ஃபாலோவ்
அன்புமணி ராமதாஸ்
@anbumani_ramadoss
1,677
போஸ்ட்
51,739
பின்தொடர்பவர்கள்
அன்புமணி ராமதாஸ்
18 காட்சிகள்
ஒரே ஆண்டில் ரூ.1.84 லட்சம் கோடி கடனை வாங்கிய திமுக அரசு: வருவாய் பற்றாக்குறை 66% உயர்வு - ரூ.77,223 கோடி எங்கே போனது? தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று ஆகும். சொந்த வரி வருவாயாக ரூ.2.06 லட்சம் கோடியை மட்டுமே ஈட்டியிருக்கும் திமுக அரசு, அதில் 90 விழுக்காட்டை, அதாவது 1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கிக் குவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ. 1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026&27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று தாக்கல் செய்தார். இடைக்கால நிதிநிலை அறிக்கை  என்பதால் இதில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், 2025&26ஆம் ஆண்டிற்கான திமுக அரசின்  நிதிச் செயல்பாடுகள் தமிழ்நாட்டை சீரழித்து, கடன் வலையில் வீழ்த்துவதாக அமைந்திருக்கின்றன. திமுக அரசின் மிக மோசமான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் கணிக்கப்பட்டதை விட 21% அதிகமாக ரூ.1 லட்சத்து 84,551 கோடியை கடனாக மு.க.ஸ்டாலின் அரசு வாங்கிக் குவித்திருக்கிறது. ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும். அதன்படி பார்த்தால், 2025&26ஆம் ஆண்டில் மூலதனச் செலவாக ரூ.51,443 கோடியை மட்டுமே செலவழித்திருக்கிறது. இது 2025&26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.57,231 கோடியை விட ரூ.6788 கோடி குறைவாகும். ரூ.51,443 கோடிக்கு மூலதனச் செலவுகளை செய்துள்ள திமுக அரசு, அந்த அளவுக்கு மட்டும் தான் கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை விட மூன்றரை மடங்கு அதிகமாக ரூ.1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது. இதை விட மோசமான நிதி மேலாண்மை இருக்க முடியாது. வாங்கிய கடனில் மூலதன செலவுகளை செய்தது போக மீதமுள்ள சுமார் ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? கடந்த காலங்களில் வாங்கிய கடன்களில் ரூ.55,844 கோடி கடன் நடப்பாண்டில் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை நடப்பாண்டில் கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியிலிருந்து தான் திமுக அரசு செலுத்தியுள்ளது. புதிய கடனை வாங்கி, பழைய கடனை அடைக்கும் அற்புதமான நிதி நிர்வாகத்தைத் தான் திமுக செய்திருக்கிறது. கடனை அடைக்க செலுத்தப்பட்ட தொகையும் போக, கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியில் ரூ.77,223 கோடி மீதமிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை எங்கு போனது என்பது தெரியவில்லை. வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரியை ஏற்படுத்துவதாகக் கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை ஒழிக்கப்படும் என்று  ஒவ்வொரு ஆண்டும் கூறி வந்தது. ஆனால், இன்று வரை திமுக அரசு வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்கவில்லை;  மாறாக உயர்த்தி வைத்திருக்கிறது. 2025=26ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசுக்கு நிதி மேலாண்மைத் திறன் இருந்திருந்தால் இதை இயன்றவரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், இலக்கை விட 66%, அதாவது ரூ.27,584 கோடி அதிகமாக ரூ.69,219 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.   அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட வருவாய்ச் செலவுகளைக் கூட திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை; அதைக் கூட கடன் வாங்கித் தான் அரசு செலவு செய்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருந்தால் தமிழக அரசு தேவையின்றி கடன் வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்காது. மூலதன செலவுகளுக்காக மட்டும் கடன் வாங்கி, மொத்தக் கடன் சுமையை குறைத்திருக்க முடியும். ஆனால், அதற்கான திறனும், அறிவும் திமுக அரசுக்கு இல்லை. வருவாயைப் பெருக்குவதும், அதற்குள் செலவு செய்வதும் தான் சிறந்த நிதி நிர்வாகம் ஆகும். ஆனால்,  இந்த இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. 2025&26ஆம் ஆண்டில் ரூ.2.20 லட்சம் கோடி சொந்த வரி வருவாய் ரூ.2.06 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இது இலக்கை விட ரூ.14,355 கோடி, அதாவது 6.50% குறைவு ஆகும். அதேபோல், வரி அல்லாத வருவாய் இலக்கை விட 7.82%, அதாவது ரூ.2554 கோடி குறைந்து விட்டது. மொத்த வருவாயும் ரூ.3.31 லட்சம் கோடி என்ற இலக்கில் இருந்து ரூ.21,871 கோடி (6.6%) குறைந்து ரூ.3.09 லட்சம் கோடியாக சுருங்கி விட்டது. அதே நேரத்தில் அரசின் வருவாய் செலவுகள் ரூ.5113 கோடி அதிகரித்து ரூ.3 லட்சத்து 78,917 கோடியாக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கடன் வாங்கிக் குவித்ததைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யப் படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952-ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020-&21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.96 லட்சம் கோடி ஆகும். 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில்  வாங்கிக் குவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிலுள்ள ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சமும், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சமும் கடன் சுமையை மு.க.ஸ்டாலின் அரசு சுமத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும். தமிழ்நாடு திவாலாவதை தடுக்க வேண்டும் என்றால், திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
437 காட்சிகள்
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய முடிவா? இளைஞர்களின் 13 ஆண்டு கனவை திமுக அரசு சிதைத்து விடக்கூடாது! தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு திசம்பர் 27-ஆம் நாள் நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் இன்று வரை  வெளியிடப்படவில்லை. இதனால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் நியமனம் ரத்து செய்யப்படலாம் என்று வெளியாகியுள்ள செய்திகள் தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர்  16&ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் தொடங்கி  நவம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள் கடந்த திசம்பர் 27-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை ஜனவரி 5-ஆம் தேதி வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், அவற்றின் மீதான ஆட்சேபனைகளை ஜனவரி 13-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தது. வழக்கமாக விடைக்குறிப்புக்கான ஆட்சேபனைகள் பெறப்பட்ட ஒரு வாரத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை ஜனவரி 13-ஆம் தேதி ஆட்சேபனைகள் பெறப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்று வரை போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படும் சூழல் உள்ள நிலையில், ஆள்தேர்வுக்கான முடிவுகள், வழக்கமாக வெளியிடப்படுவதை விட விரைவாக வெளியிடப்பட வேண்டும். ஆனால், அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் மட்டும் தாமதம் செய்யப்படுகிறது. தாமதத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், உதவிப் பேராசிரியர்களை உடனடியாக தேர்வு செய்து நியமன ஆணைகளை வழங்கினால் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருக்கும்; அதற்கு அரசிடம் பணம் இல்லை என்பதால் தான் போட்டித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தெரியவருகிறது. இது உண்மையாக இருந்தால், இந்தத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்போரின் சாபம் திமுகவை சும்மா விடாது. மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையையும், கோடைக்கால முன்பணமும் சேர்த்து ஒருவருக்கு ரூ.5,000 வீதம் ரூ.6550 கோடியை முன்கூட்டியே ஒரே நாளில் வழங்க முடிந்த திமுக அரசு, ஒரு மாதத்திற்கு ரூ.20 கோடி ஊதியம் வழங்க நிதி இல்லை என்று கூறி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை இரத்து செய்ய முயல்வது மிகக் கொடிய சமூக அநீதி ஆகும். இதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 11 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் உள்ளன. அவற்றில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களையெல்லாம் நிரப்பாமல் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல் கட்டமாக 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு இரு ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பைக் கூட திமுக அரசு வெளியிடவில்லை.  அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டிய பிறகு  2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பம் செய்தவர்களுக்கு 04.08.2024 ஆம் நாள் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்,  திடீரென அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக 2024-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் நாள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்பின்  2025-ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில்  உதவிப் பேராசிரியர் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.  ஆனால், அதுவும் நடக்கவில்லை. ஒருவழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இப்போதும் அதுவும் ரத்து செய்யப்படும் என்றால் அது தமிழ்நாட்டு மக்களையும், உதவிப் பேராசிரியர் பணிக்காக கடந்த 13 ஆண்டுகளாக காத்திருப்பவர்களையும் முட்டாள்களாக்கும் செயலாகும். 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக 35 புதிய கலைக்கல்லூரிகளைத் திறந்தது. அவற்றில் 420 புதிய உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட திமுக அரசு நியமிக்கவே இல்லை. மருத்துவர்களையே நியமிக்காமல் மருத்துவமனைகளை திறந்தும், பேராசிரியர்களையே நியமிக்காமல் கல்லூரிகளைத் திறந்தும் சாதனை படைத்த ஒரே அரசு உலகிலேயே திமுக அரசு மட்டும் தான். பணத்தைக் கொண்டு விளம்பரங்களைச் செய்வதன் மூலம் தங்களின் தோல்விகளையும், துரோகங்களையும் மறைக்க நினைக்கிறது திமுக அரசு. அரசு கல்லூரிகளுக்கு நீண்ட காலமாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், அப்பணிக்காக காத்திருக்கும் இளைய சமுதாயத்தினர் கடுமையான ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒருமுறை  உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டல், அந்தப் பணிக்காக காத்திருப்பவர்கள் அதில் சேருவதற்கான வயது வரம்பை கடந்து விடுவார்கள். அது அவர்களின் கனவை சிதைத்து விடும். எனவே, அத்தகைய நிலையை ஏற்படுத்தி விடாமல் 2708 உதவிப் பேராசிரியர் பணிக்காக போட்டித்தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, தகுதியானவர்களை நியமன ஆணைகளை வழங்க வேண்டும். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
552 காட்சிகள்
பாட்டாளி மக்கள் கட்சியின், பாட்டாளி மாணவர் சங்க மாநில பொதுக்குழு, சென்னையில் பங்கேற்று உரையாற்றிய போது.! ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
469 காட்சிகள்
அவசரம், அவசரமாக 50 கருங்கல் குவாரிகள் ஏலம்: கிடைத்தவரை சுருட்டும் கனிமவளக் கொள்ளை திமுகவை மக்கள் விரட்டியடிப்பர்! தமிழ்நாட்டில் சேலம், இராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 50 கருங்கல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு அவசர, அவசரமாக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. தமிழக வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு குவாரிகள் ஏலம் விடப்பட்டதில்லை எனும் நிலையில், 50 குவாரிகளுக்கு குத்தகை வழங்குவதிலிருந்தே திமுக அரசு கிடைத்தவரை சுருட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உரிமம் பெற்று 1845 கருங்கல் குவாரிகள், சட்டவிரோதமாக 2000&க்கும் மேற்பட்ட குவாரிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்குவாரிகள் அனைத்திலுமே விதிகளை மீறி கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தான் கூடுதலாக 50 குவாரிகளுக்கு உரிமம் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த குவாரிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்குவதற்கான ஏல ஒப்பந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். முடிந்தவரை தேர்தல் அறிவிப்பு  வெளியாவதற்கு முன்பாகவே குத்தகை வழங்குவதற்கான நடைமுறைகளை முடிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக அரசு இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதில் எந்த வியப்பும் இல்லை. ஆட்சிக்காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் எந்த அரசும் இவ்வளவுக் கொள்ளை அடித்ததில்லை என்று கூறும் அளவுக்கு திமுக அரசு கடைசி நேரக் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள் என்றால், அது ஆற்று மணல் கொள்ளையும், இயற்கை வளக் கொள்ளையும் தான். இந்தக் கொள்ளைகளில் ஆண்டு மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. மக்கள் நலனிலும், நேர்மையான நிர்வாகத்திலும் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், இயற்கைவளக் கொள்ளைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை திமுக செய்யவில்லை. மாறாக, கனிமவளக் கொள்ளையர்களின் கனிமக் கொள்ளைக்கு துணை போகும் வகையில் பாவ மன்னிப்பு வழங்கும் திட்டத்தை திமுக அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர்.  உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அதிகபட்சமாக 24 மாதங்களுக்குள் அபராதத்தை செலுத்தினால் போதுமானது. இதை விட மோசமாக எந்த அரசாலும் கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணை போகவே முடியாது. இன்னொரு பக்கம் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவருக்கு சொந்தமான கல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடத்தப்படும் கனிமக் கொள்ளைகளை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப் பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள். அவர்களை ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினரே கொடூரமாகத் தாக்குகிறார். அது குறித்த காணொலி ஆதாரம் வெளிவந்த பிறகும் கூட அந்த சட்டமன்ற உறுப்பினர்  கைது செய்யப்படவில்லை. பா.ம.க.வும் பிற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு தான் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது பெயரளவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அதை விட கடுமையான பிரிவுகளில், கனிமக் கொள்ளையை படம் பிடித்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக கனிமக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக அரசு, இப்போது கனிமக் கொள்ளையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தான் 50 புதிய கல்குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை செயல்பாட்டில் உள்ள கல்குவாரிகளில் பெரும்பாலானவை  தனியார் பட்டா நிலங்களில் அமைந்திருக்கும் நிலையில், இப்போது உரிமம் வழங்கப்படும் குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படவுள்ளன. இதன் பின்னணியில் பலநூறு கோடி கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவது, அரசுத் துறைகளில் பணம் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி இப்போதே ஒப்பந்தம் வழங்குவது, அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்தங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்வது போன்றவற்றில் திமுக ஈடுபட்டிருப்பதற்கு அண்மைக்காலங்களில் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அந்த முயற்சிகளில் அடுத்தக் கட்டம் தான் இந்த ஏலம் ஆகும். ஆளில்லாத வீட்டில் கிடைத்தவரை சுருட்டுவதைப் போலத் தான் திமுக அரசு கடைசி நேர ஊழல்களிலும், கொள்ளையிலும் ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கனிமக் கொள்ளை திமுக அரசை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
526 காட்சிகள்
கடன் வாங்கி, ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிப்பதா? மரங்கள் சட்டத்தை இயற்ற திமுக மறுப்பது ஏன்? வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026’’ என்ற  கொள்கையை  வெளியிட்டுள்ளார். எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல், பசுமையாக்கலுக்கான திட்டங்களும் இல்லாமல் கடன் வாங்கி ஊழல் செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இத்தகையத் திட்டங்களை அறிவிப்ப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை பசுமையாக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான தொலைநோக்குப் பார்வையும், நகர்ப்புறங்களை பசுமையாக்குவதற்கு  தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேற்கொண்டிருக்க வேண்டியதும் இந்த இலக்கை அடைய அவசியமானவையாகும். ஆனால், இந்தப் பணிகள் எதையும் திமுக அரசு இன்று வரை செய்யவில்லை. எடுத்துக்காட்டாக, நகர்ப்புறங்களை பசுமையாக்க முதன்மைத் தேவை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும். அதற்குத் தேவையான மரங்கள் சட்டத்தை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழ் நாட்டில் மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என 2007ஆம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது. 2018&ஆம் ஆண்டில் சென்னை & சேலம் அதிவிரைவு பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் இதை வலியுறுத்தியது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு மரங்கள் சட்ட முன்வரைவு மீது முறையே 26.05.2022, 14.07.2022, 10.08.2022, 27.10.2022, 09.01.2023, 27.06.2023ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலப் பசுமைக் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதும், வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டதும் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பசுமைத் தாயகம் அமைப்பு பெற்ற தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. விரைவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று 2023ஆம் ஆண்டில் திமுக அரசு தெரிவித்தது. அது இன்னும் வெற்று அறிவிப்பாகவே நீடிக்கிறது. அதேபோல், பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்காக மாவட்ட பசுமைக்குழுக்கள் 2021ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டன. இதன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அட்டவணை உருவாக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த மாவட்டத்திலும் மரங்கள் அட்டவணை உருவாக்கப்படவில்லை. மரங்கள் சட்டம் எப்போது உருவாக்கப்படும்? மாவட்ட அளவில் மரங்கள் அட்டவணை எப்போது உருவாக்கப்படும்? என்பது பற்றி அரசின் கொள்கையில் எதுவும் இல்லை. சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 25% அதிகமாக்குவோம் என 2023-ஆம் ஆண்டில் அறிவித்த முதலமைச்சர் அதற்காக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. நகர்ப்புற சதுப்புநிலங்கள் உள்ளிட்ட அனைத்து சதுப்புநிலங்களையும் சட்டப்படி அறிவிக்கை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றமே 2024 டிசம்பர் மாதம் உத்தரவிட்டும் இதுவரை ஒரு சதுப்புநிலத்தைக் கூட சட்டப்படி அறிவிக்கை செய்யவில்லை. இந்திய உயிரிப்பன்மய சட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் மக்கள் உயிரிப்பன்மை பதிவேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக திமுக  அரசு நீதிமன்றத்தில் கூறியது. ஆனால், ஒரு நகரிலும் அத்தகைய பதிவேடுகள் இல்லை. இது போல நகர்ப்புற பசுமையை அதிகரிப்பது தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்கள், விதிகள், நீதிமன்ற உத்தரவுகளை செயலாக்குவதற்கான எந்த வழிகாட்டுதலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட புதிய கொள்கையில் இடம்பெறவே இல்லை. எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 2022ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. ஆனால், இதுவரை அப்பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் உள்ள வையாவூர் ஏரி &நத்தப்பேட்டை ஏரியில் குப்பை கொட்டுவதையும் கழிவுநீர் கலப்பதையும் முற்றிலுமாக தடுக்க வேண்டும்என பசுமை தீர்ப்பாயம் 23.11.2020-இல் உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை அந்த ஏரிகள் காப்பாற்றப்படவில்லை. இவை எதையுமே செய்யாத திமுக அரசு, தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கையை மட்டும் ஏன் அறிவித்திருக்கிறது தெரியுமா? கடன் வாங்கி ஊழல் செய்வதற்காகத் தான். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதியுதவியாகவும் நீண்டகால கடனாகவும் பெருமளவு பசுமைநிதியை உலக வங்கி, மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, · சென்னை நகருக்கான The Chennai City Partnership Project (CCP) (சிசிறி) திட்டத்திற்காக உலக வங்கி மூலம் ரூ.- 2500 கோடி · தமிழ்நாட்டின் 21 நகரங்களுக்கான Tamil Nadu Climate Resilient Urban Development Program திட்டத்திற்காக உலக வங்கி மூலம் ரூ.- 2500 கோடி · Tamil Nadu Biodiversity Conservation and Greening Project (TBGP) திட்டத்திற்காக ஜப்பான் மூலம் ரூ. - 1800 கோடி நிதி தமிழகத்திற்கு கிடைக்கிறது. இதேபோல், இன்னும் பல திட்டங்கள் வரவுள்ளன. இந்த நிதியுதவிகவாங்குவதற்காகவும், அதில் ஊழல் செய்வதற்காகவும் தான் காலநிலை மாற்றம் சார்ந்த பசுமைத் திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது. ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. இதற்கு மாற்றாக மாநிலப் பசுமைக் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு,  கடந்த 4 ஆண்டுகளாக காத்திருக்கும் தமிழ்நாடு மரங்கள் சட்டத்தை நாளை மறுநாள் தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
554 காட்சிகள்
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டம். சென்னையில் பங்கேற்று உரையாற்றிய போது.! ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
1.6K காட்சிகள்
அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள  8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு  7 மாதங்களாகும் நிலையில், இன்று வரை  அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை.  ஏழை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் ஆள்தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம்,  விரைவுப் போக்குவரத்துக்கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் 6 கோட்டங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களாக நியமிப்பதற்காக  3274 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வி்ண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு  கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் எழுத்துத் தேர்வு  நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. ஆனால்,  எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொருளாதாரத்தின் அடித்தட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த வேலை கிடைத்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.  ஆனால், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது முறையல்ல. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆள்தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவுபடுத்தி  தகுதியானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ##PMK2.0
அன்புமணி ராமதாஸ்
1.5K காட்சிகள்
கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஒரு முறை மன்னிப்பா? டன்னுக்கு ரூ.75 தான் தண்டமா? திமுக ஊழலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பதைப் போல, இன்னும் இரு வாரங்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், கிடைத்தவற்றை எல்லாம் சுருட்டும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஒருமுறை மன்னிப்பு வழங்கப்படும்; அவர்கள் கொள்ளையடித்த கனிமங்களுக்கு டன்னுக்கு ரூ.75 வீதம் தண்டம் வசூலிக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஆட்சிக்காலத்தின் கடைசி நேரத்தில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளிலும் கனிமவளக் கொள்ளை தான் தடையின்றி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 1845 கருங்கல் குவாரிகள் உரிமம் பெற்று இயங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2000&க்கும் மேற்பட்ட குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோதக் கனிமக் கொள்ளைகளுக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் காட்பாதர்களாக செயல்பட்டு வருகின்றனர். கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவி சாய்க்காத திமுக அரசு, கனிமக் கொள்ளையர்கள் அனைவரையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான ஒரு முறை மன்னிப்பு திட்டத்தை ரகசியமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் இயற்கைவளத்துறை கடந்த ஜனவரி 22&ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 03&இன்  மூலம் இந்த ஒருமுறை மன்னிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி எந்த ஊடகத்திலும் வெளிவராமல் திமுக அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒழுங்குபடுத்தும் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொள்ளையடித்த கனிமத்திற்கு ஒருமுறை தண்டம் செலுத்தி விட்டு புனிதமானவர்களாகி விடலாம். இந்தத் திட்டத்தின்படி, உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர்.  உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கனிமக் கொள்ளையர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.10 கோடிக்கும் குறைவாக இருந்தால், அதில்  முதல் கட்டமாக 20% செலுத்தி விட்டு, மீதமுள்ள தொகையை இரு மாதங்களுக்கு ஒரு முறை வீதம் 6 சம தவணைகளில் செலுத்தினால் போதுமானது. அபராதம் ரூ.10 கோடிக்கும் கூடுதலாக இருந்தால் முதல் தவணை 20% தவிர மீதமுள்ள தொகையை இரு ஆண்டுகளில் 12 தவணைகளாக செலுத்தினால் போதுமானது. இதில் கொடுமை என்னவென்றால் கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களை அரசிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்பதும், அவற்றை வெளிச்சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விற்று விட்டு அதில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான தொகையை தண்டமாக செலுத்தினால் போதும் என்பதும் தான். இந்த அநீதியை கேட்பதற்கே சகிக்கவில்லை. கட்டுமானப் பணிகளுக்காக தேவைப்படும் கருங்கல் ஜல்லியை, ஒன்றரை டன் எடை கொண்ட ஒரு யூனிட் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதாவது வெளிச்சந்தையில்  ஒரு டன் கருங்கல் விலை ரூ.6,666 வரை. அதற்காக அவர்கள் செலுத்த வேண்டிய தண்டம் வெறும் ரூ.75 மட்டுமே. அதாவது கொள்ளையடித்த கனிமத்தின் மதிப்பில் சுமார் 1% மட்டும் தான். ஒரு டன்னுக்கு தண்டமாக வசூலிக்கப்படும் தொகையைக் கொண்டு 5 செங்கற்களைக் கூட வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மன்னிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு, அபராதத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. மேலும் எந்த அளவுக்கு கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது என அரசே கூறியிருப்பதால், உத்தேசமாக தண்டம் செலுத்தினால் போதுமானது. உண்மையாக கொள்ளை அடிக்கப்ப்பட்ட அளவு திமுக ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதால், அவர்கள் கனிமக் கொள்ளையர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை வசூலிக்க வேண்டிய விதத்தில் வசூலித்துக் கொள்வார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தாங்கள் செய்த கனிமக் கொள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், தங்களின் தொழில் பாதிக்கப் படுவதாகவும், அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கனிமக் கொள்ளையர்கள் அரசுக்கு அளித்த மனுவின் அடிப்படையில் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த பரிந்துரை அறிக்கை அடிப்படையில் இந்த மன்னிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் திமுக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் திட்டத்தின் பின்னணியில் பெரும் கூட்டுச் சதி நடந்திருப்பதை இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. வசிக்க இடம் இல்லாத ஏழை மக்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டால், இரவோடு, இரவாகச் சென்று கொடூரமாக அகற்றும் கொடுங்கோல் அரசு, கனிமக் கொள்ளையர்களிடம் மட்டும் இந்த அளவுக்கு இரக்கமும், கருணையும் காட்டுவது வியக்க வைக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கனிமக் கொள்ளையர்கள் வாரி வழங்கும் வெகுமதிகள் தான் இரக்கத்தை சுரக்க வைக்கின்றன என்ற புகாரை புறந்தள்ளிவிட முடியாது. கனிமக் கொள்ளையர்களுக்கு திமுக அரசு கருணை காட்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, திமுக காட்பதரின் ஆசியில் நெல்லை மாவட்டங்களில் நடைபெற்ற ஒரு பகுதி கனிமக் கொள்ளை மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்காக 24 குவாரிகளுக்கு  ரூ.262 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியாளர்களின் கருணைப் பார்வை பட்டவுடன் அது ரூ.13.80 கோடியாக குறைக்கப்பட்டது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் மற்றும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருமுறை தண்டமாக ரூ.321 கோடியை விதித்த திமுக அரசு, கனிமக் கொள்ளையர் அனைவரையும் மன்னித்து விட்டது. தண்டத் தொகையிலும் இதுவரை ரூ.20 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’’ என்று மகாகவி பாரதியார் பாடியதைப் போல, ஊழலில்  திளைத்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியில் கனிமக் கொள்ளையர்களுக்கு மட்டும் தான் கருணை காட்டப் படும். ஆட்சிக் காலத்தின் கடைசியில் திமுகவினர் நடத்தும் கொள்ளைகளையும், ஊழல்களையும் ஒட்டுமொத்த  தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்; அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்.  கனிமக் கொள்ளையர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் இந்த ஊழல் திட்டத்தின் பின்னணி பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும். ##PMK2.0
See other profiles for amazing content