ஸ்ரீ (969)ஸிம்ஹாயநமஹ:.....!!!
பராசர பட்டர் என்னும் வைணவ ஆச்சாரியர் திருக்கோட்டியூரில் சிலகாலம் தங்கியிருந்தார்.
அவ்வூரில் தெற்காழ்வான், கோளரியாழ்வான் என்ற இரண்டு அடியார்கள் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுள் கோளரியாழ்வான் என்பவர் வேதங்களைக் கற்று அதன்வழி நடப்பவர்.
ஆசார அனுஷ்டானங்களை எல்லாம் குறைவின்றிக் கடைபிடிப்பவர். ஆனால் தெற்காழ்வானோ, ஆசார அனுஷ்டானங்கள்
எதையுமே பின்பற்றாதவராக வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரின் நடவடிக்கைகளையும் பராசர பட்டர் கவனித்து வந்தார்.
கிரகண காலம் வந்தபோது, கோளரியாழ்வான் ஒரு குளத்தில் புனித நீராடுவதற்காகச் சென்றார்.
அப்போது தெற்காழ்வானையும் அவர் நீராட அழைத்தார். “என்னை எதற்காக அழைக்கிறீர்கள்?” என்று கேட்டார் தெற்காழ்வான்.
“கிரகண காலத்தில் புனித நீராடினால் நமது பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அதனால் தான் உங்களையும் நீராட அழைத்தேன்!” என்றார் கோளரியாழ்வான்.
தெற்காழ்வான், “நான் செய்த பாபங்கள் இவ்வாறு தண்ணீரில் போடும் ஒரு முழுக்காலோ, இரண்டு முழுக்காலோ தீராது!
திருக்கோட்டியூர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நரசிம்மர் அவரது நகங்களால் கிழித்தால் மட்டுமே எனது பாபங்கள் தீரும்!” என்றார் தெற்காழ்வான்.
இந்த உரையாடலைக் கேட்ட பராசர பட்டர் ஓடி வந்து தெற்காழ்வானை அணைத்துக் கொண்டார்.
“என்னை மன்னித்து விடுங்கள்!” என்றார் பட்டர். “சுவாமி! உங்களை நான் மன்னிப்பதா” என்று கேட்டார் தெற்காழ்வான்.
“ஆம்! நீங்கள் ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றாதவர், சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர் என இத்தனை நாளாக நினைத்திருந்தேன்.
ஆனால் நரசிம்மர் மேல் தங்களுக்குள்ள பக்தியை இன்று தான் புரிந்து கொண்டேன்!”என்று சொன்ன பட்டர்,
ஒரு வரலாற்றை நினைவு கூர்ந்தார்:
முன்னொரு சமயம் வியாசரும் மற்ற முனிவர்களும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது சில முனிவர்கள், “நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியன் போன்ற அசுரர்களின் உடல்களைக் கிழித்து
அவர்களை இம்சிப்பதால், ‘ஹிம்ஸன்’(இம்சை செய்பவர்) என்று அவரை அழைக்க வேண்டும்!” என்று கூறினார்கள்.
அதற்கு வியாசர், “முனிவர்களே!நம் பார்வைக்கு நரசிம்மர் தன் நகத்தால் அசுரர் உடலைக் கிழிப்பது இம்சை போலத் தோன்றும்.
ஆனால் அது இம்சை அல்ல. ஏனெனில், அந்த அசுரர்கள் பற்பல பாபங்களைச் செய்தவர்கள்.
அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் பல ஊழிக் காலங்கள் நரகத்தில் வாட வேண்டியிருக்கும்.
அவ்வளவு நீண்ட காலம் நரகத்தில் அவர்கள் துன்பப்படுவதற்குப்பதிலாக, நரசிம்மர் தனது கூரிய நகங்களால் அவர்கள் உடலைக் கிழிக்கிறார்.
அந்த ஒரு நொடியில் அசுரர்கள் அனுபவிக்கும் ஆழ்ந்த துயரம், அவர்களது அனைத்துப் பாபங்களையும் போக்கி அவர்களைத் தூய்மைப் படுத்துகிறது.
இப்படித் தீயவர்களான அசுரர்கள் மீதும் கூட கருணை கொண்டு, அவர்களைத் தூய்மைப் படுத்தும் நோக்கில் தான் நரசிம்மர் அவர்களை இம்சிக்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால் அவரது செயல் ஹிம்ஸை போலத் தெரியலாம்.
ஆனால் உண்மையில் ஹிம்ஸைக்கு நேர்மாறான அனுக்கிரகத்தைத் தான் அவர் செய்கிறார்.
எனவே ஹிம்ஸன் என்று நீங்கள் சொன்ன பெயரை நேர்மாறாக மாற்றிவிடுங்கள்!” என்றார் வியாசர்.
இவ்வரலாற்றைச் சொன்ன பட்டர், “ஹிம்ஸன் என்ற சொல்லை நேர்மாறாக மாற்றி எழுதுகையில் ‘ஸிம்ஹன்’ என்று வருமல்லவா?
எனவே அன்று முதல் நரசிம்மர் ‘ஸிம்ஹன்’ என்றழைக்கப்பட்டார்.
அந்த ஸிம்ஹனைப் போன்ற முகத்தோடு இருப்பதால் தான் சிங்கமும் ‘ஸிம்ஹம்’ என்றழைக்கப்படுகிறது.
அத்தகைய ஸிம்ஹனான நரசிம்மரின் நகங்கள் நம் பாபங்களைப் போக்கி நம்மைத் தூய்மைப் படுத்தும் என்ற நுட்பத்தை அறிந்த
உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!” என்று சொல்லித் தெற்காழ்வானைத் தழுவிக் கொண்டார்.
ஹிம்ஸை போல் தோன்றும் செயல்களைச் செய்தாலும், அதிலும் ஹிம்ஸைக்கு நேர் மாறான அனுக்கிரகத்தையே செய்பவரான நரசிம்மர்
‘ஸிம்ஹ:’ ஹிம்ஸைக்கு நேர்மாறானவர் என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 202-வது திருநாமம்.
“ஸிம்ஹாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நரசிம்மரின் அருளால் எப்போதும் தூயவர்களாக விளங்குவார்கள்.
#🙏 லட்சுமி நரசிம்மர்