இலக்கானவரை மட்டுமல்ல இயக்கியவரையும் அழிப்பது துரோகம்...
முன்குறிப்பு: இது தமிழக அரசியல் பற்றிய பதிவல்ல!
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில் வரும் "You too Brutus" என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. ஒரு வரலாற்று பின்னணி கொண்ட இந்த காட்சியானது துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது.
மேற்கண்ட வசனத்தில் இருந்து பொதுவாக நமக்குத் தெரிவது, ஜூலியஸ் சீசர் தனது உயிர் நண்பனான புரூட்டஸால் கொல்லப்பட்டான் என்பதே. ஆனால், நண்பனுக்கு வஞ்சகத்துடன் நம்பிக்கை துரோகம் செய்த புரூட்டஸும் பின்னர் உன்னதமாக வாழவில்லை.
துரோகம் என்பது இருபுறமும் கூர்தீட்டப்பட்ட வாள் போன்றது. அது இலக்கானவரை மட்டும் அழிப்பதில்லை, இயக்கியவரையும் அழிக்கிறது.
யாரையுமே நம்பாமல் வாழ்வது சாத்தியம் இல்லை. பிறரை நம்புவதிலும் ஒரு நன்மை உள்ளது. அப்படி நம்பும்போதுதான் "துரோகம் என்றால் என்ன? அதன் வலி எப்படி இருக்கும்?" என்று நமக்கு தெரியும். பொதுவாக துரோகத்தை அனுபவிப்பவன் மனதிற்குள் அழுகிறான். ஆனால் துரோகம் செய்தவன் மீது அவனால் குற்றம் சுமத்த முடிவதில்லை.
துரோகம் செய்தவன் மீது பாதிக்கப்பட்டவனால் ஏன் குற்றம் சுமத்த முடிவதில்லை? ஏனென்றால் கதையை யார் கேட்டாலும், "பாதிக்கப்பட்டவன் மீதே தவறு உள்ளது" என்பார்! "வென்றவன் நியாயவான், சாய்ந்தவன் பழி ஏற்கவேண்டும்" என்பதே உலக வழக்கு. பிறகு?
இந்த விஷயத்தில் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?
தவறு உன் மீதுதான். அடுத்தவனை குறை சொல்லாதே!
இந்த வேலையை எல்லாம் இன்னொருவரை நம்பி ஒப்படைக்கலாமா?
என உங்களை நோக்கியே கேள்விக்கணைகள் பறந்து வரும்.
ஷேக்ஸ்பியரின் 'ஜூலியஸ் சீசர்' நாடகத்தில், சீசர் ஆரம்பத்தில் சதிகாரர்களை எதிர்த்துப் போராடுகிறான். அப்போது, தனது நம்பிக்கைக்குரிய நண்பனான புரூட்டஸும் தன்னைக் கொல்ல முயற்சிப்பதை காண்கிறான். அது மாமன்னன் சீசருடைய மனம் உடைந்துபோன தருணம். "நீயுமா புரூட்டஸ்" என அதிர்ந்து போனவன் போராடுவதை அதே கணத்தில் நிறுத்திவிடுகிறான்.
துரோகத்தின் விளைநிலம் நட்பாகும். நம்பிக்கை துரோகம் (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்) மற்றும் துரோகம் குறித்து திருவள்ளுவர் 'கூடா நட்பு' மற்றும் 'நட்பு' ஆகிய அதிகாரங்களில் விளக்கியுள்ளார். நம்பிக்கை துரோகம் (நட்பில் வஞ்சகம்) பற்றி விளக்கும் 'கூடா நட்பு' அதிகாரத்தில் வரும் ஒரு குறள்:
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
(குறள் எண்: 821)
விளக்கம்:
உள்ளத்தில் அன்பு கொள்ளாமல், முகத்திற்கு நேராக மட்டும் இனிமையாகப் பழகும் வெளிவேஷக்காரர்களின் நட்பு, நம்மைத் தாக்குவதற்குரிய சரியான தருணம் கிடைத்தவுடன் அடிக்கின்ற பட்டறைக்கல் (Anvil) போன்றது.
மகாபாரதத்தில் வரும் சகுனி பகடை விளையாட்டில் செய்த சதி மற்றும் துரியோதனனின் துரோகம் ஆகியவை பாண்டவர்களுக்கு துன்பம் தந்தன. கூட்டு துரோகம் செய்த சகுனியும் துரியோதனனும் அதனால் விளைந்த நெருப்பிலேயே மாண்டுபோனார்கள்.
வாழ்க்கையில் நாம் செய்கிற அனைத்து தவறுகளுக்கும் மனம் வருந்தினால் மன்னிப்பு என்பது உண்டு. ஆனால், நம்பிக்கை துரோகத்திற்கு மட்டும், அது ஒருவேளை மறக்கப்பட்டாலும், மன்னிப்பு என்பது இல்லவே இல்லை.
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴