எனக்கு உலகியலில் எந்த கள்ளக் காதலியோ, வைப்பாட்டியோ இப்போதோ, எப்போதோ கிடையாது - திருநீலகண்டத்தின் மீது ஆணை!! 😄😂. (ஏன், மனைவியே கூட இல்லை!!) ஆன்மீகத்தில் சிவ பக்தர்கள் திருமாலையும் வழிபடுவது கள்ளக் காதல் ஆகாது!😄 தமிழகத்தில் சைவ-வைணவ ஒற்றுமை ஏற்பட்ட பிறகு, இரண்டு கடவுளரையும் வழிபடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். ஆன்மீகத்தில் காதல் - ஊடல் பாவனையை இந்த அளவுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எழுதினேன். போன பதிவிலும் ஒரு விஷயத்தை எழுத இருந்தேன்; ஆனால், எழுதும் போது எப்படியோ மறந்து விட்டு விட்டேன். வழக்கமாக அப்படியே விட்டு விடுவேன். இந்த முறை அதை இந்த பதிவில் எழுதி விடலாம் என்று நினைக்கிறேன். *********************************************** மாணிக்கவாசகர் "சீலமின்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி கூத்தாட்டுப் பாவையாக இருந்தேன்" என்று பாடியது பலரும் அறிந்தது. ("தமிழ் இனி மெல்லச் சாகும்" என்று பாரதியார் பாடினார் என்று பட்டிமன்றங்களில் பேசுவார்கள். ஆனால், அதற்கு அடுத்த வரி அவர் என்ன பாடினார் என்று அவர்கள் படிப்பது கூட இல்லை என்று பாரதியார் வழிவந்த ஒருவர் எழுதிய பதிவில் படித்தேன். அது போல் தான் இதுவும்!😄). அடுத்த வரியில் மாணிக்கவாசகர் பாடுகிறார் - "மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி" . சீலம் (ஒழுக்கமான வாழ்க்கை) கூட இல்லாமல் இருந்த எனக்கு "வழி காட்டி ஆண்டான்" என்று பாடுகிறார். அதாவது ஒழுக்கமில்லாத வாழ்க்கை; காமக் களியாட்டம் ஆன்மீகம் அல்ல என்று வழிகாட்டினான் என்று பொருள். இது எல்லாரும் எழுதும் விளக்கம் தான். ஆனால், நான் முதல் முறை இந்த பாடலை கேட்ட போது எனக்கு ஒரு விளக்கம் மனதில் தோன்றியது. மாலுங்காட்டி என்று சொல்லி விட்டு பிறகு வழியும் காட்டி என்று பாடுகிறார்; இதில் "மால்" என்ற சொல்லுக்கு பொருள் என்ன?! அன்பு என்று ஒரு விளக்கம் எழுதப் பட்டுள்ளது. ஆனால், எனக்கோ மால் என்றவுடன் திருமால் தான் ஞாபகத்துக்கு வந்தது. திருமால் தான் ஒழுக்க நெறி, அறநெறியை வகுப்பவர்; உலகை காக்கும் கடவுளான அவர் உலகில் அறநெறியை காப்பதன் மூலமே உலகை காக்க முடியும். அந்த அறநெறியில் வாழ்வது தான் சிவபெருமானை அடைவதற்கும் வழி என்பதால் தான் "மால் காட்டி வழிகாட்டி" என்று பாடியதாக எனக்கு தோன்றியது. (அதனால் தான் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி சிதம்பரத்தில் பிரதானமாக உள்ளதோ?!). பின்னாளில் உரை ஒன்றை படித்த போது, உரையாசிரியர்கள் ஏனோ அப்படி உரை எழுதவில்லை என்று தெரிய வந்தது!! எனக்கென்னவோ பாடலின் பொருள் எனக்கு தோன்றியது தான் என்று படுகிறது!!
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம


