ShareChat
click to see wallet page
search
மத்திய அரசின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது பெறும் பெருமைக்குரிய முதல் ஓதுவார் திருத்தணி சுவாமிநாத ஓதுவாமூர்த்திகள் ஆவார். இவர் 1945 ம் ஆண்டு திரு.நாகரத்ன முதலியார் அவர்களுக்கும் தாயார் சம்பூர்ணம் அவர்களுக்கும் திருக்கருக்காவூர் அருகில் உள்ள ஆலத்தூரில் பிறந்தார். ஆரம்பத்தில் திருக்கடவூர் பிச்சக் கட்டளை தேவாரப் பாடசாலையில் திரு. இரத்தினம் பிள்ளை அவர்களிடம் திருமுறை பயின்று ,பின் தருமையாதீனத் தேவாரப் பாடசாலையில் திரு. வேலாயுத ஓதுவாமூர்த்திகளிடம் திருமுறைப் பயிற்சி பெற்றவர். பின் குன்றக்குடி ஆதீனத்திலும், ஆதீனத்தை சார்ந்த பிரான்மலை திருக்கோயிலிலும் ஓதுவாராகப் பணியாற்றியவர். பின் தருமையாதீனத்தின் மயிலாடுதுறை குமரக்கட்டளையில் பணியாற்றியவர் . பின்னர் தேவகோட்டை, திருமங்கலத்தில் பணிசெய்தார் . திருத்தணி முருகன் ஆலயத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு ஓதுவாராக 25 ஆண்டுகள் பணியாற்றினார் . அதுவே அவரது பெயரின் முன் அடையாளமானது. பணி ஓய்வின் பின் சிதம்பரம் வி. எஸ், டிரஸ்ட் தேவாரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார், சிலகாலம் ,நெய்வேலி நடராசர் ஆலயத்திலும், பின் சென்னை தருமையாதீனப் பிரச்சார நிலையத்திலும் , திருவையாறு ஆலயத்திலும் பணியாற்றினார். தற்காலம் தருமையாதீனம் 27 வது குருமணிகளின் அருளாணையின் வண்ணம் தருமையாதீனத்தின் திருமுறைப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு பல இளம் ஓதுவார்களை உருவாக்கி வருகிறார். தருமையாதீனத்தின் உயர்ந்த விருதாகிய திருமுறைக்கலாநிதிப் பட்டம், தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழிசைச் சங்கத்தின் பண்ணிசைப் பேரறிஞர், திருமுறை இசைத்தமிழ் அறிஞர், திருமுறை இசைத்தமிழ் அறிஞர், தஞ்சை சதய விழாவில் “தேவார நாயகம்” என பல பட்டங்களைப் பெற்றவர். ஏராளமான குறுந்தகடுகளில் இனிமையான திருமுறை இசையினை பாடி பதிவு செய்துள்ளார்கள். திருவாசகம் முழுவதையும் பாடி பதிவு செய்துள்ளார். தற்போது திருநாவுக்கரசர் பதிகங்கள் முழுவதையும் பாடிப் பதிவு செய்துள்ளார் . இக்குறுந்தகடு நாளைய தினம் (26-1-2026 ) திருவண்ணாமலையில் தருமைக் குருமணிகள் திருக்கரங்களால் வெளியிடப்படவுள்ளது. இலங்கைக்கு அதிக முறை சென்றவர் ,மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, போன்ற பல நாடுகளுக்கு சென்று திருமுறைப் பணியாற்றியவர். தமிழகமெங்கும் இவர்கள் பாடாத கோயில்கள் இல்லையெனலாம். தற்போது எண்பது வயதான போதும் , குரலில் எவ்வித நடுக்கம் இன்றி தமது ஆத்ம பலத்தினால் கம்பீரமாக திருமுறைகளை ஓதிவருகிறார். தனது இனிமையான குரலால் கேட்போரை மெய்யுருகச்செய்து கண்ணீர் பெருகச் செய்துவிடும் அபார பண்ணிசைத் திறமை உடையவர். எல்லோரிடத்தும் மிகவும் அன்பு பாராட்டும் நற்பண்பு வாய்ந்தவர். பல இளம் ஓதுவார்களை உருவாக்கியவர். பல ஓதுவா மூர்த்திகளுக்கு பண்ணிசை அரங்கிற்கு பாங்கான முறையைக் காட்டி வருபவர். இவர் சைவம் தழைக்க தனது இனிமையான குரலால் சிவனடியார்கள், திருமுறை பாடிவருபவர்கள், இசைக் கலைஞர்கள், கவரும் வண்ணம் இறைவன் சன்னதியிலும், இசை அரங்குகளிலிம் மனதில் இறை உணர்வு ஊறும்படி உருகிப் பாடிவருபவர். தற்போது திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் ஐயாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளமை அவ்விருதுக்கே பெருமை சேர்ப்பதாகும். தமிழகத்திற்கு தொல் தமிழிசையாம், பண்ணிசைமூலம் பத்ம ஸ்ரீ விருது பெற்று பெருமை சேர்க்க இருக்கும் ஓதுவார் ஐயாவை இவ்வேளையில் வாழ்த்தி திருவடிகள் வணங்கி மகிழ்கிறோம்... படித்ததில் மனம் கவர்ந்தது. #பொதுமக்கள் விருப்பம் @ #அன்புடன் காலை வணக்கம் #🙏ஆன்மீகம் #✨பிரதோஷம்🕉️ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
பொதுமக்கள் விருப்பம் @ - ShareChat