#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும்
அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே
கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து
மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே
இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து
மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்
கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய்
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
.
விளக்கம்
=========
எங்கள் பிழையைப் பொறுத்து அருள்வது உம் செயல்தான் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனம் மகிழ்ந்து இரங்கும் படியாக சம்பூரணதேவனும், பரதேவதையும் அருமையான விருத்தம் ஒன்று பாடினார்கள்.
.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, கிளிபோன்று மொழி பேசும் பரதேவதையைப் பார்த்து மெட்டுக் கொடி இடையே மின்னிடையே நான் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள். உன்னுடைய கணவன் எமலோகத்தில் உன் நினைவாகவே ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கிறான்.
.
நீயோ, அவனை மறந்துவிட்டு, தெய்வலோகத்தானாகிய சம்பூரணத்தேவனை விரும்பி, இருவருமாய் இணக்கமுற்று எப்போதும் வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தத் தவத்தை மேற்கொண்டீர்கள். அந்தத் தவமும் உங்களுடைய எண்ணத்தால் ஈடேறாமல் போய்விட்டது.
.
எனவே, பூலோகத்தில் என் மகவாகப் பெற்றுப் பெருகி இருக்கின்ற சான்றோர் இனத்தில், எமலோகத்தாரின் வாரிசாக நீ பிறக்கவேண்டும். அதுதான் உனக்கு அமைத்த அமைப்பாகும்.
.
இந்தத் தவத்தில் நீங்கள் இருவரும் மனதால் செய்த பிழைக்காக, நீ பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாலும் அங்கேயும் உன்னுடைய எமலோகக் கணவனும் பிறப்பான். அவனை நீ திருமணம் செய்து எமலோகத்தில் அவனுக்கு நீ செய்யாமல் விட்ட அத்தனை கடமைகளையும் செய்து, வருந்தித் துயரமுற்று அந்தக் கணவனுக்கு முறைப்படி செய்ய வேண்டிய தொண்டுகள் யாவையும் செய்தும் இனிமையான பேச்சோ, தாம்பத்திய நளினமோ இல்லாமல், எப்பொழுதுமே நீ ஏக்கத்தோடு வருத்தமுற்று இருக்கும் காலத்தில, இந்த சம்பூரணத்தேவன் எமலோகத்தில் உன்மேல் நட்புற்றதால் பூலோகத்தில் பிறந்து, முன் ஜென்ம வாசனையால் உன்னைக் கண்டு உன்மீது இச்சைகொண்டு, விதிப்பயனால் ஒருவரோடொருவர் உற்ற நட்பு கொண்டு, அவனுடைய இளமைப் பருவத்தில் இருவரும் ஒருவரெனக் கருத்தொருமித்திருப்பீர்கள்.
.
அதனால் நீ உணவை மறந்து, கணவன், தாய், தந்தை, மாமன், அண்ணன், ஆகிய அனைத்து உறவுகளையும், வாழ்க்கை முறைகளையும், வாழ்வையுமே மறந்து, சொந்த வீட்டையும், சுகசோபனங்களையும் மறந்து, சந்தோசம் என்பதே இல்லாமல், எல்லாரைக் கண்டும் வெட்கப்படும் நிலையில் உன்னுடைய கணவனுக்கு முற்பிறப்பில் செய்த துரோகத்திற்கான தண்டனைகளையும் சேர்த்து அனுபவிப்பாய்.
.
பிறகு அக்கம் பக்கத்தார் யாவரும் அறியும்படியாகச் சம்பூரணத்தேவனையே கணவனாக நினைத்துக்கொண்டிருப்பாய். அப்போதும் உன் கணவன் கட்டிய மாங்கல்யம் உலகறிய உன்னுடைய கழுத்தில்தான் இருக்கும். அந்தத் தருணத்தில் எனக்குப் பலவிதமான உபத்திரவங்கள் உண்டாகும். அதை நாள்வழியே பலர் கேலி செய்வர். அதனால் உனக்குப் பெரிய உனக்குப் பெரிய கவலையுண்டாகும். அந்தக் கவலையினால் மேலும் பல துன்பங்களை நாள்தோறும் அனுபவிப்பாய். அதனால் உனக்கு இரத்தப்போக்கு என்னும் பெரும்பாடு நோய் உண்டாகும். நாளடைவில் அதனால் சயரோகம் உண்டாகும். ஓயாமல் புரையேற்றமும் விக்கலும் ஏற்பட்டு தீராத நோயாளியாகவே இருப்பாய். இவை யாவும் உன் கணவனுக்கு நீ செய்த பாவத்திற்கான சம்பளமேயாகும்.
.
இத்தனை சோதனையும் நீ அனுபவிப்பதின் மூலம் உனக்கு இறை நாட்டம் ஏற்படும். அதனால் உன்னுடைய சிந்தனை விரிவடையும், அப்போது நீ மகாலட்சுமியைப் போன்ற மகிமையினை அடைவாய் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் பரதேவதையிடம் சொல்லி, அப்பொழுதே பரதேவதையை எமகுலத்தார் வழியில் பிறவி செய்தனர். அதன்படி பரதேவதை எமகுலத்தில் வந்து இயல்பாகப் பிறந்தாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.