#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #பைபிள் #💒✝️வேதத்தில் இருந்து தினமும் ஒரு தேவ வார்த்தை📖🙏 சிந்தனை*
*"தூய வாழ்வுக்குக் கிடைக்கும் கைம்மாறு"*
அந்தப் பெரியவர் பண்புள்ள மனிதர்களோடு நல்லதோர் உறவை வைத்திருந்தார்; பொல்லாதவர்களை அவர் அறவே தவிர்த்தார். இது பற்றி அவருக்குத் தெரிந்தவர் அவரிடம், “நல்லவர்களோடு உறவு வைத்திருப்பது நல்லதுதான். அதற்காகப் பொல்லாதவர்களை அறவே தவிர்க்க வேண்டாமே! அவர்களுடைய உதவி எப்போதாவது உங்களுக்குத் தேவைப்படுமே!” என்றார்.
பெரியவர் அவரை மேலிருந்து கீழ்வரை ஒரு வினாடி கூர்ந்து பார்த்தார். பின்னர் அவர் தனக்குத் தெரிந்தவரிடம், “நல்ல பண்புள்ளவர்களோடு நாம் பழகினால், அவர்களிடம் இருக்கும் நல்ல பண்புகள் நம்மிலும் வளரும். பின்னாளில் அதற்குக் கடவுள் நல்ல கைம்மாறு தருவார். அற்ப குணமுடையவர்களோடு பழகினால், அவர்களிடம் இருக்கும் தீய பண்புகளும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். முடிவில் கடவுளிடமிருந்து நாம் தண்டனையைத் தான் பெற வேண்டி வரும். அதனால்தான் நல்ல பண்புள்ளவர்களோடு பழகுகின்றேன்” என்றார்.
ஆம், நாம் நற்பண்புகளோடு வாழும்போது அதற்குரிய கைம்மாறினைப் பெறுவோம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம், தூய வாழ்விற்குக் கைம்மாறு உண்டு என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறைப்பற்றில்லாதவர்கள், இறைவன்மீது பற்றுக்கொண்டு வாழ்ந்த மனிதருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வது பற்றிப் பேசுகின்றது. இறைவன்மீது பற்றுக் கொண்டவர் அல்லது இறையடியார் இறைப்பற்றில்லாதவர்கள் செய்த தீச்செயல்களையும் பாவங்களையும் கடிந்துகொண்டார். இதனால் இறைப்பற்றில்லாதவர்கள் இறையடியாரைக் கொல்ல முடிவு செய்கின்றார்கள். இவர்கள் தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு; மாசற்றவருக்குப் பரிசு கிடைக்கும் என்பதை மறந்து போனதுதான் வேதனையானது.
நற்செய்தியில் யூதர்கள், இயேசு உண்மையில் எங்கிருந்து வந்தவர்கள், அவர் யார் என்பதையெல்லாம் அறியாமல், அவரது வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்து, அவரை மதிப்பிடுகின்றார்கள், அவரைக் கொல்லவும் துணிகிறார்கள். அப்போதுதான் இயேசு, “என்னை அனுப்பியவர் உண்மையானவர். நான் அவரிடமிருந்து வருகிறேன்” என்கிறார். இயேசு கடவுளிடமிருந்து வந்து, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றியதால், கடவுள் அவருக்கு எப்பெயருக்கும் மேலான பெயரை அருளினார் (பிலி 2:9).
எனவே, நாம் கடவுளின் அன்பு மக்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் நிரூபித்து, அவர் அளிக்கும் கைம்மாறினைப் பெறுவோம்.
*சிந்தனைக்கு:*
இறையாடியார்களுக்குத் துன்பம் வந்தாலும், இறைவன் தன் அடியார்களைக் கைவிடுவதில்லை
தீமையை விதைத்துவிட்டு, நல்லவற்றை அறுவடை செய்ய முடியாது. தீமைக்குத் தீமைதான் பரிசாகக் கிடைக்கும்
ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாது அவரைப் பற்றித் தீர்ப்பிடுவது தவறு.
*இறைவாக்கு:*
‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்’ (திபா 1:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் நேரிய வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*


