ஃபாலோவ்
அன்புமணி ராமதாஸ்
@anbumani_ramadoss
1,820
போஸ்ட்
51,955
பின்தொடர்பவர்கள்
அன்புமணி ராமதாஸ்
508 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
புதிய முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பாமகவின் வாழ்த்துகள்: சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! தமிழ்நாட்டின் 12-ஆம் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் அவர்களும், அவருடன் 9  பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும். த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதலமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
521 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
உலகின் ஆதியும், அந்தமும் அன்னையரே... அவர்களின் அன்புக்கும், தியாகத்திற்கும் எல்லையே இல்லை! உலகை எந்த அளவுகோலைக் கொண்டும் துல்லியமாக அளக்க முடியாது. ஆனால், அம்மா என்ற மூன்றெழுத்திற்குள் ஒட்டுமொத்த உலகமும் அடக்கம். இந்த உலகின் ஆதியும், அந்தமும் அன்னை தான். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகைக் கூட அளந்து விடலாம். ஆனால், அன்னையின் அன்பு, தியாகம், கருணை, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, அயராத உழைப்பு, ஊக்கமளிப்பு ஆகியவற்றை இந்த உலகின் எந்த தொழில்நுட்பத்தாலும் அளவிட முடியாது. ஏனென்றால், அவற்றுக்கு எல்லை கிடையாது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அன்னையர்களின் தினம் இன்று. மனிதர்கள் தங்களின் வாழ்வில் வாங்கிய அனைத்துக் கடன்களையும் அடைத்து விட முடியும். ஆனால், அன்னைக்கான நன்றிக்கடனை நம்மால் அடைக்கவே முடியாது. அதை அடைப்பதற்கான முயற்சி நமது வாழ்க்கை. ஆனால், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்த முயற்சியில் நம்மால் வெற்றி பெற முடியாது. ஆகவே, நம்மால் இயன்ற வகையில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்; ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம். அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை! #mothersday | #happymothersday ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
641 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
+2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 12&ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 0.17% அதிகமாக நடப்பாண்டில் 95.20% மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காகவும், சிறந்த முறையில் உயர்கல்வி கற்பதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை என்னவென்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான்.  அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும்  வாழ்த்துகிறேன். அதே நேரத்தில் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது, அரசு பள்ளிகளின் நிலை, தரம் ஆகியவை குறித்து, குறிப்பாக வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து பெரும் கவலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள  7536 மேல்நிலைப்பள்ளிகளில் 2639 பள்ளிகள், அதாவது 35% பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில் மொத்தமுள்ள 3,152 தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 1854 பள்ளிகள், அதாவது 58.81%  பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,168 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 489 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது 15.43% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் மிக மோசமாகவே இருக்கிறது. மாநிலத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 95.20% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 27 மாவட்டங்களின் சராசரி அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் இந்த அளவை எட்ட முடியவில்லை. ஈரோடு, சிவகங்கை, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், இராமநாதபுரம், நாமக்கல், தூத்துக்குடி, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 95%&ஐ தாண்டியிருக்கிறது. எட்டு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 90%க்கும்  கீழ் சரிந்திருப்பதும், அந்த மாவட்டங்கள் டெல்டா மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதும் கவலையளிக்கக் கூடியவை. அதேபோல், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 10 இடத்தை பிடித்துள்ள விழுப்புரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தருமபுரி, மயிலாடுதுறை ஆகியவற்றில் 7 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், மீதமுள்ள 3 மாவட்டங்கள் காவிரி பாசன பகுதிகளையும் சேர்ந்தவையாகும். தேர்ச்சி விகிதத்தில் கடைசி 11 முதல் 15 இடங்களைப் பிடித்திருக்கும் திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகியவற்றில் 3 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், நாகை மாவட்டம் டெல்டாவையும் சேர்ந்தவை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் வட தமிழகத்தை சேர்ந்தவை என்பதிலிருந்தே கல்வித்தரத்தில் வட தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை உணர முடியும். வட மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியிருப்பதில் ஆச்சரியமடையவும், அதிர்ச்சியடையவும் எதுவும் இல்லை. பத்தாம் வகுப்பு, 12&ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் சுமார் 45 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்கள் பின்தங்கியே தான் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களும் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கத் தொடங்கியுள்ளன. பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்களும், அண்மைக்காலமாக காவிரி பாசன மாவட்டங்களும் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களை கண்டறிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களை நடத்துவதற்குக் கூட ஆசிரியர்கள் இல்லை. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தப் பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில்  மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று செல்வது தான் இதற்கு காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியரும், பட்டியல் சமூகத்தினரும் தான். அவர்களில்  வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில் தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை.  காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்;  அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது. வாழ்வாதாரப்பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர்.  இந்த சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு கண்டால் தான் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் வட தமிழ்நாடு பின்தங்கியிருப்பதற்கு முடிவு கட்ட முடியும். தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழ்நாடு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அவற்றின் கட்டமைப்புகளையும், மனிதவளத்தையும் மேம்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதை பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இனியாவது அதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
603 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு இரங்கல். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் விபத்தில் சிக்கி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகம் தொய்ந்து கிடந்த காலத்தில் திறமையான இளம் இயக்குனர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளித்தவர். அதன் மூலம் தமிழ்த் திரையுலகின் வளர்ச்சிக்கு பங்களித்தவர். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்களை இழந்து வாடும் நடிகர்கள் ஜீவா, இரமேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
517 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
தமிழக மக்களின் நலன் - உரிமைகளுக்காக  பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்! தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கும் அவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளாக மிக மோசமான ஆட்சியை நடத்தி வந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தது. திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு மகத்தானது. திமுகவுக்கு எதிரான அலையை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அறுவடை செய்யும்; அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால், தமிழக மக்களின் விருப்பமும், தீர்ப்பும் வேறாக அமைந்திருக்கிறது. மக்களின் இந்த முடிவை பா.ம.க. ஏற்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே மக்களின் நலன்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதியாக போராடி வருகிறது. இனி வரும் காலங்களிலும் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களத்தில் கடுமையாக உழைத்த  கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பா.ம.க - கூட்டணி கட்சிகளுக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி  மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
538 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கத் தடை நீக்கம்: 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை! தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை, குறிப்பாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று  தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 16.08.2023-ஆம் நாள் அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடிப்படையில் இன்றைய நிலையில்,  7,731 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும்; ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் அரசு & தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,650 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும் முடியாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் முடியாத நிலை உருவானது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கை வெளியான உடனேயே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து 2024&25ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக இருந்த இந்த விதியை மருத்துவ ஆணையம் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்கு முன்பாக விண்ணப்பித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகளை கைவிடுவதாக கடந்த 27.04.2026ஆம் நாள் வெளியிட்ட அறிவிக்கையில் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையின்படி தமிழ்நாட்டில் எந்தவொரு  மாவட்டத்திலும் போதுமான கட்டமைப்பு வசதிகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியும்; குறிப்பாக தமிழ்நாட்டில் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களிலும்   அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அதுமட்டுமின்றி, நீண்ட காலமாக 100 மாணவர் சேர்க்கை இடங்களுடன் செயல்பட்டு வரும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக 150 இடங்களுடன் செயல்பட்டு வரும் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியும். இந்தக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் கூடுதலாக உருவாக்கப் பட்டால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1550 மாணவர்கள் கூடுதலாக மருத்துவம் படிக்க இயலும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஓர் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்  எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான 50 மாத ஆட்சியில் மட்டும் 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்காலத்தில் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான். ஆனால், அதன்பின் வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை 2025&ஆம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. திமுக அரசு நினைத்திருந்தால், அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்திருக்க முடியும். ஆனால், மக்கள் நலனிலோ, மாணவர்கள் நலனிலோ அக்கறை இல்லாத திமுக அரசு அதை செய்யவில்லை. தமிழ்நாட்டில் 1984-ஆம் ஆண்டு வரை வெறும் 8 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தான் தொடங்கப் பட்டிருந்தன. அதற்குப் பிந்தைய 35 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைந்த ஒவ்வொரு அரசும் குறைந்தது ஓர் அரசு மருத்துவக் கல்லூரியையாவது அமைத்துள்ளன. ஆனால், ஐந்தாண்டு ஆட்சி நடத்தியும் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்காத ஒரே அரசு என்ற அவப்பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெற்றிருக்கிறது. மருத்துவக் கல்வி வரலாற்றில் இந்த ஐந்தாண்டுகள் இருண்ட காலமாகவே பதிவு செய்யப்படும்.  திமுகவின் இந்த அநீதி விரைந்து களையப்பட வேண்டும். புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களிலும்   அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். அடுத்த சில நாள்களில் தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் இதற்கான நடவடிக்கையை பா.ம.க மேற்கொள்ளும். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
584 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
வெற்றி நமதே: வாக்கு எண்ணிக்கையின் போது பா.ம.க.- கூட்டணி கட்சிகளின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23&ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்  வரும் மே 4&ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக & பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21&ஆம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு & பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 23 & ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும்  வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பா.ம.க. பா.ஜ.க. அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4&ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே  நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4&ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்  நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில்  நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும். ஐந்தாண்டு காலமாக தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடித்த திமுக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அனைத்து வகையான தில்லுமுல்லுகளையும் அரங்கேற்றும். தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பலவும் கூட திமுகவின் சித்து விளையாட்டுகள் தான். மக்களுடன் மக்களாக களப்பணியாற்றி, அவர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த நமக்கு மக்களின்  மனநிலையும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபமும் நன்றாகத் தெரியும். அவ்வாறு இருக்கும் போது  செயற்கையாக சித்தரிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எவரும் நம்பத் தேவையில்லை. மாறாக, வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக  நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் வாக்கு எண்ணும் நாளான மே 4&ஆம் தேதி காலை 6.00 மணிக்கே  வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று விட வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து படிவங்களையும் முகவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவானதாக 17&சி படிவத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையும், அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளனவா? என்பதை சரிபார்க்க வேண்டும். அதன்பின்னர் தான் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவதற்கே அனுமதிக்க வேண்டும். எத்தகைய சூழலிலும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு, அதன் விவரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்கக் கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதியின் தேர்தல் அதிகாரி, பார்வையாளர் ஆகியோரிடம்  அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக அவர்களிடம் புகார் செய்ய வேண்டும். அதையும் மீறி முறைகேடுகளில் ஈடுபட எவரேனும் முயன்றால் உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே அஞ்சல் வாக்குகள் எண்ணி முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதிகபட்சமாக கடைசி இரு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக அஞ்சல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவதை பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் எந்த சூழலிலும் முகவர்கள் அவர்களின் கடமையிலிருந்து விலகக் கூடாது. தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவது இந்தத் தேர்தலின் முடிவுகள் தான். அதில் எந்த மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வெற்றி நமதே! ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
522 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
சுரண்டல்வாதிகளை ஒழித்து பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க தொழிலாளர் நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்! உலகை உயர்த்த உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட நாளான மே நாளைக் கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம். உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி. ஆனால்,  களச்சூழல் அத்தகையதாக இல்லை. உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது; பெரு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் நிலை மட்டும் மாறவில்லை. அவர்கள் இன்னும் சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இன்னும் கேட்டால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியத் தேவை 19&ஆம் நூற்றாண்டில்  எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிகத் தேவை இன்றைக்கு இருக்கிறது. உலகம் பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் நிலையில் தொழிலாளர்களின் விலங்கு மட்டும் உடையவில்லை. எந்த ஒரு இன்னலுக்கும் முடிவு உண்டு. அதேபோல், உழைக்கும் பாட்டாளிகள் மீது கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்ட சுரண்டலுக்கும் முடிவு உண்டு. அந்த முடிவு இப்போது நெருங்கி விட்டது என்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுப்பதன் மூலம் சுரண்டல்வாதிகளின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டி, பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறி, உலகெங்கும் வாழும் பாட்டாளிகளுக்கு மீண்டும் ஒரு முறை மே நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
626 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
ரூ.397 மின்மாற்றி கொள்முதல் ஊழலில் சிபிஐ விசாரணைக்கு ஆணை: திமுகவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி! தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு  ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.  2002-&-03 காலத்தில் நடைபெற்ற இந்த ஊழலின் விசாரணையை  திமுக அரசும், காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவும் திட்டமிட்டு தடுத்து வந்த நிலையில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. திமுக அரசின் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக  2024-ஆம் ஆண்டு  செப்டம்பர் 27-ஆம் தேதியும், கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதியும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அவற்றின் மீது திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இதே குற்றச்சாட்டு குறித்து  உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம்  அறப்போர் இயக்கம் 2023&ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி புகார் அளித்தது. ஆனால், அதன் மீதும்  திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்  அறப்போர் இயக்கமும்,  அதிமுகவும் தொடர்ந்த வழக்குகளில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.   திமுக ஆட்சியில் நடைபெற்ற ஆற்று மணல் கொள்ளை ஊழல், பணி நியமன ஊழல், அதிகாரிகள் பணியிட மாற்ற ஊழல், ஒப்பந்த ஊழல் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ரூ.397 கோடி  மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்தும் விசாரணை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது திமுகவின் ஊழல்களுக்கு எதிராக பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் மிக முக்கிய வெற்றியாகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021&-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50% வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  எடுத்துக்காட்டாக 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்க கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் 23.11.2021&-ஆம் நாள் திறக்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற 26 ஒப்பந்ததாரர்களும் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூ.13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தி விலையைக் குறைத்து  ரூ.12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூ.8,91,000 மட்டும் தான். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூ.7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7,87,311 என்ற விலைக்கு இராஜஸ்தான்  அரசு வாங்கியுள்ளது. அதாவது சந்தை விலையை விட 37% கூடுதலாக விலை கொடுத்து மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.  அதாவது ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு சந்தை விலையை விட 50% கூடுதலாக விலையை குறிப்பிட்டுள்ளனர். அதன்பின் மின்வாரியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க  சிறிதளவு விலையை குறைத்துள்ளனர். இவை அனைத்தும் திட்டமிட்டு  திரைக்கதை எழுதி நடத்தப்பட்ட நாடகம்.  ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையை குறிப்பிடவில்லை என்றால், அந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் அரசு பேச்சு நடத்தி, அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததிலிருந்தே இதில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகிறது .மின்மாற்றி கொள்முதலில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர் இராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் தான் காரணம்  என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும்  அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட வெகுமதிகளை வழங்கி வந்தது. மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமின்றி, ஒரு யூனிட்டுக்கு ரூ.20 வரை விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தது, வீடுகளுக்கு பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கு சந்தை விலையை விட 350% அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய பேரம் பேசி முடித்திருப்பது என  திமுக ஆட்சியில் ஊழலின் விளைநிலமாக மின்சாரத் துறை திகழ்ந்து வருகிறது.  இந்த அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்துவதுடன்  திமுக ஆட்சியின் பல்வேறு கால கட்டங்களில் மின்சாரத் துறையின் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில்  ரூ.6 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊழல் மற்றும் மக்கள்விரோத ஆட்சிக்காக சட்டமன்றத் தேர்தலில் மக்களால் தண்டிக்கப்பட்டிருக்கும்  திமுக,  சட்டத்தின்படியும் அதன் ஊழல்களுக்காக தண்டிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
519 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைத் தொடங்கி இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதை வரலாற்றுச் சாதனை என  திமுக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பில் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கும் நிலையில் இதை சாதனை என்று கூறுவது ஏமாற்றும் செயலாகும். தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் 31,336 பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் 6,218 பள்ளிகள் என மொத்தம் 37,554 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026&27ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1&ஆம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 27&ஆம் நாள் திங்கள் கிழமை வரை தொடக்கக் கல்வித்துறையின்  கீழ்  செயல்படும் 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் 6,796 குழந்தைகளும், இரண்டு முதல் எட்டு வரையிலான வகுப்புகளில் 8,176 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 12,711 மாணவர்கள்  புதிதாக சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் கொண்டாடுவதற்கு எதுவும்  இல்லை. 2025&26ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மே மாத இறுதி வரை 1.79 லட்சம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க திமுக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், மாணவர் சேர்க்கைத் தொடங்கி 58 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 54 நாள்களில், அதாவது ஏப்ரல் 23&ஆம் தேதி வரை 1.50 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்திருந்தார்கள். ஆனால், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. எந்த ஒரு ஆண்டிலும் முதலாம் வகுப்பில் தான் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வார்கள். அந்த வகையில் நடப்பாண்டில் 31,336 பள்ளிகளில் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். இதிலும் கூட ஒரு பள்ளியில் 6 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், இன்னொரு பள்ளியில் ஒரே ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று பொருள். ஒட்டுமொத்தமாக சில ஆயிரம் பள்ளிகளிலாவது ஒரு மாணவர் கூட இதுவரை சேராமல் இருந்திருக்கலாம். அது குறித்த விவரங்களை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கிறது. ஒரு காலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் இரு பிரிவுகளும், அதிகபட்சமாக 4 பிரிவுகளும் இருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 40 முதல் 50 மாணவர்கள் என ஒரே பள்ளியில் முதலாம் வகுப்பில் மட்டுமே 160 முதல் 200 மாணவர்கள் சேர்க்கப்பட்ட வரலாறு உண்டு. சில ஊர்களிலும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர முன்வந்ததால்,  அருகில் உள்ள கிராமங்களில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. அவை அனைத்தும் அரசு பள்ளிகள் வரலாற்றில் பொற்காலங்கள். ஆனால், இப்போது ஒரு பள்ளியில் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேரும் அளவுக்கு அரசு பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளும் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 31, 336 பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டும் தான். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டுமே பயில்கின்றனர். அதே நேரத்தில் 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக விளக்குகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனநிலையை  குறை கூற முடியாது. அரசு பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோர் அனைவரும் தங்களின் பிள்ளைகளை அவற்றில் சேர்க்கவே விரும்புவர். ஆனால், அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோர் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துடிப்பதற்கு காரணம். இது அரசின் தோல்வியே தவிர பெற்றோரின் தவறு அல்ல. தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 3000 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.28 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை. இத்தகைய அவலச் சூழலில் அரசு பள்ளிகளால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமானால், அது அரசு பள்ளிகளால் மட்டுமே சாத்தியமாகும். அனைவராலும் தனியார் பள்ளிகளில் லட்சங்களைக் கொட்டி குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. எனவே, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு வரமாகக் கிடைத்த அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும். அதற்கான அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்,  போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், இவற்றுக்காக பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படும்  நிதியை அதிகரித்தல் உள்ளிட்டவை அடங்கிய சிறப்புத் திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். ##PMK2.0