(2) நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள் - ஆழ்வானின் கருணை
சோழ அரசன் சபையில், ஆழ்வானுடைய சிஷ்யன் நாலூரான் ஏதோ சொல்லப் போக, ஸ்ரீராமானுஜரையும் சம்பிரதாயத்தின் கௌரவத்தையும் காக்கத் தன் கண்களைத் தியாகம் செய்தார் ஆழ்வான் என்பது உங்களுக்குத் தெரிந்த கதை.
சில காலம் கழித்து ஆழ்வானைச் சந்தித்த ஸ்ரீராமானுஜர் மிகவும் வேதனையுடன், ஆழ்வானை வாரியணைத்துக் கொண்டு “விசிஷ்டாத்வைத தர்சனத்துக்காக உமது கண்ணை இழந்தீரே. உமக்கா இந்த நிலை?” என்று அழுதார்.
அதற்கு ஆழ்வான், ”ஒரு ஸ்ரீ வைஷ்ணவனின் திருமண் கோணியது என்று பாகவத அபசாரப்பட்டிருப்பேனோ” என்றாராம்.
பாகவத அபசாரம் என்பது எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது என்று நினைத்த ஆழ்வான் இதை விட, அதற்குப் பிறகு அவர் செய்த காரியம் தான் அவர் கருணையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
ஆழ்வானும் எம்பெருமானாரும் காஞ்சிபுரத்துக்கு வந்த சமயம், உடையவர் ஆழ்வானை வரதாராஜஸ்தவத்தைப் பேரருளாளன் முன்பு விண்ணப்பம் செய்து, பதிலுக்குக் கண்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நியமித்தார். ஆசாரியர் சொன்னால் மறுத்துப் பேசக் கூடாது, அதனால் கூரத்தாழ்வானும் ஆசாரியர் கட்டளையை மறுக்க விரும்பாமல் அப்படியே செய்தார். ஆழ்வான் வரதாராஜஸ்தவத்தை முடிக்கும் சமயம் பேரருளாளர் “என்ன வேண்டும்?" என்று கேட்க, அதற்குக் கூரத்தாழ்வான் “நான் பெறும் பேறு நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். கூடவே தன் ஆசாரியனின் ஆணையை மீறக் கூடாது என்பதற்காக, என் தெய்வமான உன்னையுன், என் தெய்வத்தின் தெய்வமான நம் ராமானுஜனையும் மட்டும் பார்க்கும் கண்களைக் கொடு என்று வேண்டிக்கொண்டார்.
( தொடரும்.. )
-சுஜாதா தேசிகன்
6.2.2026 #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்


