ShareChat
click to see wallet page
search
திருமழிசையாழ்வார் அடையார் புற்றுநோய் மருத்துவமனையை(Cancer Institute) விட்டு வெளியே வந்தபோது, “உங்க அம்மாவிற்கு மருந்து இல்லை, சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று மருத்துவர் சொன்னது திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லாம் பெருமாள் விருப்பம் என்று உபந்நியாசத்தில் கேட்டிருந்தாலும், ”அம்மா... உயிருடன் இன்னும் எவ்வளவு நாள்?” என்ற கேள்வி என் மனதில் எழாமல் இல்லை. அம்மா என்ன ஆசைப்பட்டார் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது... “திருமழிசை இங்கேயே இருக்கு, ஆனா போனதில்லை” என்று அம்மா என்றோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மறுநாள் காலை அம்மாவை அழைத்துக்கொண்டு திருமழிசைக்குச் சென்றேன். ”மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவற்றையும்” மாலையாகத் தொடுத்தால் போதும் என்கிறாள் ஆண்டாள். 'மாமாயன்' என்றால் மாயனுக்கெல்லாம் மாயன் என்று சொல்லலாம். மாயனை வரையறுக்க (Define செய்ய) திருமழிசை ஆழ்வாரின் இந்தப் பாடல் ஒன்று போதும்: ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே? கஜேந்திரனைக் காத்த நீ, குவலயாபீடம் என்ற இன்னொரு யானையைக் கொன்றாய். பசுக்களை மேய்த்தாய்; நெய் உண்டாய்; மலையைத் தூக்கிப் பசுக்களைக் காத்தாய். நப்பின்னையை அடைய ஏழு எருதுகளைக் கொன்றாய் - நீ மாயன்! என்கிறார் ஆழ்வார். முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களுடன் வாழ்ந்தவர் திருமழிசையாழ்வார். இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது. தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார். திருமாலின் அடியவராய்த் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவ மங்கைக்கும் திருமழிசை என்ற ஊரில், பெருமாளின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றனர். பிறகு பெருமாளின் அருளால் உறுப்புகள் வளர்ந்து, பசி மிகுதியால் அழுதபோது திருமகள் பாலமுது தந்தார் என்பது குருபரம்பரையில் உள்ளது. எந்தையே வினையேன், தந்த இந்தத் தொள்ளமுதினை அமுது செய்க என்று, சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால் என்று திவ்வியசூரி சரிதம் (பாடல் 57) சொல்கிறது. திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்கப் போன இடத்தில் குழந்தையின் குரல் கேட்டு, அக்குழந்தையைக் கண்டெடுத்து மகிழ்ச்சியுடன் இல்லத்துக்கு எடுத்துச் சென்றான். அவன் மனைவி பங்கயச் செல்வியுடன் இணைந்து அன்புடனும் ஆசையுடனும் குழந்தையை வளர்த்து வந்தான். திருமழிசையில் தோன்றியதால் ‘திருமழிசையாழ்வார்’ என்ற பெயர் பெற்ற இவருக்கு, ‘பக்திசாரர்’, ‘மழிசைப் பிரான்’ என்ற திருநாமங்கள் உண்டு. ‘பிரான்’ என்ற சொல் பொதுவாகப் பெருமாளைக் குறிக்கும். ஆழ்வார்களில் ‘பிரான்’ என்ற ஏற்றத்தைப் பெற்றவர் இவர் ஒருவரே. "கிடந்தவாறு எழுந்து இருந்து" என்று ஆழ்வார் பாட, கும்பகோணம் ஆராவமுதன் தன் சயனத்தை விட்டு எழ ஆரம்பித்தான். அன்று முதல் ஆராவமுதன் 'ஆராவமுதாழ்வார்' என்றும், இவர் 'மழிசைப்பிரான்' என்றும் அழைக்கப்படுகின்றனர். ’ஆழ்வார்’ என்ற பெயரைப் பெருமாள் ஏற்றுக்கொண்டு 'ஆராவமுதாழ்வார்' ஆனார். சமணம், சாக்கியம், சைவம் போன்ற பல சமயங்களைப் புகுந்து ஆராய்ந்து, இறுதியாக வைணவ சமயத்தின் மூலமாகத்தான் பரம்பொருளைக் கண்டறிய முடியும் என்ற தெளிவைப் பெற்றவர். திருமழிசையாழ்வார் பல மதங்களைத் தழுவி உண்மை அறியாது தவித்தபோது, அவரைத் திருத்தி நல்வழிப்படுத்தியவர் பேயாழ்வார். தாம் அருளிய நான்முகன் திருவந்தாதி முதல் பாட்டில்: “நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகனாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்” என்று ஸ்ரீ நாராயணனே பரம்பொருள் என்றும், அவனே எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். மாற்றுச் சமயக் கருத்துகளைக் களைந்து, திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் மிக அழுத்தமாகச் செயல்பட்டதால், மணவாள மாமுனிகள் இவரை "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார். (எப்போதும் பகை அழிக்க ஆயத்தமாகத் தறைவாளை உறையில் இடாமல் வைத்திருப்பவர் என்று பொருள்; இங்கே பகை என்பது அறியாமையையும் மாற்றுச் சமயத் தவறான கருத்துகளையும் குறிக்கும்). ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரபந்தசாரத்தில்: தைம்மகத்தில் வருமழிசைப் பரனே மற்றைச் சமயங்கள் பலதெரிந்து மாயோ னல்லாற் றெய்வம்மற் றில்லையென வுரைத்த வேதச் செழும்பொருணான் முகன்றெண்ணூற் றாறு பாட்டு மெய்ம்மிகுத்த திருச்சந்த விருத்தப் பாடல் விளங்கியநுaற் றிருபதுந்தப் பாமன் மெய்யே வையகத்து மறவாம லுரைத்து வாழும் வகையடியே னுக்கருள்செய் மகிழ்ந்து நீயே திருமழிசையாழ்வார் தை மகம் திருநட்சத்திரத்தில் திருமழிசையில் அவதரித்தார். இவர் பிற மதங்கள் பலவற்றிலும் புகுந்து ஆராய்ந்து அவற்றின் குறைகளை உணர்ந்து, 96 பாசுரங்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதி வாயிலாக ஸ்ரீமந் நாராயணனே உபாசிக்கத்தக்க தெய்வம் என்று வேதத்தின் சாரார்த்தத்தை நிலைநாட்டினார். மேலும் திருச்சந்த விருத்தம் என்ற 120 பாசுரங்கள் கொண்ட பிரபந்தத்தால், ‘சகல வஸ்துக்களும் எம்பெருமானுக்குச் சரீரமாய் நிற்பவை’ என்ற உண்மைப் பொருளை விளக்கியருளினார். இவ்விரண்டு பிரபந்தங்களையும் தவறாது மறவாது ஓதி வாழும் வகையை அருள வேண்டும் என்று இப்பாசுரத்தில் ஸ்வாமி வேதாந்த தேசிகன் திருமழிசைப் பிரானைப் பிரார்த்திக்கிறார். திருமழிசையாழ்வாரின் பெருமையை உணர்த்தும் பல வரலாற்று நிகழ்வுகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது அவரது சீடன் கணிகண்ணனைப் பற்றியது. கணிகண்ணன் பல்லவ மன்னனின் ஆணைப்படி காஞ்சியை விட்டு வெளியேறியபோது, திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்கு இணங்க, திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமாள் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு அவர் பின்னே சென்றார். பிறகு மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பெருமாள் மீண்டும் ஊர் திரும்பினார். இந்த நிகழ்வின் சான்றாகத் திருமழிசை ஆழ்வார் பாடிய இரண்டு பாடல்கள்: கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள். என்று பாடப் பெருமாள் எழுந்து செல்ல, பிறகு சமாதானமானதும்: கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன் பைந்நாகப் பாய் படுத்துக்கொள். என்று பாடியதும் பெருமாள் மீண்டும் பள்ளி கொண்டார்! இவர் மங்களாசாசனம் செய்த திவ்விய தேசங்கள் 17. மணவாள மாமுனிகள் இவரை "தூய்மதி பெற்ற மழிசைப் பிரான்" என்றும், இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" (உபதேச ரத்தின மாலை - 12) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார். இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம். நாமும் கொண்டாடுவோம்! திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!! பிகு: என் அம்மா திருமழிசையாழ்வாரைத் தான் கடைசியாகச் சேவித்தார் - மாயம் என்ன மாயமே! -சுஜாதா தேசிகன் 3.2.2026 தை மகம் திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம். #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - ShareChat