கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே
ஐவர்க் குறுதியிட அச்சுதருந் தோன்றுவாராம்
கலக்கமுடன் விலங்கில் கவிழ்ந்திருந்த மாதுவுட
மலக்கமது தீர மலரோன் பிறக்கலுற்றார்
ஐவர்க் குபகாரம் அன்பாகச் செய்திடவும்
தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிக ளீவதற்கும்
கஞ்சனுட வலுமை கட்டழித்துக் கொல்வதற்கும்
விஞ்சவரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும்
சத்த பெலமுள்ள தத்துவங்க ளுள்ளோரைத்
தத்தியுள்ள விமனையும் தன்னா ளாக்கிவிட்டுக்
கொல்வதற்கும் தேவருட கூர்முறையந் தீர்ப்பதற்கும்
வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும்
முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே
தன்னிக ரில்லாத தையல்தெய்வ கிவயிற்றில்
பிறக்கிறா ரென்று பெரியோர்கள் கொண்டாட
இறக்கிறார் பொல்லாதார் என்றுமிகக் கொண்டாட
முன்பெற்ற பிள்ளை முழுதுமவன் கொன்றதினால்
வன்பற்ற மாது மங்கையந்தத் தெய்வகியும்
மெத்த மயங்கி முன்னம்விதி தன்னைநொந்து
கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ
என்றுஅந்தக் கன்னி இருபேருந் தான்புலம்பி
விண்டு சொல்லாத விதன மிகவடைந்து
அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே
பழுதில்லா தாயன் பாவை வயிற்றிலுற்றார்
.
விளக்கம்
=========
இறையோனின் அந்த எண்ணம், கண்ணன் அவதாரம் மண்ணுலகில் மலர வேண்டும் என்ற விருப்பமுடையோருக்கெல்லாம் விருந்தாக அமைந்தது, எனவே, தெய்வகி வயிற்றில் தோன்றி திருமால் திருஅவதாரம் செய்யப் போவதையும், கம்சனால் காவலில் வைக்கப்பட்டு கவலையுற்றிருக்கும் தெய்வகிக்கு சிறைக்காவல் முடிவடையப் போவதையும், பஞ்ச பாண்டவர்களுக்கு கண்ணன் கருணைபுரியப் போவதையும், தெய்வகிக்கும், ரோகிணிக்கும் பரகதி கொடுப்பதற்கும், கம்சனுக்கே உரித்தான பல வலிமைகள் அனைத்தையும் அழித்து அவனைக் கொல்வதற்கும், அருள் ஞானத்தை வரமாக அரனிடம் பெற்று அவனியில் அநியாகக்காரனாக அட்டூழியம் செயதுகொண்டிருப்போரையும், ஏழு யானை பலமும் எதிர்த்தவன் பலத்தில் பாதியை தன் வயம் கவரும் தத்துவக்காரர்களான சத்தபல அசுரர்கள் ஆறுபேரை, அதே சத்த பலமுடைய வீமன் ஒருவன் மூலமாக அழித்து, அந்த வீமனைத் தன்பால் சேர்த்துக்கொள்ளவும், நீண்ட நெடுங்காலமாகக் குமுறி கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் தேவர்களின் முறையத்திற்கு தீர்ப்பு வழங்கவும், பூமாதேவியின் பாரத்தைக் குறைப்பதற்கும், துவாபரயுகத்தில் மகாவிஸ்ரீ்ணு கிருஸ்ரீ்ண பரமாத்மாவாக அவதரிப்பாரென்று முன்பே வியாசமுனிவர் சொல்லிவைத்த அறிவிப்பின்படி தனக்கு நிகரில்லாத தெய்வகியின் வயிற்றில் மகாவிஷ்ணு மகனாகப் பிறக்கப்போகிறார் என்றும் அதனால் பொல்லாதவர்களெல்லாம் பொடிந்து மடிந்துபோகிறார்கள் என்றும் நல்லோர்களெல்லாம் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
.
அதே நேரத்தில் கிருஷ்ண பரமாத்மாவைப் தன்னுடைய கருவறையில் தாங்கி கர்ப்பமுற்றிருக்கும் தெய்வகியோ மனம் நொந்தாள். மறுகினாள், குமுறினாள். இறைவா ! இதற்கு முன் நான் பெற்ற ஏழு குழந்தைகளையும் என்னுடைய அண்ணன் கம்சன் என் கண்முன்னே கொடூரமாகக் கொலை செய்துவிட்டானே. இன்னுமோர் கொலைக்கு அவனை ஏன் ஆளாக்குகிறாய் என்று புண்பட்டாள். புலம்பினாள். புத்தி பேதலித்த பாவைபோல் புழுங்கிப் புழுங்கி அழுதாள்.
.
பழுதான தன் தலையெழுத்தை நினைத்து நினைத்து நிலைகுலைந்தாள். கர்த்தன் செயலிதுவோ, கரிமால் செயலிதுவோ, என நினைத்து அந்தக் காரிகைகளான் தேவகியும், ரோகணியும் கண்ணீர் மல்க கதறிக் கதறி அழுதார்கள். தன்னுடைய வேதனையை வெளிக்காட்ட முடியாமல் விம்மினார்கள். தன் மனக்குறையை மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் பரிதவித்தார்கள்.
.
.
அகிலம்
========
பகவதியு மங்கே பாவையசோ தைவயிற்றில்
சுகபதியு மங்கே தோன்றினள்கா ணம்மானை
மாயனந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற தவ்வளவில்
தேசமெல்லாம் நன்றாய்ச் செழித்ததுகா ணம்மானை
கெற்பமுற்ற தெய்வகியாள் கெஞ்சுகவா யஞ்சுகமும்
நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய்
பத்துமாதந் திகைந்து பாலன் பிறந்திடவே
சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து
வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று
விசுவாச மாதருட விலங்கது தானுமற்றுத்
தாள்திறந்து நேரம் தான்விடியு முன்னாகக்
கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை
.
விளக்கம்
=========
கண்ணனை கர்ப்பமுற்ற தெய்வகி கலக்கமுற்றிருக்கும் போது தான் ஆயர்பாடியில் நந்தகோபனின் மனைவி யசோதையின் மணிவயிற்றுக் கருவறையில் பகவதிதேவியும் சிசுவென உறைந்தாள்.
.
மாயனாகிய மகாவிஷ்ணு தெயவகியின் வயிற்றில் உருவான நேரம் அந்தத் தேசமே செழித்துக் கொழித்தது. கிளிபோன்று கொஞ்சு மொழி பேசுகின்ற தெய்வகியோ பூரண நிலவுபோல் பொலிவடைந்தாள். பத்து மாதம் திகைந்தது பாலகனாய் கண்ணபிரான் பாருலகில் பிறக்கும் நேரம் நெருங்கியது.
.
அப்போது வசுதேவன், தெய்வகி, ரோகிணி ஆகிய மூவரும் சிறை வைக்கப்பட்டிருந்த கோட்டை மதிற் சுவற்றை சுற்றிநின்ற வீரதீரக் காவலர்களான ஏவலர்களெல்லாம் இனம்புரியா நிலையில் வலுவிழந்தனர்.
.
வசுதேவனின் காலில் பூட்டப்பட்டிருந்த கனத்த விலங்கு கணீரென்று உடைந்தது. அதுபோல் தெயவகி, ரோகிணி ஆகியோரின் விலங்கும் வெடித்து சிதறின.
.
பூமிப்பந்தின் பின்னொரு பாகத்தில் ஒளிவீசிக் கொண்டிருந்த பகலவனாம் கதிரவனோ அங்கே அந்தி சாய்ந்து இங்கே ஒளிவீச எழுந்தருளுவதற்கு முன்பாக, ஏந்திழையாள் தெய்வகியின் கருவறையில் கருவாய் உருவாகி பத்து மாதங்கள் காத்திருந்த கண்ணபிரான் மண்ணகத்தில் பிறந்துவிட்டான். பெண் அந்த தெய்வகியோ செறிவு நிறைந்த அந்தச் சிசுவை கண்ணுற்று களிப்படைகிறாள்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர்

