பலராமர்

MUTHUPANDIAN RAMKUMAR
585 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
AI indicator
#பலராமர் பலராம ஜெயந்தி ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் எட்டாவது அவதாரமாகத் தோன்றியவர் ஸ்ரீ பலராமர். வசுதேவரின் புத்திரரான ஸ்ரீ பலராமரின் அவதாரத்தைப் பற்றி சற்றே அறிவோமா? ஸ்ரீ வசுதேவருக்கும், தேவகி மாதாவிற்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையே, தேவகிமாதாவின் சகோதரனான, கம்சனை அழிக்கும் என்கிற அசரீரி கேட்டபின்பு, கம்சன், அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்ததும், அவர்களுக்குப் பிறந்த சிசுக்களை, கம்சன் அழித்து வந்ததையும் யாவரும் அறிவோம். தேவகி மாதாவிற்குப் பிறந்த ஆறு குழந்தைகளை, கம்சன், கொன்ற பிறகு, ஏழாவது முறையாக தேவகி மாதா கருவுற்றிருந்தார். அப்பொழுது, ஸ்ரீ மகாவிஷ்ணு ஆனவர், யோக மாயாவை அழைத்தார். 'தேவகியானவள், ஆதிசேஷனை கருவில் சுமந்திருக்கிறாள். அந்தக்கருவை, வசுதேவரின் இன்னொரு மனைவியான, ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றிவிடு. மாயையான, நீ, யசோதையின் கர்ப்பத்தில் இருந்து, அவளுக்குப் பெண்ணாக பிறக்க வேண்டும். நான், மதுராவில் தேவகியின் வயிற்றில் அவதாரம் செய்யப் போகிறேன்' என்றார். ஸ்ரீ பகவானின் ஆக்ஞையை ஏற்றுக் கொண்ட யோகமாயா, அவ்வாறே செய்து முடித்தாள். தேவகிமாதாவின் வயிற்றில் இருந்த ஏழாவது கரு, சிதைந்து போனதாக கம்சனுக்கு தெரிவிக்கப்பட்டது. ரோகிணி கருவுற்ற செய்தியை அறிந்த ஸ்ரீவசு தேவர், தன்னை சார்ந்தவர் யாராக இருந்தாலும் கம்சன் அழித்து விடுவான் என்று எண்ணி, ரோகிணியை, மதுராவை விட்டு வெளியேறி, ஆயர்பாடி மாளிகையை அடைந்தால், நந்தகோபரின் பாதுகாவலில் இருக்கலாம் என்று வலியுறுத்தினார். இருவர் சிறையில் இருக்கும்பொழுது, தான் மட்டும் தப்பித்துப் போவது சரியில்லை என்று ரோகிணி மாதா எண்ணினார். ஆனால், ஸ்ரீ வசுதேவர், தேவகிமாதாவின் வற்புறுத்தலினால், ரோகிணி மாதா மதுராவை விட்டு வெளியேற சம்மதித்தார். ரோகிணி தன் தோற்றத்தை ஒரு அரண்மனை சேவகன் போல மாற்றிக் கொண்டார். வெள்ளை நிறப் புறவியைத் தேர்ந்தெடுத்து, அதில் அமர்ந்து, ஆயர்பாடியை அடைந்தார். ஸ்ரீ நந்தகோபரும், ஸ்ரீ யசோதாவும் எல்லையில்லா உவகை அடைந்தனர். அவர்களின் ஆதரவான, அன்பான அரவணைப்பில், ரோகிணி மாதா திளைத்தார். நாட்கள் நகர்ந்தன. ரோகிணி மாதாவின் பேறு காலமும் வந்தது. பிரசவ அறையில் இருந்து, திடீரென்று, மலர்க ளின் சுகந்த மணம், எட்டு திக்கிலும் பரவியது. இனிமையான கானம் எங்கிருந்தோ அனைவரையும் மயக்கியது. ஆனிரைகளும், புள்ளினங்களும் சந்தோஷ ஆரவாரம் செய்தன. வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய, ரோகிணி மாதா, அழகான தேஜசுடன் கூடிய ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார். யதுகுல மன்னர், நந்தகோபர், ஆயர்பாடி வாழ் பிரஜைகளுக்கு, பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினார். கோகுலமே விழாக்கோலம் பூண்டது. அவர்களின் குலகுருவான, கர்க மகரிஷி வரவழைக்கப்பட்டார். குழந்தை பிறந்த நாள் நட்சத்திரம் இவைகளை கணக்கில் கொண்டு, சிசுவின் பெயரை நிர்ணயம் செய்து கொண்டார். பிறகு, நல்லதொரு நாளில், குழந்தைக்கு நாம கரணம் செய்வித்தார். ராமன் என்று பெயர் வைக்கலாம் என்று கூறியவர், வரும் காலங்களில் மிகுந்த பலவானாகத் திகழ்வான் என்று மேலும் சிலாகித்து, பலராமன் என்று பெயர் சூட்டினார். ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் பலராமர், எப்பொழுதுமே ஸ்ரீ கிருஷ்ணருடனேயேதான் காணப்பட்டார். ஆதிசேஷன், திருமாலுக்கு ஏதாவது ஒருவகையில் சேவை சாதித்துக் கொண்டிருப்பவர் ஆயிற்றே. ஒவ்வொரு பிராந்தியத்திலும் பலராம ஜெயந்தி அனுசரிப்பது வேறுபடுகிறது. நம் நாட்டில் பலராம ஜெயந்தி, இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாரா யணம் செய்தல் நல்லது. 'சங்கர்ஷணன்' அதாவது கரு மாறிப் பிறந்தவன் என்கிற பொருள் கொண்ட பெயரைக் கொண்ட பலராமர் மற்றும் கிருஷ்ணனை, குழந்தை வரம் வேண்டுபவர்கள் இன்றைய தினம் வழிபட்டால் மிகுந்த பலனைத்தரும்.