ShareChat
click to see wallet page
search
*நமச்சிவாயம்* தினம் ஒரு திருமுறை சிந்தனை - 1730 *சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில் துயர் நீங்கி தூ நெறிக்கண் சேரலாமே* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *ஆறாம் திருமுறை* திருத்தாண்டகம் 93 வது திருப்பதிகம் - *பொது* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *பாடல் எண் : 5* ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர் மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம் மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீ ராகில் துயர்நீங்கித் தூநெறிக்கட் சேர லாமே. *விளக்கவுரை :* *குறிப்பு :* இத்திருத்தாண்டகம் திருப்பூந்துருத்தியில் அப்பர் சுவாமிகள் ஞாயிறும், திங்களும் தோயும் திருமடம் சமைத்து, உழவாரம் செய்து இருந்த போது அருளியப் பதிகங்களில் ஒன்றாகும். இத்திருப்பாடல் திருச்சோற்றுத்துறையை சிறப்பித்து எடுத்து நமக்காக அருளியது ஆகும். ஊற்றுத்துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும் போது உணர மாட்டீர் : ஓர்தல் - நினைத்தல். "உடலின் கழிவுகளான அழுக்குகள் ஊறி ஒழுகும் ஊற்றுத்துறைகள் ஒன்பதையும் உங்களது அந்திமக் காலத்தில் ஒருசேர அடைக்கும் போது அதனை உம்மால் உணர்ந்து கொள்ள முடியாது..." மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாய மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் : மாற்றுத்துறை - மேற்குறிப்பிட்டதற்கு மாற்றாக உள்ள மற்றொரு துறை. அது உங்களுக்கு மரணமில்லா பெருவாழ்வை அளிக்கும் வகையை போதிக்கும் துறை. "நீங்கள் இறந்த பின்னர் உங்களுடைய யாதனா சரீரத்தை எம தூதுவர்கள் கொண்டு போகும் முன்னம், மயக்கத்தை செய்யும் மாயா வாழ்க்கையை மெய்யென மகிழ்ந்து வாழும் அன்பர்களே..." வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய : வேற்றுத்தொழில் - பகைமையையுடைய வேற்றுச் செயல். "பகைமை பூண்டு வேறான செயலை செய்யும் முப்புரத்து அசுரர்களின் புரங்கள் மூன்றையும் வெவ்வழலில் மாட்டி எரித்து வீழ்த்திய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும்..." சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில் துயர் நீங்கித் தூ நெறிக்கண் சேரலாமே : "திருச்சோற்றுத்துறையை சோற்றுத்துறை சோற்றுத்துறை என்று சொல்லிப் பெருமானை நினைந்து போற்றுவீர் ஆகில், உங்களுடைய துன்பம் நீங்கித் தூயதான வீடுபேற்றை அளிக்கும் நன்நெறியினைச் சென்று நீங்கள் சேரலாமே..." 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *முழுவதும் ஓர் தொகுப்பாக :* உடலின் கழிவுகளான அழுக்குகள் ஊறி ஒழுகும் ஊற்றுத்துறைகள் ஒன்பதையும் உங்களது அந்திமக் காலத்தில் ஒருசேர அடைக்கும் போது அதனை உம்மால் உணர்ந்து கொள்ள முடியாது, நீங்கள் இறந்த பின்னர் உங்களுடைய யாதனா சரீரத்தை எம தூதுவர்கள் கொண்டு போகும் முன்னம், மயக்கத்தை செய்யும் மாயா வாழ்க்கையை மெய்யென மகிழ்ந்து வாழும் அன்பர்களே, பகைமை பூண்டு வேறான செயலை செய்யும் முப்புரத்து அசுரர்களின் புரங்கள் மூன்றையும் வெவ்வழலில் மாட்டி எரித்து வீழ்த்திய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும், திருச்சோற்றுத்துறையை சோற்றுத்துறை சோற்றுத்துறை என்று சொல்லிப் பெருமானை நினைந்து போற்றுவீர் ஆகில், உங்களுடைய துன்பம் நீங்கித் தூயதான வீடுபேற்றை அளிக்கும் நன்நெறியினைச் சென்று நீங்கள் சேரலாமே. 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *சிவாயநம* *தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது* *பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி* *எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே* *நெடுங்களத்தான் பாதம் நினை.* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 திருச்சிற்றம்பலம் #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ஆரூராதியாகேசா ! ஆரூராதியாகேசா ! - ShareChat