திருச்சிற்றம்பலம்!🙏
திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறை.
பதிக எண் 69.
திருப்பள்ளியின் முக்கூடல்.
பாடல் 3.
பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப் புரிசடை மேல் புனல்கரந்த புனிதன் தன்னை
வேதியனை வெண்காடு மேயான் தன்னை வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின் முக்கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
உரை:-
நீறு அணிந்தவனாய், பொன்மலை போல்வானாய், முறுக்கேறிய சடையின் கங்கையை மறைத்த தூயோனாய், வேதியனாய், வெண்காட்டில் உறைவானாய், வெண்மையான காளை வாகனனாய், தேவர்களுக்கு எல்லாம் முற்பட்டவனாய். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன்னுரிமை பூண்டவனாய், தலைவனாய், மை தீட்டிய கண்களை உடைய பார்வதி பாகனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
பாடல் 4.
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை மறிகடலுள் நஞ்சுண்டு வானோர் அச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச் சிறிதளவில் அவனுடலம் பொடியா வாங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
உரை:-
வார் - கச்சு.
வனம் (வண்ணம்) - அழகு.
யானையின் தோலைப் போர்த்தவனாய், முப்புரங்களும் சாம்பலாகுமாறு அம்பு எய்தவனாய், தூயனாய், கச்சணிந்த முலையை உடைய பார்வதிபாகனாய், அலைகள் கரையை அடைந்து மீண்டுவரும் கடலுள் தோன்றிய விடத்தை உண்டு, தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய், மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத்தோன்ற விழித்தவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
திருச்சிற்றம்பலம்!🙏 #🙏ஆன்மீகம்


