை அடைகின்றனர் என்பதையே இவ்வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன; ஆனால், நடைமுறையில் எத்தனை பேர் இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றார்கள் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
முதல் வாசகம் மழையைப் போல பனியைப் போல கடவுளின் வார்த்தையும் எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ, அதனை நோக்கத்தை நிறைவேற்றாமல் போகா என்கிறது. அப்படியானால், கடவுளின் வார்த்தை எத்துணை வல்லமையானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
*நான்கு விதமான மனிதர்கள்*
ஒருசிலர் இறைவார்த்தையைக் கேட்கலாம்; ஆனாலும் அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை; அல்லது இறைவார்த்தையைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர்களது உள்ளம் மூடியே இருக்கும். இதற்கு இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். இவர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்டாலும் அவரிடம் குற்றம் காணும் நோக்கத்துடன் அதனைக் கேட்டதால், அவருடைய வார்த்தைகளில் இருந்த ஆழமான மறையுண்மையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்படிப்பட்டவர்களை இயேசு இன்றைய நற்செய்தியில் வழியோர நிலத்திற்கு ஒப்பிடுகின்றார்.
மத்தேயு நற்செய்தியில் இயேசு, “இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” (மத் 24: 13) என்பார். ஒருசிலர் இறைவார்த்தையை ஆர்வமாய்க் கேட்பார்கள்; ஆனால், அந்த வார்த்தையில் நிலைத்திருக்காமல், உடனே தடம் புரண்டுவிடுவார்கள். இதற்கு இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைச் சொல்லலாம். அவர்கள் இயேசுவின் வார்த்தையை ஆர்வமாய்க் கேட்டாலும், உடனே அதனை மறந்துவிட்டார்கள். இல்லையென்றால், அவர்கள், இயேசுவைச் சிலுவையில் அறையும் (மத் 27: 23) என்று உரக்கக் கத்தியிருக்க மாட்டார்கள். இப்படி உறுதியற்ற மனிதர்களைத்தான் இயேசு மண்ணில்லா பாறை நிலத்திற்கு ஒப்பிடுகின்றார்.
“நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 6: 24) என்பது இயேசுவின் அற்புதமான போதனைகளில் ஒன்று. பலருக்குக் கடவுளும் முக்கியம், உலக செல்வமும் முக்கியம். இப்படி அவர்கள் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதால், உலக ஆசை அவர்களை நெருக்கி, அவர்களைப் பயன் தரமுடியாமலே செய்துவிடுகின்றது. இதற்கு இயேசுவின் சீடர்களுள் ஒருவனும், அவரைக் காட்டிக் கொடுத்தவனுமான யூதாசு இஸ்காரியோத்துவை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவன் இயேசுவின் சீடனாய் இருந்தபோதும், பணத்தாசையால் இயேசுவைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தான். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் இயேசு முட்செடி நிலத்திற்கு ஒப்பிடுகின்றார்.
நற்பெயர் பெற்றவர் யார் என்பதற்கு, “அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்” (திபா 1: 1-2) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுவார். ஒருவர் கடவுளின் வார்த்தையைக் கேட்பதோடு நின்று விடாமல், அதனை ஆழ்ந்து தியானிக்க வேண்டும். அதன்படி வாழவேண்டும். அப்போதுதான் அவரால் நற்பேறு பெற்றவராக முடியும். மரியா கடவுளின் வார்த்தையைக் கேட்டார். அத்தோடு நின்றுவிடாமல் அதனை ஆழ்ந்து தியானித்து, அதன்படி வாழ்ந்து நல்ல நிலைமாய் மாறி, நமக்கெல்லாம் முன் மாதிரி காட்டினார். இந்த நான்கு வகையான மனிதர்களில் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
*இடர்களும் சவால்களும்*
கடவுளின் வார்த்தை எவ்வளவு வல்லமையானது என்பதையும், அதன்படி வாழும்போது மிகுந்த பயன் தரலாம் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்தோம்.
கடவுளின் வார்த்தையின்படி வாழ்வது ஒன்றும் அவ்வளவு எளிதானது இல்லை. அதன்படி வாழும்போது நாம் நிறைய சவால்களையும் துன்பங்களையும் சந்தித்தாக வேண்டும். எத்தனையோ புனிதர்கள் கடவுளின் வார்த்தையின்படி வாழ்ந்ததால்தான் துன்பங்களையும் அவமானங்களையும் சவால்களையும் சந்தித்தார்கள். இன்றைக்கும் கூட நாம் எல்லாரையும் போல உலகப் போக்கிலான வாழ்க்கை வாழும்போது துன்பங்களைச் சந்திப்பதில்லை. கடவுளின் வார்த்தையின்படி வாழும்போதுதான் துன்பங்களைச் சந்திக்கின்றோம்; தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றோம்; ஆனால், இந்தத் துன்பங்கள் எல்லாம் சிறிது காலத்திற்குத் தான்; கடவுள் தரும் மாட்சிதான் நீடித்திருக்கும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும் பவுலின், “இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை” என்ற வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
ஆகையால், நாம் எத்தகைய துன்பங்களும் இடர்களும் வந்தாலும் இறைவார்த்தையில் நிலைத்து நிற்க வேண்டும். அப்போதுதான் நம்மால் மரியாவைப் போன்று நூறு மடங்கு பயன் தர முடியும்.
*சிந்தனைக்கு*
“கடவுளின் வார்த்தையை அறியாமல் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியாது” என்பார் ஜாக் விர்ட்சன் என்ற அறிஞர். ஆகையால், நாம் கடவுளின் வார்த்தையைக் கருத்தூன்றி வாசித்து, அவரது திருவுளத்தை உணர்ந்து, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*