ஶ்ரீஶ்ரீ வேலு தேவர் சித்தர் அய்யா

D Muthu Prakash, Kanchipuram 💐
853 காட்சிகள்
28 நாட்களுக்கு முன்
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும் அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில் இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால் அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும் நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால் பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில் எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில் கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும் கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால் கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப் பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக் கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக் கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும் கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த் தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால் வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய் நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய் என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார் அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம் . விளக்கம் ========= எங்கள் பிழையைப் பொறுத்து அருள்வது உம் செயல்தான் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனம் மகிழ்ந்து இரங்கும் படியாக சம்பூரணதேவனும், பரதேவதையும் அருமையான விருத்தம் ஒன்று பாடினார்கள். . அதைக் கேட்ட மகாவிஷ்ணு, கிளிபோன்று மொழி பேசும் பரதேவதையைப் பார்த்து மெட்டுக் கொடி இடையே மின்னிடையே நான் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள். உன்னுடைய கணவன் எமலோகத்தில் உன் நினைவாகவே ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கிறான். . நீயோ, அவனை மறந்துவிட்டு, தெய்வலோகத்தானாகிய சம்பூரணத்தேவனை விரும்பி, இருவருமாய் இணக்கமுற்று எப்போதும் வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தத் தவத்தை மேற்கொண்டீர்கள். அந்தத் தவமும் உங்களுடைய எண்ணத்தால் ஈடேறாமல் போய்விட்டது. . எனவே, பூலோகத்தில் என் மகவாகப் பெற்றுப் பெருகி இருக்கின்ற சான்றோர் இனத்தில், எமலோகத்தாரின் வாரிசாக நீ பிறக்கவேண்டும். அதுதான் உனக்கு அமைத்த அமைப்பாகும். . இந்தத் தவத்தில் நீங்கள் இருவரும் மனதால் செய்த பிழைக்காக, நீ பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாலும் அங்கேயும் உன்னுடைய எமலோகக் கணவனும் பிறப்பான். அவனை நீ திருமணம் செய்து எமலோகத்தில் அவனுக்கு நீ செய்யாமல் விட்ட அத்தனை கடமைகளையும் செய்து, வருந்தித் துயரமுற்று அந்தக் கணவனுக்கு முறைப்படி செய்ய வேண்டிய தொண்டுகள் யாவையும் செய்தும் இனிமையான பேச்சோ, தாம்பத்திய நளினமோ இல்லாமல், எப்பொழுதுமே நீ ஏக்கத்தோடு வருத்தமுற்று இருக்கும் காலத்தில, இந்த சம்பூரணத்தேவன் எமலோகத்தில் உன்மேல் நட்புற்றதால் பூலோகத்தில் பிறந்து, முன் ஜென்ம வாசனையால் உன்னைக் கண்டு உன்மீது இச்சைகொண்டு, விதிப்பயனால் ஒருவரோடொருவர் உற்ற நட்பு கொண்டு, அவனுடைய இளமைப் பருவத்தில் இருவரும் ஒருவரெனக் கருத்தொருமித்திருப்பீர்கள். . அதனால் நீ உணவை மறந்து, கணவன், தாய், தந்தை, மாமன், அண்ணன், ஆகிய அனைத்து உறவுகளையும், வாழ்க்கை முறைகளையும், வாழ்வையுமே மறந்து, சொந்த வீட்டையும், சுகசோபனங்களையும் மறந்து, சந்தோசம் என்பதே இல்லாமல், எல்லாரைக் கண்டும் வெட்கப்படும் நிலையில் உன்னுடைய கணவனுக்கு முற்பிறப்பில் செய்த துரோகத்திற்கான தண்டனைகளையும் சேர்த்து அனுபவிப்பாய். . பிறகு அக்கம் பக்கத்தார் யாவரும் அறியும்படியாகச் சம்பூரணத்தேவனையே கணவனாக நினைத்துக்கொண்டிருப்பாய். அப்போதும் உன் கணவன் கட்டிய மாங்கல்யம் உலகறிய உன்னுடைய கழுத்தில்தான் இருக்கும். அந்தத் தருணத்தில் எனக்குப் பலவிதமான உபத்திரவங்கள் உண்டாகும். அதை நாள்வழியே பலர் கேலி செய்வர். அதனால் உனக்குப் பெரிய உனக்குப் பெரிய கவலையுண்டாகும். அந்தக் கவலையினால் மேலும் பல துன்பங்களை நாள்தோறும் அனுபவிப்பாய். அதனால் உனக்கு இரத்தப்போக்கு என்னும் பெரும்பாடு நோய் உண்டாகும். நாளடைவில் அதனால் சயரோகம் உண்டாகும். ஓயாமல் புரையேற்றமும் விக்கலும் ஏற்பட்டு தீராத நோயாளியாகவே இருப்பாய். இவை யாவும் உன் கணவனுக்கு நீ செய்த பாவத்திற்கான சம்பளமேயாகும். . இத்தனை சோதனையும் நீ அனுபவிப்பதின் மூலம் உனக்கு இறை நாட்டம் ஏற்படும். அதனால் உன்னுடைய சிந்தனை விரிவடையும், அப்போது நீ மகாலட்சுமியைப் போன்ற மகிமையினை அடைவாய் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் பரதேவதையிடம் சொல்லி, அப்பொழுதே பரதேவதையை எமகுலத்தார் வழியில் பிறவி செய்தனர். அதன்படி பரதேவதை எமகுலத்தில் வந்து இயல்பாகப் பிறந்தாள். . . தொடரும்... அய்யா உண்டு.
D Muthu Prakash, Kanchipuram 💐
1.3K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar .கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன் திடமான கோவே செய்ய மணிவிளக்கே என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச் சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள் வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச் செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச் சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப் பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள் தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள் சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள் பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும் சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள் . விளக்கம் ========= உடனே மகாலட்சுமி மகாவிஷ்ணுவைப் பார்த்து, மனம் சலனமில்லாத மாமன்னரே ! மாசில்லா மணிவிளக்கே ! என்னை மகரச்சிலை போல் பிறவி செய்வதற்குத் தாங்கள் என்ன உபாயத்தைக் கையாளுவீர்கள் மன்னவரே என்று கேட்டாள். . இந்தக் கேள்வியிலேயே மகாலட்சுமியின் சம்மதத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, நன்று என் நாயகியே ! எந்த தொழில் எனக்குக் கஷ்டமானது ? எல்லாத் தொழிலுமே எமக்கு எளிதேயாகும் என்று சொல்லிக்கொண்டே, அலைமகளான மகாலட்சுமி அரியதோர் பொன் மகரச் சிலைபோலக் கடலுக்குல் வளர்க என்று தம் மனதிலே நினைத்தார். . செப்படி வித்தை நாதன் இப்படி சிந்தித்த மறுகணமே, கடல் அலைகள், வடகயிலையில் இருந்து கொண்டிருந்த அன்னை மகாலட்சுமியை ஆவி அணைத்து, தம்மீது அமரவைத்து திருச்செந்தூர் கடலினுள் சந்தன வாரி சமுத்திரத்தில் கொண்டு சேர்த்தது. . அங்கே ஒழுங்குற அமைக்கப்பெற்றிருந்த பரமமணிக் கோட்டைக்குள், தெய்வ ரம்பையர்கள் புடை சூழ்ந்திருக்க, தேவர்களெல்லாம் அபயமிட்டு அடைக்கலமாயினர். மெய்பரமக் கன்னியரெல்லாம் பொலிபோடு குரவையிட்டனர். ஏழுவகை வாத்தியங்கள் எங்கும் ஒலி பரப்பிய வண்ணமாயின. . வலம்புரிச் சங்குகளோ அன்னை வந்தானென்று ஓம்கார நாதத்தை ஒலித்துக்கொண்டு இருந்தன. சிலம்புனைந்த ரத்தினங்களோ, தம்மை விளக்காகப் பாவித்து வேண்டிய வெளிச்சத்தைப் பிரகாசித்தன. சிப்பிக்குள்ளிருந்த முத்துக்களெல்லாம் லட்சுமிதேவியின் திருமுன் வந்து நின்று ஒளி வீசிக்கொண்டிருந்தது. கோமேதகங்களோ திரள் திரளாக வந்து சூழ்ந்தன. கன்னிமாரெல்லாம் வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தனர். . தமக்கு நிகர் எவருமில்லாத அளவில் முற்றும் உணர்ந்த முனிவர்களெல்லாம் சம்பிரதாயப்படி சாஸ்திரங்களை வாசித்துக் கொண்டிருந்தனர். . இத்தகு ஏற்றமிகு சிறப்புகளெல்லாம் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அலைமகளான அன்னை மகாலட்சுமிதேவி மகரச் சிலை மாதுவாக, உயர்ந்த கோபுரமாக திருஉருவம் பெற்று நின்றாள். . அப்போது அங்கே பார்வதி, உமையவள், பரமேஸ்வரித்தாய் என்றெல்லாம் போற்றப்படும் இறைவியும், ஈசனும், பிரம்மதேவனும், இந்திரன் முதலான வானவர்களும் தினந்தோறும் வந்து, மகரச் சிலையாக வளர்ந்து கொண்டிருக்கும் மகாலட்சுமிதேவியைப் போற்றி வந்தனர். . மேன்மை பொருந்திய வானவர்களெல்லாம் சிவசிவா என்று சொல்லிக்கொண்டேயிருக்க, சூரியனும், சந்திரனும், மகர மாதுவின் மலர்ப்பாதம் போற்றிநிற்க, தேவலோகத்தோரெல்லாம் சூழ்ந்து நின்று மலர் மாரி சொரிந்த வண்ணமாயிருக்க அழகு மிளிரும் அபூர்வமான மகரச் சிலைபோல் திருமகளாகிய அன்னை மகாலட்சுமி வளர்ந்து கொணடேயிருந்தாள். . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது.... தொடரும்... அய்யா உண்டு.