அறிக்கை: *வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு அரசின் முதன்மைத் துறைகளில் ஒன்றான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர் பெருமக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைக்காக நெடுங்காலமாக போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றித்தர மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இரவு, பகல் பாராது, மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் பாராது தங்களை முழுமையாக ஒப்புவித்து, அரசின் வருவாயை பெருக்கிட அல்லும் பகலும் பாடுபடும் ஊழியர்களின் நலனை பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமையாகும். அதனை நிறைவேற்றாமல் திமுக அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரியும் ஊழியர்களை வீதியில் இறங்கி போராடச் செய்துள்ளது பெருங்கொடுமையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு...
1)வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், அவர்களை தாக்கும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் "சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை" உடன் இயற்ற வேண்டும்.
2)வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்கிட வேண்டும்.
3)தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை இரத்து செய்திட வேண்டும். 2003ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று மீள வழங்கிட வேண்டும். ஜிகிறிஷி திட்டத்தில் கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
4)அரசுப் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% ஆக நிர்ணயிக்க வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும்.
5)வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத் துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளி முகமை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
6)பொது மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
7)வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதிதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும். வருவாய்த்துறையின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
8)தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, விரைவான போக்குவரத்து வசதிகள் மற்றும் கிராம நிருவாக அலுவலர்களுக்கு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாத நிலையில், பேரிடர் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கிராம நிருவாக அலுவலர்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
9)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும்.
ஆகிய நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தங்களின் வாழ்வாதார உரிமைக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் 25.02.2026 முதல் முன்னெடுக்கும் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து கோரிக்கை வெல்ல துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.
https://x.com/Seeman4TN/status/2027011738999333216?s=20 #SEEMAN4TN #NTK4TN #செஞ்சிக்கோட்டை #GINGEE_ NTK #gingee-ntk #🙋♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


