இன்று (28.08.2026) மதியம் 2 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு மின்துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
முதலாவதாக, கேங்மேன் பணி நியமன ஆணை சம்பந்தமாக:
எனது 12 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, 2019 முதல் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணிநியமன ஆணைக்காகக் காத்திருக்கும் 5391 கேங்மேன் தொழிலாளர்களுக்கும் உடனடியாக பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என சமீபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து முன்வைத்தேன்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, உடற்தகுதித் தேர்வையும் முறையாக நிறைவு செய்துள்ள இவர்களில் 15,106 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 9,613 பேருக்கு மட்டுமே பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,391 தொழிலாளர்களின் குடும்பங்களும் பல ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
முதல்வர் தலையிட்டு நிலுவையில் உள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட சூழலில், சில தவிர்க்க இயலாத காரணங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நீக்கி, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, மேலும் காலதாமதமின்றி 5391 பேருக்கும் பணிநியமன ஆணை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
அமைச்சரும் விரைவில் தடைகளை நீக்கி இக்கோரிக்கையை நிறைவேற்றித்தர அவசியம் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
இரண்டாவதாக, மறுமலர்ச்சி திமுகவின் மின்வாரிய தொழிலாளர் சங்க அங்கீகாரம் தொடர்பாக:
தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சங்கத்திற்கு அலுவலகம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலக் கோரிக்கைகளிலும் எங்கள் சங்கம் தொடர்ந்து பங்காற்றி வருவதை எடுத்துரைத்து, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.
இந்தக் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
நன்றி தெரிவித்து விடைபெறுகையில், சமீபத்தில் புதுடெல்லியில் வெளிடப்பட்ட தலைவர் வைகோ அவர்களின் Vaiko in Parliament என்ற ஆங்கில் நூற்தொகுப்புகளை வழங்கினேன். அமைச்சர் ஆர்வமுடன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், கேங்மேன் சார்பில் தோழர்கள் திண்டுக்கல் விஜய், கள்ளக்குறிச்சி இளங்கோ, வந்தவாசி வினோத்குமார், காஞ்சி சஞ்சய் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சைதை சுப்பிரமணி, ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன், அரசியல் ஆய்வு மையச் செயலாளரும் தொழிற்சங்க தலைவருமான ஆவடி இரா. அந்தரிதாஸ் உடன் இருந்தனர்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
28.8.2026
#DuraiVaiko #tvk #cmvijay #nirmalkumar
#vaiko mdmk #mdmk #Mdmk & Vaiko & Duraivaiko❤🖤❤ #Nabalur D Elumalai Mdmk #mdmk #Vaiko#Mdmk#Tiruvalangaduunionmdmk