ஆம்பூரில் ஓய்வூதியம்
கடந்த மாதம்கூட, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ஒரு சம்பவம் நடந்தது நினைவிருக்கா? 70 வயது வேலாயுதம் என்ற முதியவர் இப்படியொரு மோசடியில் சிக்கியிருந்தார்.. இவர் ஒரு கூலி தொழிலாளராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி உஷா காலனி தொழிற்சாலையில் வேலை செய்தவர்.. ஆனால் அவர் இறந்துவிட்டதால், உஷாவுக்கு வரும் மாதந்தோறும் ஓய்வூதியத்தை வேலாயுதம் பெற்று வருகிறார்.
ஆனால், சமீபத்தில் அதிகாரிகள் ரூ. 1.5 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக கூறி அந்த ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டனர். வேலாயுதம் வேலூர் ஜிஎஸ்டி ஆபீசில் முறையிட்டார்,
ஆனால் அதிகாரிகளோ, லோக்கல் போலீஸில் புகார் தர சொல்லி, அதற்கான நகலை கொண்டு வரும்படி அவரை திருப்பிவிட்டார்களாம்.. பிறகு போஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தால், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முதியவர், மிகுந்த துயரத்துக்கு ஆளானது நினைவிருக்கலாம்.
வேலூரில் ஷூ கம்பெனி யசோதா
இதோ இப்போது வேலூர் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. குடியாத்தம் அருகேயுள்ள நாகால் பகுதியை சேர்ந்த தம்பதி மகாலிங்கம் யசோதா.
இதில் மகாலிங்கம் கார் டிரைவராக உள்ளார்.. யசோதா அங்குள்ள தனியார் ஷூ கம்பெனியில் மாதம் ரூ. 8 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். கடந்த 4ம் தேதி யசோதாவுக்கு அவரது வங்கிக்கணக்கில் சம்பளம் போடப்பட்டுள்ளது. அந்த பணத்தை எடுக்க யசோதா சென்றபோது, போதிய பண இருப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது..
ரூ.13 கோடி வரி பாக்கி
உடனே யசோதா கணவர் மகாலிங்கத்தை அழைத்துக்கு கொண்டு வங்கிக்கு சென்றிருக்கிறார்.. அப்போதுதான் அவருடைய வங்கிக் கணக்கு 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி இருப்பதாக காட்டி முடக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்..
சம்பளமாக மாதம் 8 ஆயிரம் மட்டுமே வருவதாக இருப்பது, 13 கோடி ரூபாய் வரி எப்படி வரும்? என்று அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.. இதனை வங்கி அதிகாரிகளே நம்பவில்லையாம். அதனால்தான் யசோதாவை சென்னையில் உள்ள ஜிஎஸ்டி ஆபீசுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்..
8 ஆயிரம் சம்பளம்
இதுகுறித்து யசோதா சொல்லும்போது, "நான் மாதம் 8000 சம்பளம் மட்டுமே வாங்குகிறேன்.. என்னால் எப்படி 13 கோடி ரூபாய் GST கட்ட முடியும்? இதனால் நான் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளேன்.. எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கண்ணீருடன் சொல்கிறார்..
கணவர் மகாலிங்கம் சொல்லும்போது, "எங்கள் குடும்பம் சம்பளத்தில் தான் இயங்குகிறது. இந்த மாதிரியான ஜிஎஸ்டி பாக்கி எங்களுக்கு ஏன் வந்தது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளோம்.. எங்களுக்கு வர வேண்டிய சம்பளத்தை கூட எடுக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளோம்" என்று கவலையுடன் கூறுகிறார்.
ஆம்பூர், குடியாத்தம்
ஏற்கனவே ஆம்பூரிலும் ஷூ கம்பெனியில் வேலை பார்த்த உஷாவின் அக்கவுண்ட்டில் ரூ. 1.5 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக சொல்லி, வரவேண்டிய ஓய்வூதிய பணத்தையும் நிறுத்திவிட்டனர். இப்போது குடியாத்தத்திலும் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் யசோதாவுக்கு 13 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக கூறி சம்பளத்தை எடுக்க முடியாமல் செய்துள்ளனர்..
தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஏன் இப்படி அடிக்கடி சிக்கல் வருகிறது? குறைந்த சம்பளத்தை பெற்று ஜீவனம் நடத்துவோருக்கு எப்படி கோடிக்கணக்கில் வரி பாக்கி வரும் என்பது குறித்து அதிகாரிகள்தான் விளக்கம் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
##📰டிசம்பர் 09 முக்கிய தகவல்📺\ #மாவட்ட செய்திகள்