#அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 17.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
கம்சன் வதை
==============
மதுரைதனில் வாழும் மாபாவிக் கஞ்சனுக்கு
இறுதிவரும் போது ஏதுசெய்தான் கஞ்சனுமே
நந்திடையன் பாலன் நல்லஸ்ரீ கிட்டிணனை
இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான் ஓராளை
கஞ்சனுட ஆளும் கண்ணர்ஸ்ரீ கிட்டிணரை
அஞ்சலென்று கண்டு அழைத்தாருமைக் கஞ்சனென்றான்
அந்தவிச ளமறிந்து அரியோ னகமகிழ்ந்து
வந்த விசளம் வாச்சுதென் றெம்பெருமாள்
கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தான்கூட்டி
ஈடவி யென்ற எக்காள சத்தமுடன்
குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே
கஞ்ச னரசாளும் கனமதுரை சென்றனரே
.
விளக்கம்
=========
ஆயர்பாடி மக்களுக்கு, அரக்கனாகிய கம்சனால் ஏற்பட்ட இன்னல்களையெல்லாம் அடுக்க விடாமல் தடுத்து, பசுக்களை மேய்க்கும் இடையனாக, நந்தகோபனின் சொந்த மகனைப் போல் வளர்ந்து வரும் கிருஷ்ணனை, வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டோம் என்பதை உணராத கம்சன், வஞ்சகமாகத் தம்மிடம் வரவழைத்துக் கொல்ல திட்டமிட்டான்.
.
தம்முடைய ஏவலன் ஒருவனை அழைத்து கிருஷ்ணனின் வீரதீரச் செயல்களை நேரில் பாராட்ட விரும்புவதாகவும், அந்த விருப்பத்தை உடனே கிருஷ்ணனுக்குத் தெரிவித்து மதுராவிற்கு அழைத்துவரும்படியும் கம்சன் ஆணையிட்டான்.
.
கம்சனின் கட்டளைப்படி ஆயர்ப்பாடிக்குச் சென்ற ஏவலனோ, கம்சனின் விருப்பத்தைக் கிருஷ்ணரிடம் தெரிவித்தான். கம்சனின் அழைப்பின் உள்நோக்கத்தை உணர்ந்த கிருஷ்ணரோ, அகமகிழ்ச்சியோடு வந்த அந்தத் தூதுவனை வழியனுப்பி வைத்து விட்டு தாம் இந்தப் பூலோகத்தில் பிறப்பெடுத்ததின் பலன் வலியவந்து வாய்த்ததென்றெண்ணி, கம்சனைக் கூண்டோடு ஒழிக்கத்தக்க ஏற்பாடுகளுடன், சிலரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு, தாரை தப்பட்டை முழக்கத்தோடும், யானைகளும் குதிரைகளும் அணிவகுக்க, ஆரணங்களின் அற்புதக் குரவை தொனி ஒலிக்க கம்சனின் காட்டாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகிமைமிகு மதுராவைச் சென்றடைந்தார்.
.
.
அகிலம்
========
நாட்டமுட னயோதை நல்லமகன் வந்தானென்று
கேட்ட விசளம் கெட்டியெனக் கஞ்சனுந்தான்
இங்கேநான் சென்று ஏற்றவனைக் கொல்லவென்று
சங்கையற்றக் கோடி தத்திப் படையுடனே
கொல்லவிட்டக் கஞ்சன் குதிரைத் தளம்படையும்
எல்லாந் திருமால் இறக்கவைத்தா ரம்மானை
கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன்
வஞ்சகனும் வந்து மாயனு டனெதிர்த்தான்
மாயனுட போரும் வஞ்சகக்கஞ் சன்போரும்
தேசமெல்லா மதிரச் சென்றெதிர்த்தா ரம்மானை
மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே
வாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தானிருந்து
கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான்பிடுங்கி
வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே
கஞ்சனையுங் கொன்று கர்மமது செய்தவரும்
தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமு மாற்றி
மாதாபிதா வுடைய வன்சிறையுந் தான்மாற்றி
சீதான உக்கிர சேனனையு மாளவைத்து
அவரவர்க்கு நல்ல ஆனபுத்தி சொல்லிமிக
எவரெவர்க்கும் நல்லாய் இருமென்று சொல்லியவர்
திரும்பிவரும் வேளையிலே தீரன்சரா சந்தனவன்
எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று
வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட
.
விளக்கம்
=========
மாயக்கண்ணன் மதுராபுரி வந்தடைந்த செய்தியை மாபாவியாகிய கம்சன் அறிந்தான். மனம் மகிழ்ந்தான். யசோதையின் மகன் இதமாக வந்து தம்பிடம் சிக்கிக்கொண்டான் என்று எண்ணி இன்புற்றான். கண்ணனைக் கொல்லுவதையே குறியாகக்கொண்ட கம்சன், தமது நம்பிக்கைக்குப் பாத்திரமான வீரர்களையும், அதற்குரிய குதிரை முதலான போர்த் தளவாடங்களையம் அனுப்பிக் கண்ணனை கொன்றுவரச் செய்தான். கண்ணபிரானோ. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கம்சன் அனுப்பிவைத்த படைகளையெல்லாம் கபளிகரம் செய்து விட்டார்.
.
கம்சன் ஏவிவிட்ட படைகளையெல்லாம் இல்லாதொழித்த கண்ணனை, வஞ்சகம் நிறைந்த கம்சனே நேரில் வந்து எதிர்த்தான். காலதேவனாகிய கண்ணபிரானுக்கும், கடைசி காலத்தை எதிர்நோக்கி நிற்கும் கம்சனுக்கும் நேரடியாகப் போர் நிகழ்ந்தது. அதனால் அனைத்துத் தேசங்களும் அதிர்ந்தன.
.
கண்ணனை எதிர்த்துக் கம்சனால் போரிட முடியவில்லை. அவனுடைய வீரதீர பராக்கிரமங்களெல்லாம் கண்ணனின் முன்னால் கதியற்றுப் போய் விட்டன. எனவே, மயக்கமுற்று மண்மீது சாய்ந்தான் மாபாவி கம்சன். கண்ணனோ விண்ணகத்து உபாய வெற்றிப் பெருமிதத்தோடு, கம்சனின் மார்பிலே ஏறி அமர்ந்து கொண்டு கம்சனுடைய குடலை அவனுடைய உடலுக்குத் தொடர்பில்லாமல் பிடுங்கி எடுத்து திக்கெட்டும் வீசித் தம் பகையைத் தீர்த்துக் கொண்டார்.
.
கம்சனைக் கொன்ற கண்ணபிரான், தாம் கம்சனுக்குச் செய்யவேண்டிய கர்மச் சடங்குகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு, தம்மையே தஞ்சமென்று எண்ணிக் கொண்டிருக்கும், தேவர்களின் இன்னல்களையெல்லாம் துடைத்து, தம்மைப் பெற்ற தாய் தந்தையருக்குக் கம்சனால் வழங்கப்பட்ட சிறைவாசத்தை அகற்றி, கம்சனின் பதவிப் போதையால் காலங் காலமாக சிறையிலே சித்திரவதையை அனுபவித்துக்கொண்டிருக்கும், கம்சனைப் பெற்ற தந்தையாகிய உக்கிரசேனனை உடனே விடுவித்து, அந்த உக்கிரசேனருக்கு மீண்டும் மதுராபுரியை ஆள மகிமை பொருந்திய மகுடத்தைத் தரித்து, அந்தத் தேசத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அவரவர் இயல்புகளுக்கேற்ப புத்திமதிகளைப் போதித்து, எல்லாரும் அன்பாய் இன்பமுற வாழுங்கள் என்று ஆசீர்வதித்துவிட்டு ஆயர்ப்பாடிக்குத் திரும்பினார்.
.
திரும்பிவரும் வேளையில் கம்சனின் மாமனும், சத்தபலக்காரர்கள் ஏழு பேரில் ஒருவனுமாகிய சராசந்தன், கண்ணபிரானை வழிமறித்தான். என்னுடைய மருமகனாகிய கம்சனை இந்த உலகத்தை விட்டு வழியனுப்பிய உன்னை நான் இப்போது வழியனுப்பி வைக்கிறேன் என்று வாதாடினான். போர் புரியவும் தயாராகிவிட்டான்.
.
.
அகிலம்
========
அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து
இப்போ திவனை ஈடுசெய்யக் கூடாது
சத்தபெல மல்லோ சராசந்த வேந்தனுக்குக்
கொற்றவ வீமனல்லோ கொல்லவகை யுண்டுமென்று
இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தானடந்து
செதுவோடு கூடிச் செகலதுக்குள் ளேகினரே
கடலதுக்குள் வந்து கனத்தமதி லிட்டவரும்
திடமுடனே மாயன் துவரம் பதியிருந்தார்
.
விளக்கம்
=========
தம்மிடம் போர் புரிவதற்கு தயார் நிலையில் வந்திருக்கும் சராசந்தனைக் கண்ட கண்ணபிரான், சராசந்தனின் விதிப்பயனை உற்று நோக்கினார். அப்போது அவருடைய சிந்தனையில் இந்த சராசந்தன் சப்தபலக்காரர்கள் ஏழு பேரில் ஒருவனல்லவா? இந்த சராசந்தனோடு சேர்த்து ஐந்து சப்தபலக்காரர்களைக் கொன்ற ஒரு சதப் பலக்காரனல்லவா துரியோதனனைக் கொல்லமுடியும், அப்படி என்றால் இந்த சராசந்தனையும் வீமனல்லவா கொல்ல வேண்டும்? இவனை நாம் கொன்றுவிட்டால் துரியோதனனை வீமனால் கொல்ல விதியற்றுப் போகுமே என்ற எண்ணம் தோன்றியது.
.
ஆகவே சராசந்தனுக்குப் பயந்து ஓடுவது போல் கண்ணபிரான் ஓடிச்சென்று, தென்பாற்கடலுக்குள் புகுந்து, அங்கே துவாரகைப்பதியும் அதைச் சுற்றி கனத்த மதிற்சுவரும் அமைத்து அங்கே அமர்ந்திருந்தார்.
.
.
அகிலம்
========
விருத்தம்
==========
பூதனைச் சகட னோடு பின்னுள்ள அரக்கர் தம்மைச்
சூதனை யெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரை புக்கி
நீதமே யில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று
கூதவன் துவா ரகையில் குணமுட னிருந்தா ரன்றே
.
விளக்கம்
=========
கிருஷ்ணபரமாத்மாவைக் கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்ட பூதன், சகடன், சூதன், முதலான ஏனைய அரக்கர்கள் யாவரையும் கொன்ற கிருஷ்ணபரமாத்மா தம்முடைய உற்றார் உறவினர்களுடன் மதுராபுரிக்குச் சென்று, அங்கே கொலையாட்சி புரிந்து கொண்டிருந்த கம்சனையும் கொன்றுவிட்டு எங்கும் நிறைந்த ஏகப்பொருளாக யாருடைய ஊனப்பார்வைக்கும் படாதவராகத் தென்பாற்கடலுக்குள் இருக்கும் துவாரயம்பதியில் அமர்ந்திருந்தார்.
.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது.
.
தொடரும்… அய்யா உண்டு.

