#கந்தசஷ்டி விரதம் 4ஆம் நாள்♥️ #🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #🕉️ஓம் முருகா #🕉️கந்த சஷ்டி கவசம் *காலை தரிசனம் !*
*கந்த சஷ்டி நான்காம் நாள் தரிசனம் !!*
திருச்செந்தூர் திருப்புகழ்
சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுணசீலத் தேமிக அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழிகின்ற மாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும ன்கொலோதான் நேமிச் சூரொடு மேருத் தூளெழ நீளக் காளபு யங்ககால நீலக் ரீபக லாபத் தேர்விடு நீபச் சேவக செந்தில் வாழ்வே ஓமத் தீவழு வார்கட் கூர்சிவலோகத் தேதரு மங்கைபாலா யோகத் தாறுப தேசத் தேசிகவூமைத் தேவர்கள் தம்பிரானே..
- அருணகிரிநாதர்
பொருள் :
கடலும், சூரனும், மேரு மலையும் தூள் ஆகும்படி, பாம்பைக் காலில் கொண்ட மயிலைச் செலுத்தும் கடம்பு அணிந்த வீரனே, வேள்வித் தீயை வளப்போர்க்கு சிவலோகத்தில் இடம் தரும் பார்வதியின் குமரனே, யோக வழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே, உன் முன்னே ஊமைகளாக நிற்கும் தேவர்கள் தலைவனே ,
உனது அழகிய தாமரை போன்ற திருவடியைச் சேர்வதற்கு உரிய வழிகளைச் சொல்லுகிறது வேதங்கள் , அதையும் கடந்த நிலையின் மீதும், பகை என்பதே இல்லாத உயரிய நிலையின் மீதும், நற்குண சீல நன்னெறியின் மீதும் அன்பு கொள்ளாமல், காம, குரோத துர்க்குணங்களாலும், ஈகை இல்லாமையாலும், ஐம்புலன்களின் சேஷ்டைகளாலும், அழிகின்ற மாயமான உடல் மீது உலகில் வாழும் சிலர் ஆசை கொண்டு இருக்கின்றனர். இது ஏனோ? தெரியவில்லையே முருகா !
வேல் விருத்தம்: 02
"வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே."
முதல் வரி இப்படி வருகின்றது,
"வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்"
"வெங்காளர் கண்டர் கைச் சூலமும்" அதாவது வெங்காளம் என்றால் வெம்மை மிகுந்த விஷம் (காளம்), ஆக வெங்காளர் என்றால் சிவன், கண்டம் என்றால் கழுத்து, தன் கழுத்தில் கடும் விஷத்தை உடைய சிவனின் திருசூலமும் என்பது பொருளாகும்.
"திருமாயன் வெற்றிபெறு சுடராழியும்",
அதாவது தோல்வியே பெறாததும், ஒளி பொருந்தியதும் வேகமானதுமான திருமாலின் சக்கராயுதமும் என்பது பொருள்....
இரண்டாம் வரி இப்படி வருகின்றது,
"விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே"
விபுதர்பதி குலிசமும், விபுதர் என்றால் தேவர்கள், பதி என்றால் தலைவன், தேவர்களின் அதிபதியான இந்திரனின் குலிசமும் என்பது பொருள். குலிசம் என்றால் உறுதியான ஆயுதம் என அர்ததமாகும். இந்திரன் கையில் இருக்கும் வஜ்ஜிராயுதமும் என பொருள்....
"சூரன் குலங் கல்லி" என்றால் சூரபத்மனின் குலம் கல்லி என பொருள், கல்லுதல் என்றால் அகழ்ந்தெடுத்தல் வேர் வரை சென்று அழந்தெடுத்தல் என பொருள், கல்வி என்பதன் பொருளும் மனதின் அறியாமையினை அடிவரை அகற்றுதல் என்பதே...
இங்கே "சூரன் குலம் கல்லி வெல்லா எனக்கருதியே" என்பது சூரனின் குலத்தையும் அவன் வம்சத்தையும் மொத்தமாக அழித்தொழிப்பது என்பது முடியாது என கருதியே என்பது பொருள்...
எது முடியாது என கருதியே என்றால் முதல் வரிக்கு செல்ல வேண்டும். சிவனின் திரிசூலமும், திருமாலின் சக்கரமும், இந்திரனின் வலிமையான இடியாதயும் சூரனையும் அவன் வம்சத்தையும் ஒரேடியாக அழிக்காது என கருதி என அர்த்தம்...
அடுத்து 3ம் வரியினை தொடர்கின்றார் அருணகிரியார்,
"சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்"
"சங்க்ராம" என்பது சங்காரம் செய்வது என பொருள், "நீசயித் தருளெனத்" என்பது "நீ சயித்து அருள" என பிரிந்துவரும், நீ வெற்றிபெற வேண்டி "தேவரும் சதுர்முகனும் நின்றிருப்ப" தேவர்களும் பிரம்மனும் நின்று வெண்டுகின்றார்கள் என பொருள்...
4ம் வரி அடுத்து தொடங்குகின்றது,
"சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்"
சயிலம் என்றால் மலை, இங்கே அது கிரவுஞ்ச மலையாகின்றது. கிரவுஞ்ச மலையோடு சூரனையும் ஒரு நொடியில் கொண்ட மிக தைரியமும் உறுதியும் மிக்க வேல் நீண்ட வேல் என பொருள்....
இப்பொழுது 4 வரியின் அர்த்தமும் விளங்கும்படி பார்க்கலாம்,
விஷம் கொண்ட கழுத்தை உடைய சிவனின் சூலமும், வலிமையான விஷ்னுவின் சக்ராயுதமும், இந்திரனின் வஜ்ஜிராயுதமும் சூரனின் முழு பலத்தையும் குலத்தையும் அழிக்கமுடியாது என்பதால் தேவரும் பிரம்மனும் நின்று சூரனை சங்காரம் செய்ய வேண்டும் என கோரும் வேல், கிரவுஞ்ச மலையினையும் சூரனையும் நொடியில் உருவி ஒழித்த தீராபுகழ் கொண்ட வேல் யாருடையது?
அந்த வேல் யாருடையது என்பதை அடுத்த வரிகளில் சொல்கின்றார் அருணகிரியார்....
"கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக் கன்னி"
"கங்காளி" என்றால் அந்த பெயரை இருவகையில் சொல்வார்கள், கரும்+காளி என்பது கங்காளியாயிற்று என்பது முதல்வகை, இரண்டாம் காரணம் உடுக்குபோன்ற இன்னொரு இசைகருவிக்கு கங்காளி என பெயர், இதை கையில் ஏந்திய சிவன் கங்காளன் அவர்துணையானவர் கங்காளி, எப்படியாயினும் காளியினை குறிக்கும் சொல்லே கங்காளி, ரத்த பீஜன் போன்ற அரக்கர்களை அழிக்க வந்த காளியினை குறிப்பது, எலும்பு கூட்டை மாலையாக கொண்டவள்....
"சாமுண்டி" என்பவள் மகிஷாசூரனை அழிக்க வந்த அவதாரம்....
"வராகி" என்பவள் நிம்ப சுதும்பனை அழிக்க அவதரித்த சப்த கன்னியரில் ஒரு அம்சம், ஆபத்துக்களை வராமல் காப்பவள் வராகி, வராக மூர்த்தியின் சக்தி....
"இந்திராணி" என்பவள் சப்த கன்னியரில் ஒருத்தி இந்திரனுக்கு துணையாகி பெரும் சக்தி கொடுப்பவள்....
"கெளமாரி" என்பவள் முருகனுக்கு பெரும் சக்தியானவள், சஷ்டி தேவி என்றும் அவளுக்கொரு பெயர் உண்டு....
"கமலாசனக் கன்னி" என்றால் தாமரையில் வீற்றிருக்கும் இளமையானவள் என பொருள்....
அடுத்தும் தொடர்ந்து அன்னை நாமம் சொல்கின்றார் அருணகிரியார்,
"நா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷி"
"நாரணி" என்றால் நாராயணனின் சக்தியானவள் என பொருள்....
"குமரி" என்றால் எக்காலமும் தவமிருப்பவள் இறைவனுக்கு காத்திருப்பவள்....
"திரிபுரை" என்றால் மூன்று உலகங்களுக்கும் நாயகியான திரிபுர சுந்தரி....
"பைரவி" என்றால் பைரவரின் சக்தி....
"அமலை" இது அமலம் எனும் வார்த்தையின் மருவு ஆகும், மலம் எனும் வார்த்தைக்கு எதிர்பதம் அமலம், அதாவது குற்றமற்றவள் என பொருள்...
"கெளரி" என்றால் பொன்னிறமானவள், கயிலாயத்தின் பார்வதி கௌரி என அழைக்கபடுவார்....
"காமாட்சி" என்றால் தன் அடியார்களை மிக அன்பாக ஆட்சி செய்பவள்...
அடுத்த வரியில் மேலும் அம்மன் பெயர்கள் வருகின்றது,
"சைவ சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்"
"சைவ சிங்காரி", சைவ வழி என்றால் சிவன், சிவனின் தேவியானவள்.....
"யாமளை" என்றால் நீல நிறத்தவள், சிவன் விஷத்தை உண்டு நீலகண்டனான பொழுது அவர் கழுத்தை பிடித்ததால் அன்னைக்கும் மேனி நீல நிறமாயிற்றாம் அவளை நீலி என்பார்கள்....
"பவானி" என்றால் பிறவி பந்தத்தை வேறறுப்பவள் எல்லாவற்றுக்கும் மூலமானவள்....
"கார்த்திகை" என்றால் முருகபெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களாக வந்தவள்....
" கொற்றி" என்றால் கொற்றவை அதாவது யுத்தகளத்திற்கு அதிபதி...
"திரியம்பகி" மூன்று முக்கண்ணுடையவள், சிவகுடும்பத்தில் எல்லோருக்கும் மூன்று கண்கள் என்பது ஐதீகம்....
"அளித்த" இப்படியெல்லாம் புகழப்படும் அன்னை அளித்த என அடுத்த வரிக்கு வருகின்றார் அருணகிரியார்,
"செல்வ சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே."
"செல்வச் சிறுவன்" என்றால் உலகுக்கெல்லாம் மிகபெரிய செல்வத்தை கொடுக்கும் பாலகன், அறுமுகன் என்றால் ஷன்முகன்....
"நிருதர்கள் குல அந்தகன் " அதாவது அரக்கர் குலத்தினை அழித்தருளியவன்....
"செம் பொன் திருக்கை வேலே" அவன் பசுந்தங்கம் போன்ற கைகளில் மின்னும் வேல் அது....
ஆக பாடலின் பொருள் இதுதான்,
"ஆலகால விஷத்தை அடக்கிக் கொண்டிருக்கும் கழுத்தை உடையவரான சிவ பெருமானின் சூலாயுதமும், திருமாலின் ஒளி வீசும் சக்ராயுதமும், இந்திரனின் வஜ்ராயுதமும், சூரபத்மனையும் அவன் வம்சத்தையும் முழுக்க அழிக்க முடியாது. அதனால் குமரனே நீ ஜெயித்து எங்களுக்கு அருள வேண்டும்" என தேவர்களும் பிரம்மனும் வேண்டினர், அதன் படி கிரவுஞ்ச மலையையும் சூரபத்மனின் உடலையும் ஒரே நொடியில் ஊடுருவி அழித்த வேல் எது?
எலும்புக் கூட்டை மாலையாக போட்டுக் கொண்டவளான கருங்காளி, மகிஷாசுரனைக் கொன்று அவனின் எருமைத் தலைமேல் நின்ற சாமுண்டி, சப்த மாதர்களில் ஒருவளான வராகி, இந்திரனின் சக்தியானவள்,
குமரனின் ஆதார சக்தி, தாமரையை ஆசனமாகக் கொண்டிருக்கும் அபிராமி, விஷ்ணுவின் நாராயணி, பாலகி, மூவுல தேவியான திரிபுர சுந்தரி, பைரவரின் சக்தியான பைரவி, மலம் அற்றவள் அதாவது குற்றம் இல்லாதவள், பொன்னிறமானவளான கயிலாய நாயகி,
அடியார்களை அன்பாக ஆளும் காமாட்சி, சிவனுடைய தேவியாகிய சிங்காரி, நீலி, பிறவி கடலை அகற்றும் பவானி, கார்த்திகை பெண்ணாக வந்து நல்லறிவு தருபவள், யுத்தகளத்திற்கு அதிபதியான கொற்றவை, முக்கண்ணுடையவளான தேவி அவள்,
அந்த தேவி பெற்றருளிய, உலகுக்கெல்லாம் முத்தி உள்பட எல்லா செல்வத்தை கொடுக்கும் சண்முகன், அரக்கர் குலத்தினை அழித்தருளிய கந்தனின் பொன் கையிலே திருக்கையிலே விளங்கும் பொன்னொளி வீசும் அழகிய வேலாயுதமே அதுவாகும் என்பது பொருள்.....
அருணகிரி நாதர் கடவுள் வாழ்த்து பாடவில்லை, ஆனால் முதல் பாடலில் சூசகமாக விநாயகரை இழுத்து பாடி அருளை பெற்றார்.
இரண்டாம் பாடலில் மும்மூர்த்திகளையும் அவர்களை இயக்கும் அன்னையினையும் பாடி அப்படியே வேலின் சிறப்பினை சொல்கின்றார்.
இங்கே வேல் சிறப்பினை சொல்லவரும் பொழுது மூன்று பெரும் கடவுளையும் அன்னையினையும் ஏன் பாடுகின்றார் அருணகிரிநாதர்?
அதில்தான் இருக்கி
ன்றது ஞான மறைபொருள்.....
இந்த பாடலில் சிவன், விஷ்ணு, இந்திரனின் ஆயுதங்கள் பற்றி சொல்லும் அருணகிரியார் சூசகமாக ஒரு விஷயத்தை சொல்கின்றார்.
அது மாயையினை இந்த ஆயுதங்கள் முழுவதும் அழிக்காது.
ஆம், புராணத்தை கவனியுங்கள் இவை எல்லாம் அகங்காரம் கொண்டோரை அழிக்கும்.
ஆனால் பக்தியுடன் பணிவோரை பாசத்துடன் பணிவோரை கொல்லாது, பாசத்துக்கும் பக்திக்கும் இவை கட்டுப்படும்.
சிவன் பக்திக்கு கட்டுப்படுபவர், இந்திரனும் விஷ்ணுவும், பிரம்மனும் கூட அப்படியே. இதனால் இவர்களை நோக்கி தவமிருந்தால் அந்த பக்தி மாயையில் இவர்களே வரமருள்வார்கள்.
அந்த வரத்தின் காரணமாக இவர்களே வரம் பெற்றவனை எதிர்க்கமுடியாமல் போகும்....
மும்மூர்த்திகளின் ஆயுதமும் இந்திரனின் ஆயுதமும் சூரமபத்மனை அழிக்க முடியாது என்பது, மாயை எனும் அஞ்ஞானத்தை இந்த மும்மூர்த்திகளால் முழுக்க அழிக்க முடியாது என்பதே, மாயையினை முழுக்க அழிக்கமாட்டார்கள்....
ஆனால் முருகனின் ஞானம் அந்த மாயையினை முழுக்க அழிக்கும் வேரோடு அழிக்கும்.
சூரனிடம் சிவனின் சூலம் செல்லுபடியாகவில்லை, விஷ்ணுவின் சக்கரம் அவன் நெஞ்சை தாண்டவில்லை ஆனால் முருகனின் வெல் அவனை ஊடுருவி வீழ்த்தியது எனபது ஆசை எனும் மாயையினை ஞானம் முழுக்க வீழ்த்தும் என்பதே,
இதனால்தான் ஞான சூலம், ஞான சக்கரம், ஞான பிரமாஸ்திரம், ஞான வஜ்ஜிராயுதம் என ஆயுதமில்லை ஞானவேல் என முருகனின் வேலுக்கு இன்னொரு பெயர் உண்டு.
முருகன் பக்திக்கு இரங்குவார். ஆனால் அந்த பக்தியில் மாயையோ பேராசையோ கலந்திருந்தால் அவர் வரம் அருள்வதில்லை.
இதனாலேதான் இன்றுவரை முருகனிடம் வரம் வாங்கிய ஒரு அசுரனை பற்றிய செய்தியே வராது.
அதுதான் ஞானம் முழு ஞானம் அஞ்ஞானத்தை அறவே கருவறுத்து எது சரியோ அதை மட்டும் வழங்கும் பெரும் ஞானம்.
இந்த முருகபெருமானின் வேலை பற்றி சொல்லும்பொழுது அன்னை சக்திதேவி பற்றியும் அவள் எடுத்த அவதாரம் பற்றியும் ஏன் அருணகிரிநாதர் சொல்கின்றார்?
முருகனுக்கு வேல் கொடுத்தது அன்னை என்பது அன்னை சக்தியே எல்லா ஞானத்துக்கும் மூலம் என்பதையே குறிக்கும், அதனாலே அவள் ஞானாம்பிகை என அழைக்கபடுகின்றாள்.
அந்த ஞானாம்பிகை தன் ஞானத்தையே முருகனுக்கு வழங்கினாள்.
அதில்தான் முருகன் பாலகுரு எனும் பக்குவமடைந்து பிரம்மனுக்கே உபதேசித்தான்.
அந்த அன்னையின் அவதாரங்களையெல்லாம் வரிசையாக சொல்லும் அருணகிரியார் அதனில் ஒரு ஒற்றுமையினை காட்டுகின்றார்.
ஆம் அவர் சொன்ன அவதாரமெல்லாம் காளி, சாமுண்டி முதல் கொற்றவை வரை எல்லாரும் அசுரர்களை ஒழிக்க வந்தவர்களே....
அதுவும் வகை வகையாக வரம்பெற்ற பலமான அரக்கர்களை மொத்தமாக அழிக்க வந்தவர்களே....
இந்த அரக்கர்களுக்கு வரமருளியோர் மும்மூர்த்திகள் எனும் வகையில் அவர்கள் ஆயுதம் செயலற்று போக அன்னையே வந்து அந்த அரக்கர்க்களை அழித்தாள்.
அதாவது பக்தி பாசத்தில் மயங்கிய மும்மூர்த்திகள் ஒழிக்கமுடியா மாயையினை ஞானத்தால் அன்னை கருவறுத்தாள்.
காளி முதல் கொற்றவை வரை அவள் அழித்த அசுரகளெல்லாம் ஒவ்வொரு வகையானவர்கள்.
பெண்ணாசை மண்ணாசை பேராசை இன்னும் எத்தனையோ ஆசைகளிலும் மாயைகளிலும் சிக்கி பெரும் பாதகம் செய்தவர்கள்.
அன்னை அந்த மாயைகள் எல்லாவற்றையும் எல்லா வகையினையும் அழித்தாள்.
ஆம், அன்னை உலகின் எல்லா மாயைகளையும் அழித்து ஞானத்தை தருவாள் என்பதே இந்த அவதாரங்களின் தத்துவம்.
அந்த அன்னை தன் சக்திமிக்க ஞானத்தை முருகனுக்கு வழங்கினாள்.
அதை கொண்டு முருகன் சூரனை நொடியில் வீழ்த்தினான்.
அன்னை என்பவள் ஞானதத்தும மாபெரும் ஞானதத்துவம் அவள் தன்னை சுருக்கி முருகனின் அருளாய் கொடுத்தாள் முருகன்
அந்த ஞானத்தோடு தன்னை அண்டியோர் அனைவரையும் காத்து நிற்கின்றான்.
எந்த மாயையும் அஞ்ஞானமும் அவனிடம் நில்லாது.
அந்த ஞானவேல் அதை முறியடித்து வெற்றி தரும் என மகிழ்ச்சியாய் உருக்கமாய் பாடுகின்றார் அருணகிரியார்.....
(அருணகிரியார் சூசகமாக சொல்லவருவது சிவசக்தி தத்துவம் எனும் பெரும் ஞானநிலையினை, முருகன் எனும் பெரும் ஞானதெய்வம் சிவசக்தி தத்துவத்தின் வடிவம் அவன் கையின் வேல் அந்த பெருஞானத்தின் மகிமை கொண்டது அது அஞ்ஞான மாயையினை முழுக்க வேறறுக்கும் என்பதே பாடலின் மறைபொருள்)
*ஸ்ரீ முருகன் அருளாளே இந்நாளும் திரு நாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!* #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
00:15
