கடன் வாங்கி, ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிப்பதா? மரங்கள் சட்டத்தை இயற்ற திமுக மறுப்பது ஏன்?
வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026’’ என்ற கொள்கையை வெளியிட்டுள்ளார். எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல், பசுமையாக்கலுக்கான திட்டங்களும் இல்லாமல் கடன் வாங்கி ஊழல் செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இத்தகையத் திட்டங்களை அறிவிப்ப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை பசுமையாக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான தொலைநோக்குப் பார்வையும், நகர்ப்புறங்களை பசுமையாக்குவதற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேற்கொண்டிருக்க வேண்டியதும் இந்த இலக்கை அடைய அவசியமானவையாகும். ஆனால், இந்தப் பணிகள் எதையும் திமுக அரசு இன்று வரை செய்யவில்லை.
எடுத்துக்காட்டாக, நகர்ப்புறங்களை பசுமையாக்க முதன்மைத் தேவை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும். அதற்குத் தேவையான மரங்கள் சட்டத்தை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழ் நாட்டில் மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என 2007ஆம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது. 2018&ஆம் ஆண்டில் சென்னை & சேலம் அதிவிரைவு பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் இதை வலியுறுத்தியது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு மரங்கள் சட்ட முன்வரைவு மீது முறையே 26.05.2022, 14.07.2022, 10.08.2022, 27.10.2022, 09.01.2023, 27.06.2023ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலப் பசுமைக் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதும், வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டதும் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பசுமைத் தாயகம் அமைப்பு பெற்ற தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. விரைவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று 2023ஆம் ஆண்டில் திமுக அரசு தெரிவித்தது. அது இன்னும் வெற்று அறிவிப்பாகவே நீடிக்கிறது.
அதேபோல், பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்காக மாவட்ட பசுமைக்குழுக்கள் 2021ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டன. இதன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அட்டவணை உருவாக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த மாவட்டத்திலும் மரங்கள் அட்டவணை உருவாக்கப்படவில்லை. மரங்கள் சட்டம் எப்போது உருவாக்கப்படும்? மாவட்ட அளவில் மரங்கள் அட்டவணை எப்போது உருவாக்கப்படும்? என்பது பற்றி அரசின் கொள்கையில் எதுவும் இல்லை.
சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 25% அதிகமாக்குவோம் என 2023-ஆம் ஆண்டில் அறிவித்த முதலமைச்சர் அதற்காக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. நகர்ப்புற சதுப்புநிலங்கள் உள்ளிட்ட அனைத்து சதுப்புநிலங்களையும் சட்டப்படி அறிவிக்கை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றமே 2024 டிசம்பர் மாதம் உத்தரவிட்டும் இதுவரை ஒரு சதுப்புநிலத்தைக் கூட சட்டப்படி அறிவிக்கை செய்யவில்லை. இந்திய உயிரிப்பன்மய சட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் மக்கள் உயிரிப்பன்மை பதிவேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு நீதிமன்றத்தில் கூறியது. ஆனால், ஒரு நகரிலும் அத்தகைய பதிவேடுகள் இல்லை. இது போல நகர்ப்புற பசுமையை அதிகரிப்பது தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்கள், விதிகள், நீதிமன்ற உத்தரவுகளை செயலாக்குவதற்கான எந்த வழிகாட்டுதலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட புதிய கொள்கையில் இடம்பெறவே இல்லை.
எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் 2022ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. ஆனால், இதுவரை அப்பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் உள்ள வையாவூர் ஏரி &நத்தப்பேட்டை ஏரியில் குப்பை கொட்டுவதையும் கழிவுநீர் கலப்பதையும் முற்றிலுமாக தடுக்க வேண்டும்என பசுமை தீர்ப்பாயம் 23.11.2020-இல் உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை அந்த ஏரிகள் காப்பாற்றப்படவில்லை.
இவை எதையுமே செய்யாத திமுக அரசு, தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கையை மட்டும் ஏன் அறிவித்திருக்கிறது தெரியுமா? கடன் வாங்கி ஊழல் செய்வதற்காகத் தான். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதியுதவியாகவும் நீண்டகால கடனாகவும் பெருமளவு பசுமைநிதியை உலக வங்கி, மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் வழங்குகின்றன.
எடுத்துக்காட்டாக,
· சென்னை நகருக்கான The Chennai City Partnership Project (CCP) (சிசிறி) திட்டத்திற்காக உலக வங்கி மூலம் ரூ.- 2500 கோடி
· தமிழ்நாட்டின் 21 நகரங்களுக்கான Tamil Nadu Climate Resilient Urban Development Program திட்டத்திற்காக உலக வங்கி மூலம் ரூ.- 2500 கோடி
· Tamil Nadu Biodiversity Conservation and Greening Project (TBGP) திட்டத்திற்காக ஜப்பான் மூலம் ரூ. - 1800 கோடி நிதி தமிழகத்திற்கு கிடைக்கிறது. இதேபோல், இன்னும் பல திட்டங்கள் வரவுள்ளன. இந்த நிதியுதவிகவாங்குவதற்காகவும், அதில் ஊழல் செய்வதற்காகவும் தான் காலநிலை மாற்றம் சார்ந்த பசுமைத் திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது.
ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. இதற்கு மாற்றாக மாநிலப் பசுமைக் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக காத்திருக்கும் தமிழ்நாடு மரங்கள் சட்டத்தை நாளை மறுநாள் தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ##PMK2.0
![#PMK2.0 - கடன் வாங்கி ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிப்பதா ? மரங்கள் சட்டத்தை இயற்றதிமுக மறுப்பது 06? 15.2.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் dranbumaniramadoss] ddraramadoss AnbumaniRamadoss கடன் வாங்கி ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிப்பதா ? மரங்கள் சட்டத்தை இயற்றதிமுக மறுப்பது 06? 15.2.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் dranbumaniramadoss] ddraramadoss AnbumaniRamadoss - ShareChat #PMK2.0 - கடன் வாங்கி ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிப்பதா ? மரங்கள் சட்டத்தை இயற்றதிமுக மறுப்பது 06? 15.2.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் dranbumaniramadoss] ddraramadoss AnbumaniRamadoss கடன் வாங்கி ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிப்பதா ? மரங்கள் சட்டத்தை இயற்றதிமுக மறுப்பது 06? 15.2.26 மருத்துவர்அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் dranbumaniramadoss] ddraramadoss AnbumaniRamadoss - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_40218_23b9918c_1771210990185_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=185_sc.jpg)

