ஸ்ரீராமரை ஏன் சாப்பாட்டு ராமன் என்று அழைக்கிறார்கள்?
‘சரியான சாப்பாட்டு ராமன்’ என்று சாப்பாட்டு ப்ரியர்களை கிண்டல் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.
ராமனுக்கு ஏன் சாப்பாட்டு ராமன் என்று பெயர் வந்தது தெரியுமா?
இராமருக்கு இப்படியொரு பெயரை யார் வைத்தது?
அயோத்தியா நகரில் வடிகட்டின சோம்பேறியாக ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். வீட்டில் உண்பதையும், உறங்குவதையும் தவிர வேறு எந்த வேலையையுமே செய்ய மாட்டான்.அவனது வீட்டில் இருந்த அவனது சகோதரர்கள், சகோதரிகள் மற்ற உறவினர்கள் அவனிடம், ‘ஏதாவது ஒரு தொழிலைப் பழகச் சொன்னால்’ அவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல்,
‘நான் இது நாள் வரை வேலை செய்யாமல் இருந்ததால் உடல் பருத்த என்னால் என்ன செய்ய முடியும்?
வேண்டுமானால் இன்னும் சற்று அதிகமாக சாப்பிடுகின்றேன்’ என்று அதற்கும் பதில் சொல்வதாய் சாப்பாட்டைக் கொண்டு வந்தான். பொறுத்து பொறுத்துப் பார்த்த அவனது பெற்றோர்கள், பிள்ளை இப்படி கண்ணெதிரே பொறுப்பில்லாமல் சோம்பேறியாகத் திரிகின்றானே என்று, அவனை எதாவது மடத்தில் சேர்ந்து விடு என்று கூறினார்கள்.
அவனும் ஊரில் உள்ள பல மடங்களுக்குச் சென்று வெளியே நின்று அங்குள்ள அனைவரும் குண்டாக இருக்கின்றனரா?
இந்த மடத்தில் நல்ல நிறைவான உணவு கிடைக்குமா? என்று தினமும் சோதித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது நீண்ட சோதனைக்குப் பிறகு, மடாதிபதி முதல் அனைவரும் திடகாத்திரமாக உள்ள ஒரு மடத்தை தேர்ந்தெடுத்தான்.
அந்த மடாதிபதியிடம் சென்று ‘ ஐயா! நான் தங்கள் மடத்தில் சேர நினைக்கின்றேன்’ என்றான்.
மடாதிபதியும், ‘என்ன வேலை செய்யமுடியும்?’ என்று கேட்டார். அவனோ, ‘நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்.
எனக்கு உணவளித்து வேலை எதுவும் கூறாமல் என்னை பராமரிக்க வேண்டும்’ என்றான்.
‘ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் எப்படி? சரி போகட்டும்! அந்த ராமன் சித்தம் போல இங்கேயே இரு’ என்றார்.
‘இங்குள்ள அனைவரும் புஷ்டியாக, குண்டாக இருக்கின்றனர். எனவே தேவையான உணவு கொடுக்கின்றீர்கள் என்று தெரிகிறது. ஆனால் ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து எனக்கு மட்டும் மற்றோரைவிட சற்று கூடுதலாக உணவளிக்க வேண்டும் ’ என்று ரொம்ப அக்கறையாக மடாதிபதியிடம் சொன்னான். மடாதிபதியும் ஒப்புக்கொண்டார்.
தினமும் சமையலறைக்குள் சென்று நன்றாக பல்வேறு வகையான உணவுகள் தயாராவதைக் கண்டு அன்றைய உணவு திருப்தியாக கிடைக்கும் என்று உறுதி செய்துக் கொள்வான்.
அப்படி ஒரு நாள் சமையலறையில் எட்டிப் பார்க்கும் போது, யாருமே சமையல் செய்யவில்லை.
உடனே மடாதிபதியிடம் சென்று, ‘இன்று ஏன் யாருமே சமையல் செய்யவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘இன்று ஏகாதசி, எல்லோருக்கும் இன்று உபவாசம்’ என்றார் மடாதிபதி.
நம்ம வாலிபனுக்கு கோபம் தலைக்கேற ஆரம்பித்தது. ‘எனக்கு இதை முதலிலேயே ஏன் கூறவில்லை .
கூறியிருந்தால் நான் இந்த மடத்தில் சேர்ந்திருக்கவே மாட்டேன். நீங்கள் எனக்கு எப்படியும் உணவளித்தே ஆகவேண்டும்’ என்றான்.
‘இன்றைக்கு விதிப்படி யாரும் இங்கு உணவு கூடத்தில் உணவு தயார் செய்யக்கூடாது .
அப்படி நீ அதிக பசியோடிருந்தால், வேண்டுமானால் இங்கிருக்கும் மளிகைப் பொருட்களைக் கொண்டுச் சென்று தூரத்தில் உள்ள மரத்தடியில் நீயே சமைத்து சாப்பிட்டுக் கொள்’ என்றார் .‘எனக்கு சமைக்கத் தெரியாது. சுவைபட சாப்பிட்டே பழகி விட்டேன்.
எப்படி இப்போது நான் சுவையில்லாமல் சமைத்து, அதை நானே உண்பது?’என்று கேட்டான்.
அதற்கு மடாதிபதியும் ‘நாங்கள் சமைப்பது கூட சமையல் செய்யும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்காது. ஆனால் ராமனுக்கு படைத்து, பின் உண்பதால் சுவையானதாகின்றது’ என்றார்.
அதுபோல நீயும் சமைத்ததும் உண்ணும் முன்பாக இராமனுக்கு படைத்த பின்னர் சாப்பிடு’ என்று சொல்லி அனுப்பினார்.
மடாதிபதி கூறியதுபோல மரத்தடியில் உணவை சமைத்த பின்னர், ‘ஹே ராமா! வா சாப்பிட்டு விட்டு போ !’ என்றழைத்தான்.
பல முறைகளாக இராமனை அழைத்தும் இராமன் வரவேயில்லை .
‘ஏய் எனக்கு பசி அதிகமாகின்றது . விரைந்து வா! இல்லாவிட்டால் நான் உயிரை விட வேண்டி வரும்.எனக்கு உயிர், உணவு இரண்டும் மிக மிக முக்கியமானது’ என்றான்.
சீதை, இராமனிடம் ‘வாருங்கள் ஒரு முறை ராமர் சீதையாக சென்று வரலாம்… பாவம் குழந்தை’ என்று ராமனை அழைத்தாள். இருவரும் அந்த மரத்தடிக்கு வந்தனர் புன்னகையுடன்.
அவர்கள் இருவருக்கும் உணவிட்டு, அவர்கள் உண்ணும் போது அவன் சீதையையும், உணவையும் வாடிய முகத்தோடு மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
இராமர், அவனை நோக்கி, ‘ஏன் நாங்கள் வந்தது உண்பது உனக்கு பிடிக்கவில்லையா?’ என்று கேட்டார்.
அதற்கு ரொம்பவும் அப்பாவியாக, ‘நான் உன்னை மட்டும் தானே சாப்பிட வா என்று அழைத்தேன். நீயோ சீதையையும் உடன் அழைத்து வந்திருக்கிறாயே?
நீங்கள் இருவரும் சாப்பிட்டு முடித்தால், எனக்கு மீதம் உணவு இருக்குமோ இருக்காதோ?
அப்படி உணவு மீதமாகவில்லை என்றால் என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது’ என்றான்.
ஆனாலும் எனக்கு பசியின் கொடுமைப் பற்றி ரொம்ப நன்றாகத் தெரியும்.
நீங்கள் இருவரும் நன்றாகவே உண்ணுங்கள் என்றான்.
இராமனும், சீதையும் சாப்பிட்டு முடித்து சென்றதும் அவன் உண்டு மகிழ்ந்தான்.
அடுத்த ஏகாதசியன்று அவன் மரத்தடிக்கு போகும் முன் சீதையை நினைத்து மடாதிபதியிடம் சற்று அதிகமாக சமையல் பொருட்களை கேட்டான்.
அவரும் இவன் நன்கு உண்பவன் என்பதால் கேட்கிறதை கொடுத்து அனுப்பினார்.
இம்முறை சீதா, ராமருடன் லஷ்சுமணனும் வந்திருந்தார்.
இம்முறை லக்ஷ்மணனையும் சென்றமுறை சீதையை பார்த்து செய்ததையே செய்தான்.
அடுத்த ஏகாதசியன்று மனசுக்குள் லக்ஷ்மணனையும் நினைத்துக் கொண்டு, இன்னும் அதிகமாக மளிகைப் பொருட்களைக் கேட்க மடாதிபதி சற்றே ஆச்சரியத்துடன் அவன் கேட்டதைக் கொடுத்து அனுப்பினார்.
இம்முறை இராம, லக்ஷ்மண், சீதை, பரத சத்ருகன் வந்தனர்.
அவர்கள் செல்லும் முன், ‘ஏய் ராமா! என்ன நீ இங்கிதம் இல்லாது இப்படி ஒவ்வொரு முறையும் யாரையாவது அதிகமாக கூட்டி வருகிறாய்.
இது போதும் . இனி உன் பரிவாரத்துடன் வா’ என்றான்.
அடுத்த ஏகாதசியன்று இராமர் தன் பரிவாரமான வானர சைண்யத்துடன் வந்து விட்டான்.
ஓ என்ன செய்வது? மடாதிபதியிடம் சென்று, ஆயிரம் பேருக்குத் தேவையான சரக்கு தேவை என்றான்.
எந்தக் கேள்வியும் கேட்காமல், அவன் கேட்டவற்றைக் கொடுத்தனுப்பிய மடாதிபதியும் இவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வாலிபனைப் பின் தொடர்ந்தார்.
மூட்டையை தூக்கி வந்த அலுப்பினால் மரத்தடி சேர்ந்ததும் மூட்டையை இறக்கி வைத்த பின் உறங்கி விட்டான் .
இராமர் அவனை எழுப்பி உணவு தயார் செய்யுமாறு கேட்டபோது, ‘ஹை நான் ஒருவனாக சமைக்க நீங்கள் பல பேர் உண்பதா? நீயும் உன் சேனையும் என்னை விட சோம்பேறிகளா? இன்று நீங்கள் சமையுங்கள் நான் உண்கிறேன்’ என்று சொல்லி தூங்கச் சென்றான் .
அந்த வாலிபனைப் பின் தொடர்ந்து சென்ற மடாதிபதிகளின் கண்களுக்கு ராமனின் படை பரிவாரங்கள் தெரியவில்லை.
அவர் சிஷ்யனை எழுப்பி, ‘ஏன் சமைக்காமல் படுத்துக் கொண்டு இருக்கிறாய்?’ என்று கேட்டார்.
இராமனும் அவனது சகோதரர்களும் இன்று சமைக்கின்றனர்.
சீதை காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
வானர சைண்யம் அவர்களுக்கு சமையலில் உதவி செய்கிறது.
நான் ஏன் அவர்களுக்கு சமைக்க வேண்டும்? அவர்கள் சேதுவையே சமைத்தார்கள். இது ஒரு பொருட்டா?’ என்று கேட்டான்.
ஒன்றுமறியாத மடாதிபதி, ‘இராமனை எனக்கு காட்டு’ என்று கேட்க அவனும், ‘ இராமா ஏன் மடாதிபதிக்கு உன்னை தெரியவில்லை? உடனே உன்னை காட்டிக் கொள்’ என்றான் .
இராமர் அப்படி முடியாது என்றதும், ‘டேய் ராமா அந்த மடாதிபதி நான் ஒருவனே ஏகாதசியன்று அனைத்தும் தின்பதாக நினைக்கின்றார்.என் மேல் வீண் களங்கம் உன்னால் ஏற்படும்.
அவர் கோபத்தில் என்னை மடத்தில் சேர்க்கா விட்டால் உனக்கும் இனி ஏகாதசியன்று உணவு கிடைக்காது. என்னிடம் சாப்பிட்ட நன்றிக் கடனாக அவருக்கு காட்சி கொடு’ என்றான்.
இராமரும் தன் பரிவாரங்களுடன் கையில் கரண்டியை ஏந்தியபடி மடாதிபதிக்கு காட்சியளித்தார்.
மடாதிபதி ‘ஓ பிரபுவே! போஜராஜனே! இது என்ன லீலை’ என்று பக்தி பரவசத்துடன் கேட்க, இராமனும் ‘ஆசார்யரான தங்கள் வார்த்தை மட்டுமே பொருட்டாக என்னை அழைத்தான் .
நான் அவன் அன்பான கள்ளங்கபடமற்ற பக்தியை சீதையும் அறிய இருவருமாக வந்தோம்.
அடுத்தடுத்து லக்ஷ்மண, பரத, சத்ருகன் மற்றும் வானரங்களும் உணர அவர்களை அழைத்து வந்தேன்.
இராம சேவையில்,
பக்தியில் தன் ஒப்பாரில்லை என்று கர்வம்
கொண்டவர்கள் அனைவருக்கும் பாடமாக இந்த செயலைச் செய்து காட்டினேன்’ என்றார். இராமன், சாப்பாட்டு ராமனானது இப்படித் தான். #🤩அசத்தலான போஸ்ட்🔥