"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே,
அமைதியுன் நெஞ்சில் நிலவட்டுமே"
-------------------------------------------------
'ஆலயமணி' என்ற அற்புதமான படத்தில் வரும் ஒரு அழகான, அமைதியான பாடல்.
இப்பாடலில் நடிப்பு விஜயகுமாரி. காதலன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் படுத்திருப்பார். அவரது மனதில் இருப்பது வேறொருத்தி. விஜயகுமாரி இதையறியாத நிலையில் பாடுகிறார் ! பாடலின் வரிகளுக்குத் தகுந்தாற்போன்ற அந்த முகபாவம் அசாத்தியம் ! 'தூக்கம்' என்று சொல்லும்போது தூக்கமும், மயக்கம் என்று சொல்லும்போது மயக்கமும் அவரது முகத்தில் நிழலாடுவது மிகச் சிறப்பு !
கவியரசர் கண்ணதாசனின் வரிகளுக்குக் கேட்கவா வேண்டும் ? பின்னியெடுக்கிறார் ! அவனே தனக்கு அனைத்தும் என்று நினைத்திருக்கும் காதலி அவனது நிம்மதியை மட்டுமே விரும்புவாள் என்ற கருத்தை மிக அழகாகச் சொல்லியிருப்பார். இதோ பாருங்கள்:
"அந்த தூக்கமும், அமைதியும், நானானால், உன்னை,
தொடர்ந்திருப்பேன், என்றும், துணையிருப்பேன்"
உனக்கு என்னால் அமைதி கிடைக்கும் என்று நீ நம்பினால் கடைசிவரை உன்னுடன் வாழத் தயார் என்கிறார் !
"காலையில் நான் ஓர், கனவு கண்டேன், அதை,
கண்களில் இங்கே, எடுத்து வந்தேன்,
எடுத்ததில் ஏதும், குறைந்து விடாமல்,
கொடுத்து விட்டேன், உந்தன் கண்களிலே, கண்களிலே..,"
அதிகாலையில் அவனுடன் இருப்பதாகத் தான் கண்ட கனவின் உண்மையை அப்படியே கொண்டுவந்து அவன் கண்களுக்குள் செலுத்திவிட்டாளாம் ! என்ன ஒரு அழகான கற்பனை கவிஞனுக்கு, காதலின் மென்மை குறித்து ! ஒவ்வொரு இடத்திலும் ஜானகியம்மாவின் குரலில் இனிமையும் குழைவும் நம்மைக் கிறங்கடித்து விடுகிறது !
"மனமென்னும் மாளிகை, திறந்திருக்க,
மையிட்ட கண்கள், சிவந்திருக்க,
இரு கரம் நீட்டி, திரு முகம் காட்டி,
தவழ்ந்து வந்தேன், நான், உன்னிடமே,
தவழ்ந்து வந்தேன், நான் உன்னிடமே.."
இத்தனை உருக்கமாகத் தன் காதலை வெளிப்படுத்தி இவள் பாடிக் கொண்டிருக்க, அடுத்த கண்ணியைத் தன காதலி பாடுவதாக எண்ணி மயங்கும் காதலன், மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டு, அப்படியே உறங்கிவிடுவான் ! இந்தக் காட்சியைக் காணும்போது நம் மனம் நோகும் என்பது மட்டும் உண்மை !
--கி.பாலாஜி
#📷நினைவுகள்