#🙏🪔 ஓம் சுக்கிரன் பகவான் போற்றி 🪔 🙏 #சுக்கிரன் #🙏🪔 ஓம் சுக்கிரன் பகவான் போற்றி 🪔🙏 பகவான் சரித்திரம்?
நவகிரகங்களிலேயே மிகவும் பளபளப்பானவர், அழகானவர், செல்வத்தை அள்ளிக் கொடுப்பவர் யார் என்றால் அது வெள்ளி பகவான் தான். அதாவது சுக்கிரன். நாம் சுக்கிரன் என்றும், வெள்ளி என்றும் அழைப்பது இவரைத்தான்.
பல பேருக்கு வெள்ளி என்றால் வெறும் கிரகம் என்று தான் தெரியும். ஆனால் அவருக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.
யார் இந்த சுக்கிர பகவான்?
இவர் சாதாரண ஆள் இல்லை. சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு மகரிஷிக்கும், காவிய மாதாவுக்கும் பிறந்தவர். அதனால் தான் இவரை பார்க்கவர், கவி, பிருகு புத்திரர் என்றெல்லாம் அழைப்பார்கள்.
சிறு வயதிலேயே எல்லா கலைகளிலும் வல்லவராக இருந்தார். பிரகஸ்பதி தேவர்களுக்கு குரு என்றால், இவர் அசுரர்களுக்கு குரு. அதனால் தான் அசுரகுரு என்ற பெயர். தேவர்களின் குருவுக்கு தான் வியாழக்கிழமை என்ற ஒன்று உண்டு. சுக்கிரனுக்கு ஏற்றது வெள்ளிக்கிழமை.
சுக்கிரன் எப்படி அசுரகுருவாக ஆனார் என்று தெரியுமா?
சுக்கிராச்சாரியார் சிறு வயதிலேயே சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்தார். பல ஆயிரம் வருட தவம். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் நேரில் தோன்றினார்.
அப்போது தான் சிவபெருமான் அவருக்கு மரணத்தையே வெல்லும் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தையும், செத்தவர்களைக் கூட உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தையும் கற்றுக் கொடுத்தார்.
இந்த வரத்தை வைத்து தான், தேவர்களோடு போரில் இறந்து போன அசுரர்களை எல்லாம் சுக்கிராச்சாரியார் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்தார். அதனால் தேவர்களால் அசுரர்களை ஜெயிக்கவே முடியவில்லை. இதனாலேயே தேவர்கள் சுக்கிர பகவான் மீது மிகுந்த மரியாதையுடன் இருந்தனர். அனைத்து அசுர அரசர்களை விடவும் சுக்கிராச்சாரியார் அதிகம் போற்றப்பட்டார்.
நமக்கெல்லாம் தெரிந்த மகாபலி சக்கரவர்த்திக்கு குருவாக இருந்து வழிநடத்தியதும் இவர்தான்.
இவருக்கு ஒரு இல்லாமல் இருப்பதும், குட்டையான உருவம் பற்றியும் பலருக்கும் தெரியாது.
மகாபலி தானம் கொடுக்கும் போது, வந்திருப்பது விஷ்ணுவின் வாமன அவதாரம் என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், தானத்தை தடுக்க நினைத்தார்.
கமண்டலத்தின் நீர் வரும் துளையை வண்டாக உருவெடுத்து அடைத்துக் கொண்டார்.
அதை புரிந்து கொண்ட வாமனர், ஒரு தர்ப்பை புல்லால் அந்த துளையை குத்தினார். அதில் சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பறிபோனது. அன்றிலிருந்து தான் அவருக்கு ஒரு கண் இல்லை என்கிறது புராணம்.
அப்படியே ஜோதிடத்தில் சுக்கிர பகவானின் நிலையை பார்க்கலாம்.
ஜோதிடத்தில் வெள்ளி என்றாலே சுக்கிரன். சுக்கிரன் என்றாலே அது ஆடம்பரம்.
காதல், திருமணம், அழகு, கலை, சினிமா, செல்வம், சொகுசு வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்.
ஒருவர் ஜாதகத்தில் வெள்ளி பலமாக இருந்தால், அவர் வாழ்க்கையில் காசு பணத்திற்கு குறைவே இருக்காது. திருமணம் சீக்கிரம் கைகூடும். கலைத்துறையில் பெரிய ஆளாக வருவார்.
அதே வெள்ளி கெட்டுப் போனால், காதல் தோல்வி, திருமண தடை, பணக்கஷ்டம் எல்லாம் வரும் என்பார்கள்.
வெள்ளிக்கிழமை தான் இவருக்கு உரிய நாள். அன்று மகாலட்சுமியை வழிபடுவது, வெள்ளை நிற ஆடை தானம் கொடுப்பது, மொச்சை தானம் கொடுப்பது எல்லாம் வெள்ளி தோஷத்தை குறைக்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி பகவான் வெறும் கிரகம் அல்ல. மரணத்தை வென்றவர். அசுரர்களையே வாழ வைத்தவர். நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் தரக்கூடிய மங்கள நாயகன்.
ஓம் சுக்கிர பகவானே போற்றி!
- தயாநிதி வீரராகவன்