பெருமாள் செய்த வியாபாரம் - கோமான் ஶ்ரீ பாலாஜி
திருவேங்கட மலையின் அலிபிரி அடிவாரம். குளிர்ந்த மலைக்காற்றுடன் கோவிந்த நாமம் மனதை வருடிக் கொண்டிருந்தது. வரதனும் ரங்கனும் வேங்கட மலையை நோக்கியபடி ஒரு படியில் அமர்ந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் நெடியோனை தரிசிக்கப் போகிறோம் என்ற பக்தியில் திளைத்திருந்தனர்.
வரதன்: (சிந்தனையில் ஆழ்ந்து) ரங்கா, ஒரு விஷயம் எப்போதும் என் மனதில் கேள்வியாக நிற்கிறது. நாம் கோயிலுக்குப் போகிறோம், துளசி மற்றும் மாலைகளை பெருமாளுக்கு வாங்கி சாத்துகிறோம், கற்பூர ஆரத்தி காட்டுகிறோம், வேண்டிக்கொள்கிறோம். ஆனால் பெருமாளுக்கு நாம் செய்யும் இந்த செயல்கள் ஒரு பெரிய விஷயமா? அவர்தான் இந்த பிரபஞ்சத்தையே படைத்தவர் ஆயிற்றே! சூரியனையும், சந்திரனையும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் படைத்தவருக்கு, நம்முடைய சிறிய பக்தி எதற்கு? கொஞ்ச நாளைக்கு முன் நாம் திருமழிசையில் பேசிக் கொள்ளும்போது அன்புடன் கூடிய பக்தி அவசியம் என்றாய். அவருக்கு நம் பக்தி உண்மையிலேயே தேவையா?
ரங்கன்: (ஆழமான புன்னகையுடன், கண்களில் பக்திப் பிரகாசத்துடன்) வரதா! நீ நினைப்பது முற்றிலும் மாறான சிந்தனை. நம் மனிதக் கண்ணோட்டம் அது. நம் மனம் உண்மையைத் தவிர எப்போதும் எதிர்மறையாக தான் சிந்திக்கும். நாம் அவரைத் தேடுவதை விட, அவர் தான் நம்மைத் தேடுகின்றார். நமக்காக காத்திருக்கிறார். இதனை ஒரு பாசுரங்கொண்டு பார்ப்போம். ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் - திருவாய்மொழியில் ஒரு பாசுரத்தில், பெருமாள் தன்னிடம் எப்படி ஒரு அற்புதமான "வியாபாரம்" பேசினார் என்று சிலிர்த்துப் போய், உருகிப்போய், பரவசத்துடன் சொல்கிறார்.
வரதன்: (வியப்பும் ஆவலும் கலந்து) என்ன கடவுள் வியாபாரம் பேசினாரா? அப்படி என்ன பேசினார்? என்ன சொல்கிறாய் ரங்கா?
ரங்கன்: ஆமாம் வரதா! திருவாய்மொழி பாசுரங்கள் அனைத்தும் மேலோட்டமாக பார்த்தால் இலக்கிய தன்மை கொண்டதாக இருக்கும் ஆனால் ஒவ்வொன்றின் அர்த்தம் நம் ஆசார்யர்கள் அவற்றை நன்கு விளக்கி அதற்கு பல்வேறு உள் அர்த்தங்களை கொடுப்பார்கள். சரி நாம் விஷயத்திற்கு வருவோம். "பற்பநாபன் உயர்வற உயரும்..." என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரத்தில் அந்த அதிசயமான, நம்ப முடியாத வியாபாரத்தை விளக்குகிறார் ஆழ்வார். என்ன ஒரு பரிமாற்றம், என்ன ஒரு பேரம்!
வரதன்: தயவு செய்து விளக்கமாகச் சொல்லேன் ரங்கா. ஆர்வமாக இருக்கிறது. நான் கேட்கக் காத்திருக்கிறேன்.
ரங்கன்: அவர், பற்பநாபன், அதாவது அவரது திருநாபிக் கமலத்தில் நான்முகன் பிரம்மாவைத் தோற்றுவித்து, அவர் மூலம் இந்த முழு உலகத்தையும், கோடி பிரபஞ்சங்களையும் படைத்தவர். இதில் ஒரு விஷயம் கவனித்தாயா, பத்மநாபன் எனும் சமஸ்கிருதப் பெயரினை பற்பநாபன் என்று ஆழ்வார் மாற்றியுள்ளார். இதேபோன்று ஆண்டாளும் பற்பநாபன் என்றே தன் பாசுரத்தில் அருளியுள்ளாள்.
அவர், விசும்போர் பிரான், விண்ணுலகத்தில் வாழும் நித்யசூரிகளுக்கெல்லாம், அதாவது ஆயிரம் கோடி தேவர்களுக்கெல்லாம் அரசன், தலைவன், எஜமானன்!
உயர்வற உயரும் பெருந்திறலோன், அவருடைய அளவற்ற சக்திக்கு மேலே, அவருடைய எல்லையற்ற வல்லமைக்கு மேலே உயர்ந்தது எதுவுமே இல்லை.
வரதன்: (பிரமிப்புடன்) சரி ரங்கா, இவ்வளவு மகத்தான பெருமை கொண்டவர், ஆழ்வாரிடம் என்ன வியாபாரம் செய்தார்?
ரங்கன்: (குரல் தழுதழுக்க, கண்களில் நீர் மல்க) இங்குதான் வரதா நம்மாழ்வார் உருகுகிறார்! "எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு" "நான் என்ற ஒருவன் இருப்பதையே அறியாமல், உணராமல், ஆன்மா அற்ற ஜடப்பொருள் போல, உயிரற்ற கல்லைப் போல, சவம் போல இந்த புளியமரத்தின் பொந்தில் கிடந்தேன். எனக்கு என்னைப் பற்றிய உணர்வே இல்லை, அறிவே இல்லை. ஆனால் அவரோ என்ன செய்தார் தெரியுமா? 'இவன் எனக்குச் சொந்தமானவன், இவன் என் உடைமை, இவன் என் குழந்தை, எற்பரன்' என்று தீராத ஆசையுடன், எனக்குள் ஞானத்தை ஊற்றி, உயிர் கொடுத்து, அறிவு கொடுத்து, என்னை ஒரு மனிதனாக, ஒரு ஆன்மாவாக, ஒரு அடியாராக மதித்து உருவாக்கினார். என்னை எழுப்பினார், என்னை உயர்த்தினார்! அதன் உச்சமாக "எனக்கே தன்னைத் தந்த கற்பகம்" என்கிறார்.
'கற்பக விருட்சம்' என்று நீ கேள்விப்பட்டிருப்பாய் வரதா. புராண கதைகளில் தேவலோகத்தில் உள்ள அந்த அதிசய மரத்தை. அதன் அருகே நாம் போய் நின்று, "எனக்கு வீடு வேண்டும், எனக்கு பொன் வேண்டும், எனக்கு புகழ் வேண்டும், எனக்கு நீண்ட ஆயுள் வேண்டும்" என்று கேட்டால், அது உடனே அந்த வரத்தைக் கொடுக்கும். அது அதன் இயல்பு. ஆனால், இந்த நாராயணன் என்கிற கற்பக விருட்சம் என்ன செய்தது தெரியுமா?
வரதன்: (மூச்சு அடக்கி) என்ன செய்தது ரங்கா? சொல்லு!
ரங்கன்: "நீ என்னிடம் எதையாவது கேட்பாய், வீடு கேட்பாய், செல்வம் கேட்பாய், சுவர்க்கம் கேட்பாய். ஆனால் உனக்கு வேறு எதுவுமே வேண்டாம். இவை எல்லாம் அழிந்துபோகும் பொருட்கள். என்னை நானே உனக்குத் தருகிறேன், நானே உன்னுடன் வருகிறேன்!" என்று தன்னையே, தன் முழு திருமேனியையே, தன் இருதயத்தையே ஆழ்வாருக்குக் கொடுத்துவிட்டாராம்!
வரதா இதில் என்ன வியாபாரம் என்று நினைக்கிறாய் இல்லையா? நம்மாழ்வார் அவரிடம் கொடுத்தது என்ன? ஒன்றுமேயில்லாத, குற்றத்தாலும் குறைகளாலும் நிறைந்த தனது சிறிய ஆன்மாவை மட்டுமே. ஆனால் நாராயணன் - அந்த சர்வேஸ்வரன் - அவருக்குக் கொடுத்ததோ, விலையே நிர்ணயிக்க முடியாத தன்னையே! தன்னுடைய சர்வ வல்லமையை, தன்னுடைய அன்பை, தன்னுடைய திருவடி சம்பந்தத்தையும்! எந்த பலனையும் எதிபார்க்காமல் கொடுத்துவிட்டாராம். வரதா! ஒரு உடைந்த மண்பானையைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக விலைமதிக்க முடியாத தங்கத்தைப் பெற்றால் அது யாருக்கு லாபம்? நான் கொடுத்தது அழுக்கு நிறைந்த என் ஆத்மா. அவர் கொடுத்ததோ, குறையற்ற தன் திருமேனி! இந்த வியாபாரத்தில் நான் ஜெயித்துவிட்டேன், அவர் தோற்றுப்போனார். ஆனால் அந்தத் தோல்வியைத்தான் அவர் வெற்றியாகக் கொண்டாடுகிறார்!" என ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்கிறார். நீயே சொல்லு வரதா இந்த வியாபாரத்தில் யாருக்கு லாபம்? யார் ஜெயித்தார்கள்?
வரதன்: (வியப்பும் பரவசமும் கலந்து) ஆழ்வாருக்கு ஏன் நமக்கும்தானே லாபம்! பக்தனுக்குத்தானே எல்லையில்லாத லாபம்!
ரங்கன்: (மகிழ்ச்சியில் நெகிழ்ந்து) அதைத்தான் ஆழ்வார் "என் அமுதம்" என்று கொஞ்சுகிறார், அரவணைக்கிறார். "என் உயிருக்கு உயிரானவன், என் இனிமை, என் தேன், என் இன்பம்" என்று பாடுகிறார். மேகம் போலக் கருமையாக, நீலக்கல் போல நிறத்தில், திருவேங்கட மலையில் நித்தியமாக நின்று எல்லோரையும் காக்கும் இவர்தான் என் தந்தை, என் அண்ணன், என் எல்லாமே என்கிறார்.
இறுதியாக ஆழ்வார் அவரை "எந்தை தாமோதரனே" என்று அன்போடு, பெருமையோடு முடிக்கிறார். இந்த "தாமோதரன்" என்கிற பெயருக்கு என்ன ஆழமான அர்த்தம் தெரியுமா வரதா?
வரதன்: தாமோதரன் என்றால் கண்ணன் தானே? யசோதை கயிற்றினால் உரலில் கட்டிய பொல்லாதக் கண்ணன் தானே?
ரங்கன்: (பரவசத்துடன்) அதேதான் வரதா! "தாமம்" என்றால் கயிற்று கட்டு. "உதரம்" என்றால் வயிறு. உரலில் இடுப்பில் கயிறால் கட்டப்பட்டவன் தாமோதரன்.
இந்த பாசுரத்திலேயே எவ்வளவு அழகான முரண்பாடு உள்ளது தெரியுமா! உலகங்களையெல்லாம் படைத்த 'பற்பநாபன்', தேவர்களுக்கெல்லாம் தலைவனான 'விசும்போர் பிரான்', எல்லாவற்றுக்கும் மேலான 'பெருந்திறலோன்' - இவ்வளவு பெரியவர், பக்தன் என்று வந்துவிட்டால், அன்பு என்று வந்துவிட்டால் என்ன ஆகிறார் தெரியுமா? யசோதை கையில் கட்டுப்பட்டுக் கிடக்கும் குழந்தை போல, அன்புக்குக் கட்டுண்டு, பக்திக்குக் கட்டுப்பட்டு, அடியவர்களின் இதயத்தில் சிறைப்பட்டுக் கிடக்கிறார் தாமோதரனைப் போல! அன்று யசோதையின் கயிற்றுக்குக் கட்டுப்பட்டவன், இன்று ஆழ்வாரின் பாசுரங்களுக்கோ, அல்லது நம்மைப் போன்ற பக்தர்களின் சின்னஞ்சிறு அன்புக்கோ கட்டுப்பட்டு, நகர முடியாமல் நம் இதயத்திற்குள்ளேயே தங்கிவிடுகிறான். அதுதான் தாமோதரன் என்ற சொல்லின் மகிமை!
"என்னை ஒரு மனிதனாக உருவாக்கி, என்னை தன் அடியானாக ஆட்கொண்டு, பின்பு தன்னையே முழுமையாக எனக்குத் தந்த வள்ளல், தன்னையே எனக்குப் பரிசாக அளித்த பெரும் கொடையாளி அவன்" என்று ஆழ்வார் பெருமிதத்துடன், நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
வரதன்: (கண்கள் பனிக்க) என்ன ஒரு விளக்கம் ரங்கா! என்ன ஒரு தத்துவம்!
ரங்கன்: இனி நாம் செய்ய வேண்டியது என்ன? அன்பால் அவரை நம் இதயத்தில் கட்டி வைப்பது மட்டுமே! இப்பொழுது முழுப் பாசுரத்தையும் சொல்வோம்.
“பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்*
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்* என் அமுதம்; கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன்* விசும்போர் பிரான்; எந்தை தாமோதரனே.”
(இருவரும் திருவேங்கட மலையை நோக்கி மௌனமாக வணங்குகின்றனர். மலை மீது மேகங்கள் கூடுகின்றன. அவர்கள் இதயத்தில் பெருமாளின் அன்பு பெருகுகிறது.)
நாராயண! நாராயண!! #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா


